எங்கள் திருக்கோணமலை -- 5



அலையோடிக் கரைமேவி ஆர்ப்பரித்து மகிழும்
  ஆங்கூரும் வெண்சங்கு தடம்மாறிக் கவிழும்
சிலைமாதர் விழிகண்டு மீனினங்கள் மயங்கும்
  செங்கதிரின் வரவுகண்டு தூங்குபனி தயங்கும்
கலைபூக்கும் கவின்சேர்க்கும் கல்வி உயரும்
  கன்னித்தமிழ்க் கவிதையிங்கு ஆறாய்ப் பெருகும்
நிலையான தருமநெறி நீடு வாழும்
  நெடுந்தவத் தோர்களுரை எம்மை யாளும்.

வான்முட்டும் கோபுரங்கள் வண்ணங் கண்டு
  வணங்காத கரங்கள்கூட வணங்கிச் செல்லும்
தேன்சொட்டும் பூக்காடு வாசம் பெருக்கும்
  தேனருந்தி வண்டுவழி மாறிப் பறக்கும்
ஆன்மநெறிச் சிந்தனைகள் மலிந்து ஓங்கும்
  அருளாளர் விழிச்சுனையில் அன்பு பொங்கும்
மான்மந்தி பயமின்றி மகிழ்ந்தே பாயும்
  மறத்தமிழர் வாழ்முறையில் தீமை சாயும்.

எல்லோரும் இன்புற்றே இருப்ப தென்ற
  இசைவான கொள்கையிங்கு தழைத்த தாலே
வல்லோர்கள் நல்லோராய் வாய்த்து நல்ல
  வழிமுறையில் பண்பாடு காப்ப தாலே
எல்லோர்க்கும் அருள்சுரக்கும் கோணை நாதர்
  எங்கள்மண் குன்றுதேர்ந்து உறைந்த தாலே
சொல்லரிய பேறுபெற்ற தெய்வ பூமி
  திருக்கோண மலையெங்கள் சொர்க்க பூமி.

                    கந்தவனம் கோணேஸ்வரன்.
                     ஏப்ரல் 2018

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5