அன்னை பத்ரகாளியம்பாள்.

அன்னை பத்ரகாளியம்பாள்.

அன்னைபத்ர காளியம்பாள் ஆலயக்கொடி யேற்றம்
 அடியவர்கள் மனங்களிலே ஆனந்தக்குடி யேற்றம்
சின்னவர்கள் பெரியவர்கள் சேர்ந்துஒன்று கூடி
 தேரிழுக்கும் காட்சிகாணக் கண்கள்வேண்டும் கோடி

வீதியெங்கும் பக்தர்கூட்டம் வேண்டுதல்கள் செய்வார்
 விம்மியழுது கண்ணீர்சிந்தித் தாயினருளை வெல்வார்
ஓதியுணர்ந்த வேதியர்கள் மந்திரங்கள் சொல்வார்
 உள்ளமுருகி அடியவர்கள் அகந்தைதனைக் கொல்வார்.

அன்னைகொடி யேறிவிட்டால் அனைவர்உணவும் சைவம்
 அவள்தீர்த்தம் காணும்வரை மக்கள்மனதும் தெய்வம்
இன்னமுதாய் அன்னையருள் கோணைமண்ணிற் பெய்யும்
 அரகரஒம் சக்திஎன்ற ஓசைநெஞ்சைக் கொய்யும்

வீதிமண்ணை உடல்தழுவி ஆண்கள்வலம் வருவார்
 வேண்டுதல்கள் வெல்லுமென்று எண்ணிமனம் மகிழ்வார்
ஆதித்தாயை வேண்டிப்பெண்கள் அடியழித்துச் செல்வார்
 அனைத்துயிரும் நலம்பெறுக என்றேமனதிற் சொல்வார்

இளையர்கூட்டம் தாயினருளை இறைஞ்சிநிற்கும் காட்சி
 இந்தமண்ணில் சைவம்நிலைக்கும் என்பதற்குச் சாட்சி
தளையுடைத்துத் தடைதகர்த்துச் சைவத்தமிழ் வெல்லும்
 தமிழர்நிலமும் நெறியுமென்றும் உயர்வழியிற் செல்லும்.
                         
                                                   கந்தவனம் கோணேஸ்வரன்
                                                   11.03.2019
(இன்று திருக்கோணமலை பத்ரகாளியம்பாள் கொடியேற்றம்)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5