இந்துசமய விளக்கம் 12



இறைவனுக்கும் மனிதனுக்குமிடையிலான உறவு எத்தன்மையுள்ளதாக இருக்க வேண்டும்?

இறைவனை அரசனாக மதிக்கலாம்: ஆண்டவனாகக் கொள்ளலாம்: அம்மா, அப்பாவாகப் போற்றலாம்: நல்லதொரு நண்பனாகப் பாராட்டலாம்: வேலைக்காரனாக மதித்து ஏவல்கூடச் செய்விக்கலாம். இதில் தவறேதுமில்லை. ஆனால், இந்த உறவுமுறைகள் எல்லாம் மாசற்ற அன்பின் நிமித்தம்தான் ஏற்பட வேண்டுமே யல்லால், அகங்காரத்தின் நிமித்தமன்று. இறைவனை அன்பினால் மட்டுந்தான் கட்டிப்போட முடியும்.

“அம்மையே அப்பா ஒப்பிலா மணியே..” என்று மாணிக்கவாசகர் கூறினார். “பித்தா..” என்று சுந்தரர் வைதார். “தாயினும் நல்ல தலைவர்..” என்றார் ஞானசம்பந்தர். தன்னைக் கண்ணனின் மனைவியாகப் பாவித்துக் கொண்டார் 'சூடிக்கொடுத்த நாச்சியார்' எனப்படும் ஆண்டாள். தோழனாக இறைவனைப் பாவித்த சுந்தரர், தான் பெற்ற நெல்லை வீட்டுக்கு எடுத்துவந்து தரும்படி உத்தரவு போட்டு வேலை வாங்கினார். மதுரையில் வாழ்ந்த கூனற்கிழவி செம்மனச் செல்வியின் அன்பால் இறைவன் கூலியாளாகிப் பிட்டுக்காக மண்சுமந்து பிரம்படியும் பெற்றார். மகாகவி பாரதியார் இறைவனை வேலைக்காரனாக நினைத்துக் கவிதையும் பாடினார்.

இவையெல்லாம் இறைவன் அன்புக்குக் கட்டுப்பட்டுப் பக்தனுக்காக எந்தநிலைக்கும் இறங்கிவரச் சித்தமாக இருக்கிறார் என்பதையே உணர்த்துகின்றன. இந்துசமய வழிபாட்டு முறையில் உள்ள மிகச் சிறப்பு இதுதான். ஆலயங்கள், அபிசேகங்கள், கோலக்கொடிகள், கொட்டுமுழக்கம் எதுவும் இல்லாவிட்டாலும் சீலம்பேணும் ஆன்மாவைத் தேடி இறைவன் தானாகவே வருவான் என்பது இந்துமத நம்பிக்கை.



மேளதாளங்கள், நாதஸ்வரங்கள், மணியோசை என்பவை இறைபக்திக்குக் குந்தகம் ஏற்படுத்தாவா? ஓசைகளின் மத்தியில் வழிபாடியற்ற மனம் இடங்தருமா?

இதே போன்றவொரு கேள்வியை அமைதிவழிப் பிரார்த்தனை நடத்தும் சமயகுரு ஒருவர், இந்துமதப் பெரியார் ஒருவரிடம் கேட்டாராம். அதற்கு அவர் அளித்த பதிலைப் பாருங்கள்.

“இரண்டு குடும்பங்களை எடுத்துக் கொள்வோம். காலையில் எழுந்து பரக்கப்பரக்கக் காலைக் கடமைகளை முடித்துவிட்டுப் பெற்றோர் பணிக்காக அலுவலகம் புறப்பட்டு விடுகின்றனர். அதேபோல் பிள்ளைகளும் பாடசாலைக்குப் புறப்பட்டு விடுகின்றனர். நின்று நிதானமாக உரையாட முடியாத நிலையில் காலை மறைந்து விடுகிறது.

மாலையில், குழந்தைகள் பாடசாலை விட்டுப் பின்னர் விளையாடி முடித்து வருகின்றனர். பெற்றோரும் பணிமுடிந்து வீடு வந்து சேர்கின்றனர். ஒரு வீட்டுக் குழந்தைகள் பெற்றோரைக் கண்டவுடன் கட்டியணைத்து முத்தமிட்டு ஆரவாரம் செய்து அன்பை வெளிப்படுத்துகின்றனர். பதிலுக்குப் பெற்றோரும் குழந்தைகளை உச்சிமோந்து களிக்கின்றனர். ஆனால் அடுத்த வீட்டிலோ பிள்ளைகள் ஆளுக்கொரு ஆசனத்தில் அமர்ந்து கொண்டு பெற்றோரைப் பார்க்கின்றனர்.

இதில் முதலாவது குடும்பம் எங்களுடையது. இறைவன் எங்கள் பெற்றோர். நாங்கள் குழந்தைகள். இங்கே அன்பு இல்லையென்று சொல்லிவிட முடியுமா?”

இந்த விளக்கம் எளிமையானது. இறைவன்மேல் அன்பு செலுத்துவதற்கு இனிய ஒலிகள் இடையூறாகா என்பதை உணர்த்தப் போதுமானது.

எனினும் மேளதாளங்கள், நாதஸ்வரங்கள், மணியோசை, மந்திரங்கள் எல்லாம் இசைநயம் கருதியவை. எங்கள் பண்பாட்டின் உயர்வைக் காட்டுபவை. இறைவன் இசைக்கு வசமாகிறான் என்பது எங்கள் சமயத்தாரின் நம்பிக்கை. இசையில் எங்கள் உள்ளம் லயித்து இனிய சுபாவம் பெறுகிறது.

இசை, நாடகம், நாட்டியம் போன்ற கலைகளுக்குப் பண்டைக்காலந் தொட்டுக் களமமைத்துக் கொடுத்தவை கோயில்கள்தாம். இறைவன் நாதமாக இருப்பவன் என்பதால் நாதன் எனப்படுகின்றார். நடனத்தில் லயித்திருப்பதால்தான் ஆடல்வல்லான் என்றும் நடராசப் பெருமான் என்றும் போற்றப்படுகின்றார். நாடகத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை: பக்தர்களின் பெருமையை உலகறியச் செய்வதற்காக வேடந்தாங்கிய செய்திகள் பலப்பல.

விருத்தர் வேடத்தில் சுந்தரரை ஆட்கொண்டமை, கூலியாள் வேடத்தில் செம்மனச் செல்வியின் பெருமையை உலகுக்குணர்த்தியமை, வேடன் வடிவில் வள்ளியை மயக்கியமை, மாணிக்கவாசகரைக் காப்பாற்ற நரிகளைக் குதிரைகளாக்கியமை என இறைவன் போட்ட நாடகங்களும் வேடங்களும் எண்ணிறந்தவை.

உரை, இசை, நடனம், நாடகம் என்பவை சைவமக்களைப் பொறுத்தமட்டில், அறிவூட்டற் கலைகளாகவே ஆதிகாலந்தொட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. கோவில்களைக் களமாகக் கொண்டு வாதிடு மன்றம், இசையரங்கு, நாடகங்கள், நாட்டியங்கள், நூல் அரங்கேற்றங்கள் என்பவை நிகழ்த்தப்பட்டன. இவற்றின்மூலம் மக்களுக்கு வாழ்வியற் செய்திகள் சொல்லப்பட்டன. அறிவு வளர்க்கப்பட்டது: கலைகள் பயிற்றுவிக்கப்பட்டன. நாகரிகம் பண்பாடு என்பவை தோற்றுவிக்கப்பட்டன.

எல்லாவற்றுக்கும் மேலாக, இசை உள்ளத்துக்கு ஆனந்தத்தையும் அமைதியையும் அளிக்கிறது. ஆனந்தத்தின் மூலம் அமைதி ஏற்படுமிடத்து அதுவே இறைவன் சந்நிதானமாகிறது. எனவே இசை எங்கள் உள்ளத்திலேயே ஆண்டவனைக் காணவைக்கிறது. இப்படிப் பல காரணங்களால்தான் இந்துமதம் இறைவழிபாட்டில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.     

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5