எங்கள் திருக்கோணமலை 4

அந்தணர்தம் கைம்மலர்கள் அதிகாலை குவியும்
 அம்புயங்கள் ஆதவனின்  வரவுகண்டு மகிழும்
செந்தமிழர் தேவாரம் தேனெனவே ஒலிக்கும்
 தெருவெங்கும் பூங்காற்று வாசமள்ளிக் குவிக்கும்
பந்தெனவே துள்ளிச்சிறார் பாடசாலை செல்லும்
 பாங்குகண்டு பெற்றோர்கள் மனமகிழ்விற் துள்ளும்
நந்தமிழர் நலங்காக்க அருள்சுரக்கும் முருகன்
 நயந்துறையும் திருக்கோண மலையெங்கள் பூமி.

அலைவீசும் ஒலியாலே ஆனதமிழ் ஓன்று
 அன்பாளர் நாவாலே ஆண்டதமிழ் ஒன்று
நிலையான ஏரேற்றி நிமிர்ந்ததமிழ் ஒன்று
 நெறிபோற்றும் அறிஞரிதழ் நயந்ததமிழ் ஒன்று
கலையாளர் திறனூடே கனிந்ததமிழ் ஒன்று
 கயவர்தமை வேரறுக்க எழுந்ததமிழ் ஒன்று
விலகாத வள்ளிதெய்வ யானையுட னமர்ந்து
 வினையறுக்கும் அறுமுகனாய்ப் பெருகிநின்ற தின்று

அருள்முத்துக் குமரனவன் அருகிருக்கக் கண்டு
 அடியவர்கள் மனம்நிறையும் நாளும்எழில் கொண்டு
திருவளரும் தொழில்வளரும் சிறந்தபண் பாடொடு
 சிவநெறியுந் தான்வளரும் இனியதமிழ்ப் பாவொடு
வருபகையை வதைத்தோட்டும் வண்டமிழர் திறனால்
 வளர்தமிழர் வாழ்விங்கே சிறந்தோங்கு வதனால்
ஒருபயமும் எமக்கில்லை எனவிங்கு வாழும்
 உயர்தமிழர் பண்பொன்றே இம்மண்ணை யாளும்.

                     கந்தவனம் கோணேஸ்வரன்.
                     சித்திரை 2001.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5