எங்கள் வல்வெட்டித்துறை

எங்கள் வல்வெட்டித்துறை

மாவலியாள் தென்புறத்தே வளம்பெருக்கும் நாடு
 மாவேந்தன் சங்கிலியன் மறம்வளர்த்த நாடு
நாவேந்தர் தமிழாலே நலம்நிறைந்த நாடு
 நல்லதமிழ்க் கவிஞர்குழாம் வாழ்ந்திருந்த நாடு
காவோடு கழனிகளும் கடலும்சேர் நாடு
 கலைவளர்த்துத் தொழில்வளர்த்துக் கவின்சிறந்த நாடு
தேவாரப் பண்கேட்டுச் செங்கதிரோன் உதிக்கும்
 தெய்வத்திரு மாந்தர்வாழ் வல்வைத்துறை நாடு

பாய்மரத்தால் பாரெங்கும் பவனிவந்தோர் நாடு
 பலநாட்டு வாணிபங்கள் செய்ததமிழ் நாடு
ஓய்வவென்ப தறியாத உழைப்பாளர் நாடு
 உயிர்போல மொழிகாத்து உயர்ந்தஈழ நாடு
சேய்வேலன் சந்நிதியைத் தேர்ந்துறைந்த நாடு
 திருவோங்கு கந்தவனக் கோயில்கண்ட நாடு
தாய்போல முத்துமாரி தந்தைசிவ னாருடனே
 தனயன்கண பதிசகிதம் அமர்ந்தவல்வை நாடு

கடலாடி வருமிளைஞர் கவின்தோள்கள் தினவெடுக்கும்
 கயலாடும் விழிமாதர் காதல்மொழி யதைத்தகர்க்கும்
திடமான கொள்கையுடன் களமாடும் காளைகளின்
 செயற்றிறனாற் செந்தமிழ்த்தாய் சீர்மையிங்கு செழித்திருக்கும்
தடம்மாறாச் சிவநெறியில் தமிழ்ச்சான்றோர் வாழ்வதனால்
 தமிழோடு சிவநெறியும் தலைநிமிர்ந்து ஓங்கிநிற்கும்
இடமான வல்வெட்டித் துறையென்னும் வளநகரம்
 இவ்வுலகில் ஒளிநகராய்த் தமிழன்சிறப் பேந்திநிற்கும்.
                       
                                         கந்தவனம் கோணேஸ்வரன்
                                         ஆடி 2018

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5