சந்நிதி வேலன்.

சந்நிதி வேலன்.

ஆலிலையில் அமுதருந்தி பூவரசிற் குடிபுகுந்து
 அன்பர்மனங் களிலுறைவான் சந்நிதி வேலன்
நீலமயில் ஏறிவந்து சேவற்கொடி ஏந்திநின்று
 நெஞ்சமெலாம் நிறைந்திருப்பான் சந்நிதி வேலன்
சீலமுறு அடியவர்முன் சிறுகுழந்தை யாகவந்து
 சிரிக்கவைத்துக் களித்திருப்பான் சந்நிதி வேலன்
கோலவள்ளி யானையுடன் கோமகனாய்க் காட்சிதந்து
 குளிர்நிலவாய்ச் சிரித்திருப்பான் சந்நிதி வேலன்.


ஆற்றங்கரை யானென்பர் அப்பன்முருகன் துணையென்பர்
 அழைத்தபோது அருகில்வந்து நிற்பவன் இவனென்பர்
சீற்றங்கொண்டு சூரன்வதை செய்தவனும் இவனென்பர்
 சுந்தரமாய்த் தமிழ்கேட்டுக் குழைபவனும் இவனென்பர்
ஆற்றுப்படை அருணகிரிக்கு அளித்தவனும் இவனென்பர்
 அன்னதானக் கந்தன்என ஆனவனும் இவனென்பர்
தோற்றம்முடிவு இல்லாத சோதியனும் இவனென்பர்
 தொண்டைமா னாற்றுச்செல்வச் சந்நிதியின் வேலனென்பர்.


வடபுலத்தில் வேலெடுப்பான் தென்புலத்;தே வலம்வருவான்
 வரும்வழியில் வில்லூன்றிப் பதிதனிலே யமர்வான்
நடைபயிலும் பக்தரொடு வெருகலாற்றில் இணைந்திருப்பான்
 நல்லதமிழ்ச் சிறுவனென வழித்துணையாய் நடப்பான்
தடைகள்வரின் தகர்த்தெறிவான் உகந்தையிலே அருள்சுரப்பான்
 தென்னகரில் கதிரமலைக் கந்தனென நிமிர்வான்
மடைதிறந்த வெள்ளமென வருமடியார் குறைதீர்த்து
 மனமுவந்த வேலவனாய்ச் சந்நிதியில் அமர்ந்தான்.


                                கந்தவனம் கோணேஸ்வரன்.
                                தை.2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5