எங்கள் திருக்கோணமலை. -- 7

எங்கள் திருக்கோணமலை. -- 7

அதிகாலை குருவியினம் ஆர்ப்பரித்துப் பறக்கும்
 அமைந்ததொரு வயல்கண்டு அவைபாடிக் களிக்கும்
மதியாளர் முயற்சிகளால் மண்ணின்வளம் பெருகும்
 மண்டிநிற்கும் தேனருந்தி மந்தியினம் மகிழும்
துதிபாடும் அந்தணரால் தூயசைவம் வளரும்
 தீநெறியார் செய்கையெலாம் வலிகுன்றி மறையும்
பதியாளும் கூனித்தீவுப் பத்ரகாளி அருளால்
 பண்பான மக்கள்நலம் பெருகிவரும் திருவாய்.

ஆடிவரும் மாவலியாள் அடங்கிமறை கின்றநிலம்
 அருளாளர் வழிநின்று அறங்காக்கும் தமிழர்நிலம்
தேடிவந்து அகத்தியனார் அமர்ந்துதமிழ் ஆய்ந்தநிலம்
 தெருவெங்கும் தமிழர்கலை பெருகிநிற்கும் அழகுநிலம்
கோடிநலம் வருமெனினும் கொள்கைமாறாத் தூயர்நிலம்
 கொட்டியா புரமென்று பெயர்வாய்ந்த வீரர்நிலம்
ஓடிவந்த மக்களுக்கு உணவளித்த வள்ளல்நிலம்
 ஒருதமிழன் வாழும்வரை ஓயமாட்டோம் என்றநிலம்.

தென்புலத்தில் அமர்ந்திருப்பான் வெருகலம்பதி வேலன்
 தென்கயிலைக் கோணேசர் மாதுமையாள் பாலன்
வன்பகையை எதிர்த்தெழுவாள் சம்பூர்க்காளித் தாயார்
 வருபகையைத் துடைத்தெறிவான் மூதூர்வேழ வதனன்
இன்பதியாய் இலங்குகின்ற முத்தூர்தமிழர் சொத்து
 இலங்குதுறை முகத்துவாரம் எங்கள்முன்னோர் வித்து
அன்புடைமை அருளுடைமை அறிவுடைமை மிகுந்து
 அழகுதமிழ்ச் சமுதாயம் நிலைக்குமிங்கு சிறந்து.
     
                கந்தவனம் கோணேஸ்வரன்.
                10.01.2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5