கல்வெட்டு- அமரர் சரவணமுத்து சிவபாதம்.
வெளிப்புற முன்னட்டை
தெய்வப்படம்
திருக்கோணமலை 107, மத்திய வீதியைப் பிறப்பிடமாகவும்
வசிப்பிடமாகவும் கொண்டு மறைந்த
அமரர் சரவணமுத்து
சிவபாதம் அவர்கள்
பெயரில்
யாக்கப்பட்ட
அந்தியேட்டி தினமலர்.
செப்டெம்பர் 20. 2018 வியாழக்கிழமை.
விளம்பியாண்டு புரட்டாதித்திங்கள் நான்காம் நாள்.
தோற்றம் மறைவு
07
21
10 08
1938 2018
அமரரின் படம்.
திருக்கோணமலையைச் சேர்ந்த
அமரர்.சரவணமுத்து
சிவபாதம் அவர்கள்.
மறைவுதினப் பா.
சீர்நிறை விளம்பியாண்டு சிறப்பமிகு ஆவணியில்
பார்புகழும் வளர்பிறை நவமியதே – சீர்பெருகும்
சரவணமுத்து சிவபாத னாரிவ் வுடம்புகுத்து
அரனடிசேர் நாளென் றியம்பு.
துணைவிழைப் பா.
நீறணிந்த இராவணனார்
நிமலன்பதம்
சிரமேந்தும்
பேறுபெற்று இசைபொழிந்த பூமியிது – அவர்
ஏறுபோல ஆட்சிசெய்து
ஏழுவெந்நீர்ச்
சுனையமைத்து
வீறுகொண்ட சைவம்காத்த புனிதமிது.
கோணைநாதர் குன்றமர்ந்து
கோலவுமை யாளுடனே
ஆணையிட்டு அறம்வளர்க்கும் பூமியிது – அவர்
வீணைக்கொடி வேந்தன்புகழ்
வையமெங்கும்
நிலைத்திருக்க
ஞானசம்பந் தனைப்பணித்த இல்லமிது.
வீசுதென்றல் தமிழிசைக்க
விளங்குசைவப்
புகழ்சிறக்க
தேசுநிறை திருக்கோணைச் செல்வமிது
நீசர்பலம் போயொழிய
நலம்புரிவோர்
நிமிர்ந்துநிற்க
பேசுவர லாற்றுமண்ணின் பெருமையிது.
நீடுபுகழ் கொண்டதாலே
நெஞ்சுரத்துத்
தமிழர்க்கெலாம்
ஆடுகள மானதிந்தக் கோட்டம்
தேடிக்குடி யமர்பவர்க்குச்
செல்வமெலாம்
அள்ளித்தந்து
கூடிக் களிக்கும்தமிழ்த் தோட்டம்.
ஒரு மலரின் பயணம் நிறைவுறுகிறது…..
உலகம் ஒரு பூந்தோட்டம்.
அதன் சொந்தக்காரன்
இறைவன்.
அவன் உரமிடுகிறான்: செடி
வைக்கிறான்: விருப்பமான வகையில் பூக்களையும் மலரச் செய்கிறான்.
சில மலர்கள்
மணந்தருகின்றன: சில மலர்கள் அழகைச் சொரிகின்றன.
சில மலர்களோ அழகுடன்
மணத்தையும் உமிழ்கின்றன: அது இறைவனின் விருப்பம்.
எதுவாயினும் மலர்களின்
ஆயுட்காலம் ஏறத்தாழ ஒருநாள் தானே!
ஒருநாள் என்று
வருத்தப்படுவதும், இருபத்துநான்கு
மணித்துளிகள் என்று பூரித்துப் போவதும், ஆயிரத்துச் சொச்சம் மணித்துளிகள் என்ற அலுத்துக் கொள்வதும்
மலர்களின் உரிமை.
தோட்டக்காரன்
விரும்பும்போது மலர்களைப் பறித்து விடலாம் யாரும் மறுத்துப் பேசமுடியாது. அதுதானே
நியதி…?
அரும்பு தெரிந்தவுடன்
அடுத்துள்ள பூக்கள் ஆரவாரத்துடன் குதூகலிக்கின்றன: புதிய அரும்பு தாங்கள்
பூத்திருக்கும் மரத்திலேயே தோன்றியதால் அது தங்கள் உறவென்று உள்ளம் பூரித்துப்
போகின்றன. தம் வம்சத்தின் வளர்பிறை எனக் கொண்டாடுகின்றன.
அதனைப் பாதுகாக்கின்றன:
சீராட்டுகின்றன: தாலாட்டுகின்றன: பெயர்கூடச் சூட்டுகின்றன: விழாக்கள் வைத்துப்
பூரித்துப் போகின்றன.
எனினும் தோட்டத்தின்
எந்தப் பூவும் எந்த நேரத்திலும் வீழ்ந்து போகலாம்: காற்றடித்துக் கரைந்தும்
போகலாம்: வண்டு ஊதி வதங்கியும் போகலாம்.
இறைவன் பறித்துக்
கொள்ளும் மலர்கள் அதிஷ்டமானவை. அவன் விரும்பியல்லவா அவற்றைப் பறித்துக் கொள்கிறான்? அழகில் - மணத்தில் - மயங்கியல்லவா தன்வயம்
ஈர்த்துக் கொள்கிறான்?
அந்த ஈர்ப்பு இரண்டொரு
மணித்துளிகளிலேயும் நிகழலாம்: இருபது
மணிநேரம் ஆனபின்னும் நேரலாம்.
இளமை என்பதும், நடுத்தரம் என்பதும், முதுமை என்பதும்
மணித்துளிகளின் கணக்குத்தானே!
விருப்பு வெறுப்பு அற்ற
இறைவனே விரும்பியேற்கும் பூக்களின் அதிஷ்டத்தை என்னவென்பது?
இறைவன் திருப்பாதங்களை
அடைந்த பூக்கள் மீண்டும் செடிகளில் வடிவம் எடுக்கப் போவதில்லை.
இதைத்தான் இந்துமதம்
சொல்கிறது: இறப்பின் பின்னர் எல்லா உயிர்களுக்கும் சொர்க்கமோ நரகமோ இருக்கத்தான்
போகின்றன: ஆனால் சில உயிர்களுக்கே இறைவனின் திருவடி நிழல் கிடைக்கிறது. இதைத்தான்
முத்தி என்கிறது.
சொர்க்கத்துக்கோ
நரகத்துக்கோ செல்கின்ற மலர்கள் மீண்டும் வடிவமெடுக்கின்றன. வினைப்பயன் தீர்ந்ததும்
திரும்பிவர வேண்டிய நிலை அவற்றுக்கு.
பிராப்தத்துடன் அவை
உலகுக்கே வருகின்றன. இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்க வேண்டிய வினைகளின் கூட்டே
பிராப்தம். நல்லவர், தீயவர், ஏழை, பணக்காரன், ஆரோக்கியம், உடனலக் கோளாறு
என்பவையெல்லாம் பிராப்தம் தருகின்ற பலன்களே. வசதியான வாழ்க்கை பெறுவதும் வறுமையில்
வாடிஉழல்வதும் பிராப்தம் தந்த பரிசுகளே.
சஞ்சித வினைகளையும் அவை
ஒருபுறம் சுமந்து கொண்டு தானிருக்கின்றன. நாம் முற்பிறப்பிற் சேர்த்துவைத்த
வினைப்பயன்களில், இப்பிறப்பு அனுபவத்துக்கென ஒதுக்கப்பட்ட
பிராப்த வினைகள் போக எஞ்சியிருப்பவையே அவை. சஞ்சித வினைகள் அதிகமாக இருப்பின்
இனிவரும் பிறவிகளும் அதிகமாகும் என்பது பொருள். குறைவாக இருப்பின் பிறவிகள்
குறைகின்றன என்பது அர்த்தம்.
இப்பிறப்பில் நாம்
தேடிக்கொள்ளும் புதிய வினைப்பயன்களை ஆகாமியம் என்கிறோம். பிறவிகள் தொடர்வதிலும்
குறைவதிலும் ஆகாமியத்துக்கும் பெரும்
பங்குண்டு.
ஓருயிருக்கு, இறைவன் தனு, கரண, புவன போகங்களைக் கொடுப்பதன் காரணம், மலங்கள்
நீங்கி அது புனிதத் தன்மை பெறவேண்டும்
என்பதற்காகத்தான். மல நீக்கத்தின் மூலம் சஞ்சித, பிராப்த, ஆகாமிய வினைகளை அறுத்து இருவினையொப்பு
பெறவேண்டும் என்பதற்காகத்தான்.
தனு என்பது உடல்: கரணம்
என்பது உடலால் உலகுடன் தொடர்பை ஏற்படுத்தக்கூடிய பொறிகளும், புலன்களும்:
புவனம் என்பது உலகம் முதலான பிரபஞ்சம்: போகம் என்பது உயிர்கள் தனு, கரண
புவனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் பெற்றுக் கொள்கின்ற அனுபவம்.
இவற்றைச் சரியாகப்
பயன்படுத்துவதன் மூலம்தான் உயிர்கள் உச்சநிலையை அடைகின்றன. மலங்களை முற்றாகக்
களையும் இருவினையொப்பு நிலையைத் தொடுகின்றன.
இருவினையொப்பு என்பது
நன்மை தீமைக்கும், பாவங்களுக்கும் புண்ணியங்களுக்கும் வித்தியாசம்
உணராத நிலை. இறைவன் ஆட்டுவிக்கிறான் நான் ஆடுகிறேன் என்ற மனோபாவம். என் செயல்
யாதொன்றும் இல்லை: எல்லாம் அவன் செயலே என்ற பக்குவம்.
இந்தப் பக்குவம் இலகுவில்
அமைந்துவிட மாட்டாது. ‘நான்’ என்ற அகங்காரம்
அவ்வளவு எளிதில் அற்றுப் போய்விடாது.
‘நான்’ என்ற ஆணவம் வினைகளைத் தூண்டுகின்றன: வினைகள் ஆணவத்துக்கு
உரமிடுகின்றன: மாயையில் மயங்க வைக்கின்றன. இப்படித்தான் உயிர்கள் தளைகளில்
சிக்கிக் கொள்கின்றன.
உலகப் போகங்கள்
நிரந்தரமானவையல்ல: நமது வாழ்க்கை எந்நேரமும் அற்றுப் போகலாம் என்பதை உணர்ந்தாலே
மும்மலங்களில் ஒன்றான மாயையிலிருந்து விடுபடுவதற்கான வழி திறந்து விட்டது என்பது
பொருள்.
உலக நிலையாமையைப்
புரிந்துகொண்டால், வாழ்வுதாழ்வு, இன்பத்தில்மயக்கம், துன்பத்தில்
கலக்கம் என்பன அற்றுப் போகும். அடுத்த தளையான கன்மத்தின் வலிமையும் குறையத்
தொடங்கும்.
உலக இன்பங்கள்
நிரந்தரமற்றவை என்ற உணர்வு இப்பிறப்பின் கன்மவினைகளான ஆகாமியத்தை அழித்துவிட நான்
என்ற அகங்காரமும் மெல்லமெல்ல விலகத் தொடங்கும். அந்த அகங்காரம்தான் ஆணவமலம்
எனப்படுகிறது. ஆணவமும் வலிமை குறைந்துவிட்டால் அதுதான் உயிர்களின் ஈடேற்றத்துக்கான
அத்திபாரம்.
ஆணவத்தை அழித்த உயிர்கள்
மீண்டும் பிறப்பதில்லை. இறைவனுடன் இரண்டறக் கலந்து விடுகின்றன. இக்கலப்பு
சொர்க்கமன்று. சொர்க்கத்துக்கு வழிகாட்டுவது சைவசமயத்தின் நோக்கமுமன்று.
தன்னிலைமை மன்னுயிர்கள்
சாரத்தருஞ் சக்தியான எம்பிரான் தன்னோடு உயிர்களை அணைத்துக் கொள்கின்ற உன்னத நிலை
அது.
அந்தநிலையை அடைவதற்கு ஒரு
பக்குவம் வேண்டும். அது எல்லோருக்கும் வாய்த்து விடுவதில்லை.
அப்படிப் பக்குவம் பெற்ற
புனித ஆன்மாக்களில் ஒன்றுதான் சரவணமுத்து சிவபாதம்.
இவரது வருகை 7.10.1938 இல் தமிழர்
பழம்பதியாம் தென்கயிலைத் திருப்பதியாம் திருக்கோணமலையில்
நிகழ்ந்தது.
வாழ்வாங்கு
வாழ்ந்து வளம்பல பெருக்கிநின்ற சரவணமுத்து – தெய்வானைப்பிள்ளை இவரது பெற்றோர்.
சிவனின்
திருப்பாதங்களை மனத்திருத்திப் பெற்றோர் இவருக்கு இட்டபெயர் சிவபாதம்.
இரண்டாவது
மகவெனப் பிறந்த சிவபாதனாருக்கு முன்னவராக அண்ணன் பாக்கியராசா: பின்னவர்களாகத்
குடும்பம் தழைக்கவந்த தம்பியர் இருவர்:
மயில்வாகனம், சண்முகராசா.
தங்கையர்மூவர்:
புவனேஸ்வரி, ஜெகதீஸ்வரி, ராஜேஸ்வரி.
ஏழு ஸ்வரங்களெனக் குழந்தைகள்.
ஏழ்மையிலும் சீர்மை
நிறைந்த வாழ்க்கை.
அன்புக்குக் குறைச்சல்
இல்லை: ஆதரவுக்குப் பஞ்சமில்லை: அன்புமழை பொழிந்தனர் பெற்றோர்கள்: அதில் நனைந்து
திக்குமுக்காடினர் குழந்தைகள்.
சின்னஅண்ணாவுக்கும் பொறுப்பு உண்டல்லவா? அதனை
நன்குணர்ந்தவர் சிவபாதனார்.
பிஞ்சுவயதிலேயே அஞ்சா
நெஞ்சினரானார். தீமைகளைத் துணிந்தெதிர்க்கும் சித்தத்தைப் பெற்றார்.
தந்தையின் வழிகாட்டலும்
தாயாரின் அன்பூட்டலும் உடன்பிறப்புகளின் உற்சாகமும் அவரை வளப்படுத்தின.
அன்றைய பெருந்தெரு
மெதடிஸ்தமிசன் தமிழ்க்கலவன் பாடசாலை கல்வியை அளித்தது: இன்று அது திருக்கோணமலை விக்நேஸ்வரா மகா
வித்தியாலயமாக நிமிர்ந்து நிற்கிறது.
அன்பு, நேர்மை, அறிவு, தெளிவு என்பவற்றின் உறைவிடமானார் சிவபாதனார்.
பெற்றோரைப் பணிந்து, பெரியோரை மதித்து, அண்ணாசொற் கேட்டு, உற்றார் உறவினரை அணைத்து வாழுகின்ற பண்புடை
இளைஞரானார் அவர்.
பெற்றோர் பெண்
பார்த்தனர்: திருக்கோணமலையில் சிறப்புடன் வாழ்ந்திருந்த நடராசா நல்லம்மா
தம்பதியின் மூத்தமகள் பவளகாந்தி என்பாரைப் பொருத்தமானவரெனக் கண்டனர்.
பெரியோர் கூடினர்: கலந்து
பேசினர்: ஊரார் சாட்சியிருக்கச் சிறப்பான திருமணத்தை நடத்தி வைத்தனர்.
தாய்தந்தையர், உறவினர், நண்பர்கள், உடன்பிறப்புகளென
வட்டமடித்த சிவபாதனாருக்குத் திருமணத்தின் பேறாகப் புதிய சொந்தங்கள் வாய்த்தன.
தெய்வேந்திரம், ராமச்சந்திரன், ரவீந்திரன் ஆகிய
மைத்துனர்களும், கமலவேணி, வசந்தி ஆகிய
மைத்துனியரும் அக்காவின் கணவரை வளையவந்து மகிழ்ந்தனர்.
அருமைப் பெற்றோர், அன்புடைச் சகோதரர்கள் எனக் களித்திருந்த
சிவபாதனாருக்கு, இனிய மாமன் மாமி இதமான மைத்துனர்கள், அவர்கள்வழிச்
சொந்தங்கள் என உலகமே உன்னதமாயிற்று.
இந்த ஆனந்தத்திலும் இனிய
இல்லறத்திலும் பூத்த மலர்கள் நான்கு.
கோகிலராஜன், சதீஸ்குமார், யசோதா, ஜெயச்சந்திரன்….அவற்றின்
பெயர்கள்.
தன்பெற்றோர், தன்மனையின் பெற்றோர், தன் உடன்பிறப்புகள், அவர்கள்தம் வாழ்க்கைத் துணைகளான சரஸ்வதி, ராதா, மேகலா, தங்கவடிவேல், தெய்வேந்திரம், சித்திரவேல் ஆகியோர், தன்மனையாளின் உடன்பிறப்புகள், அவர்கள்தம்
வாழ்க்கைத் துணைகள், தன்மனைவி, பிள்ளைகள், என மலர்க்காட்டுக்குச் சிட்டெனப் பறந்து
மகிழ்ந்தார் சிவபாதனார்.
நல்ல குடும்பம், இனிய உறவுகள், இன்பந்தரும்
மழலைகள் எனக் குறைவற்ற சிவபாதனாரைச் சுற்றி நின்றன. வாழ்க்கையின் உச்ச மகிழ்ச்சி
அவரிடம்….
வந்தாரை வரவேற்றார்:
வருவிருந்தை எதிர்பார்த்தார். வாசுகிபோல் கணவர் கருத்தறிந்து நடக்கும் மனையாள்
பவளகாந்தியின் ஒத்துழைப்பால் ஊரெல்லாம் சிறப்புப் பெற்றார்.
என்னதான் சிறப்புகள்
இருந்தாலும். பெற்றோர் மறைந்தபோது துவண்டு போனார். தன் மனையாளின் பெற்றோர்
இயற்கையுடன் கலந்தபோது தவித்துப் போனார். அண்ணா பாக்கியராசா இறைவனடி
சேர்ந்தபோது இதயத்தையே இழந்தாற்போல் வருந்தினார். தன் உடன்பிறப்புகளின் துணைகளான தங்கவடிவேல், சித்திரவேல் ஆகியோர்
தவறியபோது தான்தனித்துப் போவதாக உணர்ந்து துடித்தார்.
என்றாலும் வாழ்க்கையை
இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டார். பிள்ளைகளைக் கல்வியறிவாளர்களாக மாற்றினார்.
அவர்களுக்குப் பருவம் வந்தபோது மணவினைகளை மனையாள் பவளகாந்தியுடன் உதவியடன்
ஆற்றிவைத்தார்.
மூத்தமகன்
கோகிலராஜனுக்குக் கரோலின் என்பாரைத் துணையாக்கி மகிழ்ந்தார்: அவர்களின் சிறப்பான
வாழ்வின் பயனாக அனுஸ்கா பேர்த்தியானாள்.
அடுத்தமகன் சதீஸ்குமாருக்கு
சுதாசினியை இணையாக்கினார். அவர்கள் மகிழ்வின் வழியாக பிரதக்ஷினி, தனுக்ஷினி, திவ்யன், அக்ஷேhபன் என நால்வருக்குப் பாட்டனானார்.
அவர்களுள்
இளையவரான அக்ஷேhபன் இளங்குருத்தாகவே
தவறியபோது தன்னிலை இழந்து போனார் அவர்.
மகள்
யயோசாதாவுக்கு சிகாவலன் என்பாரைத் தேர்ந்து துணையாக்கினார். அவர்கள் வழியில்
பிறந்த பேரக்குழந்தைகள் கவின், லவின் என
இருவரால் மனங்குளிர்ந்தார்.
கடைக்குட்டி
ஜெயச்சந்திரனுக்கு உகந்தவர் தயாளினி எனக்கண்டு இணைசேர்த்தார். அவர்தம்
வாழ்வின்பேறாய் நிபீஷ், நிதுஷ் என இருபேரர்களை
அள்ளி அணைத்தார்.
நவமணிகளெனப்
பேரக்குழந்தைகள் பிறந்தபோது மகிழ்ந்து அவற்றுள் ஒருமணி தவறியபோது துடித்து
எண்மணிகளையும் தன் கண்மணிகளாகப் போற்றி வாழ்ந்தவருக்கு மனங்கவர்ந்த துணையாகவும்
துயரத்தில் தாயாகவும், அருகமர்ந்து அன்புநல்கும் கிழத்தியாகவும்
ஒளிர்ந்த அவரது மனைவி பவளகாந்தி இவ்வுலகைவிட்டுப் பறந்தபோது எல்லாமும்
கைவிட்டுப் போனது போலாயிற்று.
அந்த இருண்டநாள் 30.05.2014 என்றானது.
சிவபாதனாரின்
மனமும் அன்றோடு தளர்ந்து போயிற்று.
மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உடன்பிறப்புகள், அவர்கள் வழிவந்த
உறவுகள், மனைவிவழிச் சொந்தங்கள், நண்பர்கள் எனப் பலரிருந்தும், அவர்களின் ஆறுதல் மொழிகளும் அன்புகாட்டல்களும்
நிறைந்திருந்தும் தன்மனையாள் வாழ்ந்தபோது இருந்த மிடுக்கை மனதளவில் இழந்தே போனார்.
ஈசன்பாதம் நாடியது
அவர்மனம். உதடுகள் உலக விவகாரங்களைப் பேசியபோதும் உள்ளம் இறை நாட்டத்திலேயே
திளைத்து நின்றது. தாமரையிலை நீராய் வாழ்க்கை கழிந்தது.
ஈதலை அறமாக்கித் தீவினை
விட்டீட்டியவற்றைப் பொருளாக்கிக் கருத்தொருமித்த துணையின் ஆதரவை வாழ்வாக்கி
வள்ளுவனார் சொல்லிவைத்த நிறைவாழ்வைப் பெற்றிருந்த பெரியார் சிவபாதனார் இறைவனை
நினைந்து இம்மூன்றையும் துறக்கும் காலத்தை அமைதியாகப் பார்த்திருந்தார்.
அந்தநாள்
செவ்வாய்க்கிழமை 21 ஆகஸ்டு 2018 என்றாயிற்று
ஆங்கிலக் கணிப்பில்.
விளம்பிவருடம்
ஆவணி ஐந்தாம்நாள் என்று கூறிற்று தமிழர் கணக்கு.
சிவனார் அழைத்தார்:
சிவபாதனார் புறப்பட்டார். குங்குலியக்கலய நாயனாரை இறைவன் அழைத்த புண்ணிய தினமான
ஆவணிமூலமும் அன்றுதான்.
ஓர் ஆன்மா அமைதி பெற்றது, இறைவன் திருப்பாதங்களில் உறைந்திருக்கும் பேறு
பெற்றது.
அது இனித் திரும்பவும்
உலகுக்கு வரப்போவதில்லை.
அழுவதை நிறுத்தி அவரை
வழிபடுவோமாக.
ஓம் சாந்தி சாந்தி.
பிள்ளைகள்
துயரம்.
அன்புக்கு இலக்கணமாய் வாழ்ந்த அப்பா
அறிவூட்டிப்
பண்பூட்டி வளர்த்த அப்பா
துன்பங்கள் எமைவீழ்த்த வருகின்ற போதில்
துணிவோடு
எதிர்கொள்ள வைத்த அப்பா
இன்பங்கள் தமைக்கண்டும் மயங்கி டாமல்
இருப்பதற்கும்
வழிசொல்லி வளர்த்த அப்பா
இன்றெம்மைத் தவிக்கவிட்டுப் போன தென்ன
எல்லாமும்
இழந்தவராய் ஆனோம் நாமே..
அப்பாவின் சொல்தட்டாப் பிள்ளைகளாய் நாம்
அனைவருமே
உங்கள்புகழ் காத்து நிற்போம்
எப்பேறு பெற்றரிவர் தந்தையென உலகம்
எண்ணும்படி
யாகநாங்கள் வாழ்ந்திருப் போம்
எப்போதும் உங்கள்நினை வாக வாழ்ந்து
எல்லோரும்
ஒற்றுமையாய்ச் சேர்ந்திருப் போம்
தப்பேது செய்தோம்யாம் தவிக்கின்றோம் இன்று
தந்தையே
நின்வழியில் வாழ்ந்திருப்போம் என்றும்.
மருமக்கள்
துயரம்.
மருமக்கள் என்றெம்மை எண்ணாமல் பிள்ளைகள்போல்
மனதார அணைத்து
நின்ற இனியமாமா
அருளோங்கும் விழிப்பார்வை அன்பான உரையாடல்
அனைத்திலுமே
உயர்ந்து நின்ற எங்கள்மாமா
இருளோட்டும் ஆதவனாய் எழிலூட்டும் ஒளிவிளக்காய்
எம்மனத்தில் இடம்
பிடித்த அன்புமாமா
வருநாளில் வழிகாட்ட யாருளரோ இனியெமக்கு?
வாடுபயி ரானோம்
துணை யாரோமாமா.?
உங்கள் அறிவரைகள் எமக்குவழி காட்டிநிற்கும்
உங்கள் அருட்பார்வை
எமக்குத்துணை யாயிருக்கும்
உங்கள் நினைவுகளே எமக்குப்பல மாகிநிற்கும்
நீங்கள் நடந்தவழி
எமக்குஒளி ஊட்டிநிற்கும்
எங்கள் மாமாவென்ற பேரென்றும் உயர்ந்துநிற்கும்
இதயத்துத் தெய்வமென
உங்களுரு நிலைத்திருக்கும்
திங்களணி சிவனாரின் திருப்பாதம் தாங்கிநிற்கும்
திருவே எம்மாமாவே
தாள்தொழுது வணங்குகிறோம்.
பேரப்பிள்ளைகள்
துயரம்.
அள்ளி அரவணைத்து அன்பொழுக முத்தமிட்டு
ஆனந்தம் தந்த
தாத்தாவே எங்குசென்றாய்?
துள்ளித் திரிகின்ற பிஞ்சுகள்நாம் துடித்திருக்க
துளியேனும்
சிந்திக் காமல்நீ எங்குசென்றாய்?
பள்ளிசெல்ல மனமுமில்லை பாட்டனுன்னைக் காணவில்லை
பரிதவித்து
அழுவதன்றி என்ன செய்வோம்.?
வெள்ளி நிலவெனவே உயர்ந்துநிற்கும் தாத்தாவே
வேதனையால்
வாடுமுங்கள் பேரர்தமைப் பாராயோ?
உடன்பிறப்புகள்
துயரம்
ஒருதாய் வயிற்றுக் கொடியாய் வளர்ந்தோம்
ஒருவழி செல்லும்
மனதால் உயர்ந்தோம்
திருவும் புகழும் சேர்ந்திடக் களித்தோம்
திடமுடை உறவெனும்
துணிவுடன் வாழ்ந்தோம்
அருளுடை மூத்தவர் சென்றிடத் தவித்தோம்
அண்ணா நீயுளாய்
என்பதால் நிமிர்ந்தோம்
பெருந்துயர் இன்று வந்திடத் துடித்தோம்
பெறற்கரு திருவுனை
இழந்தின்று தவித்தோம்.
மைத்துனர்
மைத்துனிமார் துயரம்.
புன்னகை தவழும்முகம் பொன்னிகர்த்த உயர்ந்தமனம்
புலர்பொழுதுச்
சூரியனாய் உதவுங்குணம்
இன்னமுதாய் மொழிவீச்சு எல்லோரும் மகிழ்பேச்சு
எவர்தமக்கும்
ஊறில்லா இனியபண்பு
தன்னலம் பேணாத்தன்மை உறவோடு இசைந்தவாழ்க்கை
தமர்பிறர்
என்றுபாரா இனியசேவை
இன்னமும் பலவாய்நின்ற அத்தானை இழந்துநாங்கள்
எரிதழல்வீழ்
புழுவாகத் துடிக்கின்றோமே.
உறவினர் துயரம்.
வாசமுள்ள மலரே வற்றாத ஜீவஊற்றே
வையத்துள்
வாழ்வாங்கு வாழ்ந்த நிலவே
பாசமுள்ள உறவே பண்பான மன்னவரே
பக்குவமாய்
நிழல்தந்த பெருவிருட்சமே
பேசுமென்றும் எம்நா புகழ்ந்தேத்தும் எங்கள்மனம்
பெருநிதியே பொக்கி~மே சென்ற தெங்கே?
தேசுபுகழ் விளக்காய் தொடர்ந்தெங்க ளோடிருந்து
தேய்வமென வழிகாட்ட
வேண்டும் ஐயா.
சுற்றம் துயரம்.
முகமலர்ந்து விருந்தோம்பி முன்னின்று சபைநடத்தி
ஆகமகிழ வார்த்தையாடி அனைவரையும் கவர்ந்திழுத்தாய்
செகமதிலே நாம்தவிக்கச் செம்பொன்னே எங்குற்றாய்?s
அகமெல்லாம் அழுகிறதே ஆறதல்தான் கூறாயோ?
தேற்றப்பா.
நிலையாத யாக்கையிங்கு
நிலைத்திருக்கும் என்Wநம்பி
அலைபாயும்
மனத்தாலே ஆவதென்ன? – குலையாத
மனவுறுதி
கொண்டந்த மாதவனின் பாதங்களைத்
தினந்தொழுது
வாழ்வதன்றோ சிறப்பு.
ஆக்கம்:
கந்தவனம் கோணேஸ்வரன்ää
திருக்கோணமலை.
தொலைபேசி: 026 222 1869.
கருத்துகள்
கருத்துரையிடுக