எங்கள் திருக்கோணமலை 1


கதிவனின் வரவுகண்டு கமலம்முகம் மலரும்
  காக்கைகளும் குருவிகளும் குரலெடுத்துப் பழகும்
புதியவகை அரும்பெனவே பூசுரர்கை குவியும்
  பூமாலை சார்த்தியிறை வழிபாடு தொடங்கும்
நதியெனவே சோர்கூந்தல் நங்கையரைப் போற்றும்
  நற்கவிஞர் கற்பனைக்குப் புதுமெருகு ஊட்டும்
மதிகொண்டு விதிவெல்லும் உத்திகளும் பெருகும்
  மாதுமையாள் கோணேசர் மண்ணிலறம் வளரும்.

செந்தமிழும் சிவநெறியும் தழைத்தினிதே ஓங்கும்
  தேவாரப் பண்ணேந்திக் காற்றின்மணம் துலங்கும்
வந்தவர்க்கு விருந்திட்டு வரவேற்று மகிழும்
  வாயார வாழ்த்தியவர் வாழ்நிலைக்கும் உதவும்
நொந்தவர்கள் இங்கெவரும் இல்லையெனப் பகரும்
  நுவலரிய தமிழர்தம் பண்பாடு உயரும்
எங்கள்திருக் கோணேசர் எழிலாக அமரும்
  இந்தமண் கோலேந்தும் நாள்கடிதிற் புலரும்.

மான்விழியார் அசைவினிலே காளைமனம் மகிழும்
  மாமலையும் அவர்முன்னால் சிறுகடுகாய்த் திகழும்
மீன்சொரியும் கடலலையும் அன்புமொழி பேசும்
  மேவிவரும் தென்றல்காதல் நெஞ்சினிக்க வீசும்
தேன்தமிழிற் புனைகவிகள் தமிழர்திறன் காட்டும்
  தேவலோகம் எனமயங்கும் வகையிலமு தூட்டும்
வான்புகழும் கோணேசர் வழங்குபே ரருளால்
  வாழுந்திருக் கோணமலை மேவிநிற்கும் புகழால்.

                       கந்தவனம் கோணேஸ்வரன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5