இலக்கியத்துளி –3

இலக்கியத்துளி –3

ஒளவையார் ஒரு சிறந்த புலவர். பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று அண்மைக் காலம்வரை பேசிவந்த உலகுக்குப் பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே பெண்களின் கல்வித்திறனுக்குச் சான்றாக நின்று பதிலளித்தவர். ஆண் புலவர்களே கண்டு அஞ்சும் கவிவல்லமை படைத்தவர்.


இத்தகைய சிறப்புவாய்ந்த ஒளவையார் வேழமுகன் விநாயகனுடன் ஒரு பாடலாற் பேரம் பேசுகிறார். “நான் நான்கு பொருள்களை உனக்குத் தருகிறேன்: நீ எனக்கு மூன்று பொருள்களைத் தா.” என்று பட்டென்று கேட்கிறார். இன்றைய மொழியிற் சொல்வதானால் பிள்ளையாருக்குக் கையூட்டு கொடுத்துக் காரியம் சாதிக்க முயல்கிறாh எனலாம்.


பால், தெளி(ந்த)தேன், (இன்)பாகு,  (சுவையான)பருப்பு ஆகிய நான்கு உணவு வகைகளையும் ஒன்றாகக் கலந்து சுவைபட நான் உனக்குத் தருகிறேன்: எனக்கு சங்கம் வளர்த்த -இயல், இசை, நாடகம் - ஆகிய மூன்று தமிழையும் தந்துவிடு என்பதே அந்தப்பாடல்.


பெரும்புலவர் ஒருவர் நான்கு பொருள்களைக் கையூட்டாகக் கொடுத்து மூன்று பொருள்களை இறைவனிடம் பெற முயல்வது சரியா என்ற கேள்வி இங்கு எழுகிறது. அது பிழையான முன்னுதாரணமாகி விடாதா என்ற அச்சமும் சேர்ந்தே தோன்றுகிறது.


இது சரியா பிழையா என ஆராயுமுன்னர் அவரின் இயல்பைப் புரிந்து கொள்ளவேண்டும். ஒளவையார் சிவமதத்தைச் சேர்ந்தவர். விநாயகனையும் முருகனையும் தன் பிள்ளைகள்போல் காண்பவர்.  பரம்பொருளின் வடிவங்களே அவர்கள் என்பதையும் மறவாதவர்.


சைவ சித்தாந்தத்தின்படி நாம் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்பொறிகள் மூலம் பெறுகின்ற அனுபவங்களை முறையே தொடுகை, சுவை, ஒளி, நாற்றம், ஓசை எனப்படும் புலன்களாக உணர்கிறோம். இவற்றுள் ஒரு பொறி பழுதானாலும் அதனாற் கிடைக்கின்ற புலனை  இழந்து விடுவோம்.


ஐவகைப் புலன்களின் உதவியுடன் பெறுகின்ற ஐவகை அனுபவங்களே நமது வாழ்க்கையாகிறது. இந்த வாழ்வின்போது நாம் பெற்ற அனுபவங்களாற் கிடைக்கின்ற பேறுகளே மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பவை. இந்த நான்கையும் சிவசித்தாந்தம் அந்தக்கரணங்கள் என்கிறது.


குழந்தைக்கு மனம் இருப்பதில்லை. தாயின் முகம் பார்ப்பதால் ஏற்படும் முதற்பதிவே குழந்தைக்கு மனம் தோன்றக் காரணமாகிறது. அது பால் என்ற நிலை. பல அனுபவங்களால் மனம் வளரும்போது புத்தி தோன்றுகிறது. இது மனதைவிடச் சற்று இறுக்கமான திரவநிலை. இது தெளிதேன் நிலை. அதாவது பால்போன்று மனதிருக்க, அதிலிருந்து தெளிதேன் போன்று புத்தி தோன்றுகிறது.


புத்தி தோன்றியதும் ஓருயிர் நல்லது கெட்டதை அனுசரித்து முடிவு எடுக்கும் வல்லமையைப் பெறுகிறது. இந்த நிலையைப் பாகு என்கிறார் ஒளவையார். பாலைவிடத் தெளிதேன் இறுக்கமானது: தெளிதேனைவிடப் பாகு இறுக்கம் கூடியது. திரவமோ திண்மமோ எனக் கூறமுடியா நிலை. மனதில் தோன்றும் இந்நிலையைச் சித்தம் என்று அடையாளமிடுகிறது சித்தாந்தம்.


மனதின் வளர்ச்சியால் புத்தி தோன்ற, புத்தி முதிர்ச்சியால் சித்தம்  தோன்றுகிறது. இவை மூன்றும் ஒருங்கிணைந்து வல்லமை பெறும்போது மனிதனுக்கு அகங்காரம் வந்து விடுகிறது. தன்னால் ஆகாதது எதுவுமில்லை என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. அதுதான் பருப்பு என்கின்ற கடினநிலை.


ஒரு மனிதனின் சமூகநிலை, செயற்பாட்டுத்திறன், சாதனைத்தன்மை போன்ற புறவுலக மகிழ்ச்சிகளுக்குக் காரணமானவை அந்தக்கரணங்கள் எனச் சொல்லப்படுகின்ற மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய நான்கும்தாம்.
ஒளவையார் விநாயகரிடம் சென்று, “அப்பனே, நீ எனக்கு அருளிய அந்தக்கரணங்களான பால் (மனம்), தெளிதேன் (புத்தி), பாகு (சித்தம்), பருப்பு (அகங்காரம்) ஆகிய நான்கையும் ஒன்றாகக் கலந்து உனக்குத் தந்து விடுகிறேன். அவற்றோடு பட்டபாடு போதும். நான் உன்புகழ்பாடி உய்வதற்கு  இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழையும் எனக்குத் தருவாயாக.” ஏன்று இறைஞ்சுகிறார்.


பாடலைப் பார்ப்போம்


பாலுந் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலுங் கலந்துனக்கு நான்தருவேன் -- கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீயெனக்குச்
சுங்கத் தமிழ்மூன்றுந் தா.


ஓளவையாரின் பார்வையில், இனிய எண்ணங்களைச் சுமக்கும் மனம், நல்லவை கெட்டவற்றைத் தேர்ந்தெடுக்கவல்ல புத்தி, தானாக முடிவுசெய்கின்ற அதிகாரம் என்கிற சித்தம், இவற்றாற் கிடைக்கின்ற பெருமிதமும் ஆளுமையும் கொண்ட அகங்காரம் ஆகிய நான்கையும்விடச் சங்கத்தமிழ்ப் புலமை அவருக்கு மேலானதாகத் தெரிகிறது. தமிழறிவைப் பெறலாமென்றால் உலகப் பற்றனைத்தையும் துறந்து விடத் தயங்காத கிழவியின் துணிச்சலை என்னென்பது?


“சங்கத்தமிழ் மூன்று என்பதை சத் - உண்மை, சித் - அறிவு, ஆனந்தம் - உண்மையை  (மெய்ப்பொருளை) அறிவதால் கிடைக்கின்ற மகிழ்நிலை எனச் சித்தாந்த அறிஞர் பொருள் கொள்வதுமுண்டு. அக்கருத்துப்படி சங்கத்தமிழ் மூன்றும் சத், சித், ஆனந்தம் போன்று நிலையான முப்பொருள் என்றாகி விடுகிறது. இதுகூடத் தமிழுக்குப் பெருமை சேர்க்கும் அம்சம்தான்.


இதனாற்றானோ என்னவோ, “ஒளவைக் கிழவி நம் கிழவி, அமிழ்தின் இனிய சொற்கிழவி” என்று இன்றும் தமிழுலகம் அவரைக் கொண்டாடுகிறது.


     
                             கந்தவனம் கோணேஸ்வரன்.
                             24.03.2019


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5