நடப்பியற் சதகம் - வெண்பா 100

நடப்பியற் சதகம்;
(இன்னிசை வெண்பா)


( இழிந்த நாட்டு நடப்புகளையும் சமுதாய அரசியற் நீர்கேடுகளையும் மனத்திருத்தி நாளுக்கொரு பாடலாக 20 மார்ச் 2018 தொடக்கம் 25 ஜுன் 2018 வரையிலான நிலைமைகளை அனுசரித்து அன்றன்று எழுதி முகநூலிற் பதிவேற்றம் செய்யப்பட்ட நூறு பாடல்களின்  தொகுப்பு இது. பதிவேற்றத்தின்போது பாடல்களுக்குத் தலைப்புகள் இடப்படவில்லையாயினும் தொகுப்பில் அக்குறை நீக்கப்பட்டிருக்கிறது.)



                                              ஆக்கியோன்:    கந்தவனம் கோணேஸ்வரன்.
                                                                                திருக்கோணமலை. 



    ஓய்வுகால அரசியல்.

   அறுபது வயதுவரை அரசுக்கு நல்லபிள்ளை
   அறுபது நிறைவின்பின் அரசியலாம் - இறுதியாக
   மக்களன்றோ பாவம் மகத்தான வாக்கால்இவர்
   சொர்க்கபோகம் காண்கின்றார் பார். (1)      20.03.2018


  பணம்பண்ணும் வழி.

வாக்கைக் கொள்ளையிட்டு வளம்பெறு பவர்பின்னால்
நாக்குத் தொங்கச்சிலர் அலைகின்றார் - நோக்கெல்லாம்
பணம்பண்ணல் பவிசாக வாழ்தல் அதுவன்றிக்
குணமுண்டோ இவர்க்குவேறு சொல். (2)     21.03.2018 


கட்சியை அழிக்கின்றார்.

யாரோ வளர்த்தகட்சி யாரோகட்டிக் காத்தகட்சி
யாரோ நுழைந்தின்று அழிக்கின்றார் - ஊரே
திரண்டொருநாள் இவர்களைத் துரத்தாமல் விடுமானால்
வறண்டுபோம் தமிழ்அரசுக் கட்சி.  (3)  22.03.2018


தெருப்பொறுக்கிக் குணம்.

உள்ளபுற மோசனெல்லாம் ஓடியோடிப் பெற்றுவிட்டு
அள்ளஏது மில்லையென் றானபின் - மெள்ளவே
அரசியலுக்கு வருகின்றார் அறிவுரைகள் பகர்கின்றார்
தெருப்பொறுக்கிக் குணமன்றோ இவர்க்கு.  (4)  23.03.2018


கல்விமான்கள்

கல்வி மான்களெல்லாம் கருவாட்டுக் காரியின்முன்
செல்லாக்கா சானகதை தெரியாதோ - இல்லை
மூளை இவர்க்குஎன்றால் முற்கோபம் பொங்கிவரும்
ஆளை விடுங்கள்போ கின்றேன்.    (5)  24.03.2018



வெளிவேசம்

ஐயாவைச் சுற்றிவந்து அரோகரா என்றுசொன்னால்
மெய்யான தொண்டரென ஆகுவீரோ – பொய்யாய்
வெளிவேசம் வேண்டாம் வெளியுலகில் உங்களுக்குத்
துளியும் மதிப்பில்லை காண்.      (6)  25.03.2017



மக்கள் தேடல்

மக்களிடை கலந்திருப்பார் மக்களோடு வாழ்ந்திருப்பார்
மக்களிடை யேயிருந்து தலைநிமிர்வார் - எக்கணமும்
தன்னலத்தைப் பாரார் தமிழருக்கே தொண்டுசெய்வார்
அன்னவரே இன்றெமது தேடல்.   (7)   26.03.2018


போக்கிலிக் குணம்

ஓடுவது குதிரைக்குணம் உதைப்பதுவோ கழுதைக்குணம்
பாடுபட்டு உழைப்பதுதான் மனிதக்குணம் - தேடிவைத்த
வாக்குகளை அள்ளிச்சிறு மந்திரியாய் வலம்வருதல்
போக்கிலிக்கு மட்டுமென் றானகுணம் (8)  27.03.2018


எம்தேடல்

காது கேட்பதில்லை கண்களுக்கும் பார்வையில்லை
தீதுநன்று தேர்வதற்குத் திறனுமில்லை – போதும்
சேவையென்று அரசாங்கம் அனுப்பிவைத்த ஆளையன்றோ
தேவையென்று தேடுகின்றோம் நாம்.  (9)  28.03.2018


திருடருக்கு வழி.

உள்ளுர் சபைத்தேர்வில் உதவாத பேர்களுக்கா 
அள்ளித் தமிழர்வாக் களித்தார்கள்? – தெள்ளத்
தெளிவாகத் தெரிகிறது திருடர்களை உள்நுழைக்க
வழியொன்று தேடுகிறார் ஐயா!    (10)   29.03.2018


படித்தவர் பண்பு.

தேர்தலில்நில் லார்மக்கள் தேவைகள் அறியார்பதவி
மோதலில்மட் டும்முன்நிற் கின்றார் - கோதையே
படித்தவர் அலுவலர்தம் பண்புகள் இவையென்றால்
விடியுமோ தமிழினத்தின் வாழ்வு?  (11)   30.03.2018


பெருந்தவறு.

தென்னிலங்கை வாசியைநாம் தேடிப் பிடித்துவந்து
பொன்விலங்கு பூட்டியாழில் அமர்த்திவைத்தோம்  - தன்னிலையை
மறந்துஅவர் ஆடுகின்றார் மக்களையும் குழப்புகின்றார்
பெருந்தவறு நேர்ந்ததன்றோ எமக்கு.  (12)  31.03.2018


ஐயாவின் ஆசை.

ராசாவை வரவேற்று நகரைமுன் னேற்றவென்று
லேசான ஆசைஐ யாவுக்கு - கூசாமல்
நாயகமா யாவதற்கு ராசாவும் விரும்புகின்றார்
பேயரானார் நகரமக்கள் பார் .   (13)  01.04.2018


மந்திரிகள் தந்திரம்.

செல்வாக்குச் சரிந்ததற்குச் சரியான காரணத்தைச்
செல்வாக்கைச் சிதைத்தோரே தேடுகிறார் - எல்லாம்
மந்திரிப் பதவிகட்காய்  மனச்சாட்சியை அழித்த
தந்திரத்தின் பயனென்று தேர்.   (14)  02.04.2018


தோசம் எங்கே?

ஒட்டுக் குழுக்களென்றோம் உதவாத பேர்களென்றோம்
எட்டநின் றாலும்தோசம் ஒட்டுமென்றோம் - கட்டி
இன்றுஉற வாடுகின்றோம் இனம்வாழும் உத்திஎன்றோம்
நன்றாமோ  நாம்நவின்ற தெல்லாம்?   (15)   03.04.2018



தெளிவின்மை

மொழிவாரி மாநிலமே முதுதமிழர் தாயகமென்
றொழியாமல் ஓயாமல் அன்றுரைத்தார் - தெளிவற்று
வடக்கிலொரு பேரவையாம் கிழக்கில்தமிழ் ஒன்றியமாம்
தடம்மாறு தாமோதமிழ்ச் சாதி.      (16)  04.04.2018



வேகிறது நெஞ்சம்.

விடுதலைக் காய்எழுந்தோம் வீரவர லாறமைத்தோம்
தடம்மாறாப் பாதையிலே நடந்தோம் - அடதம்பி
அனைத்தையும் இன்றுவிட்டோம் அரசியலில் நேர்மைகெட்டோம்
நினைத்தாலே வேகிறது நெஞ்சம்.    (17)  05.04.2018


இழிசனர்

விட்டுக்கொடுப் போமென்று விபரமாகச் சொல்லியாமோ
எட்டப்பர் வாக்குக்கொள்ளை யிட்டார்? – முட்டத்
தனம்கண்டால் தமிழர்நிலை தரங்கெட்டுத் தான்போமோ
இனங்கொண்ட இழிசனராம் இவர்கள்.  (18)  06.04.2018


குரங்குகள்  பிய்க்கின்றன.

தந்தை விதைபோட்டார் தனயர் பயிர்வளர்த்தார்
எந்தையரும்  தாயரும் ஏந்திநின்றார் - சிந்தை
நிறைந்துயர்ந்த தமிழரசு நெறியை இன்றுவந்த
குரங்குகள்பிய்க் கின்றனவே பார்.  (19)   07.04.2018


மானமில்லா இராசாக்கள்.

மானங் கெட்டவர்கள் மரியாதை விட்டவர்கள்
ஊனம் மனதால் உற்றவர்கள் - ஞானம்
இல்லாத ராசாக்கள் எல்லாமே இழக்கின்றார்
பொல்லாப்ப தவியிற்கண் வைத்து.  (20)  08.04.2018


அமைச்சர் இயல்பு.

அமைச்சர்கள் வாழ்விலக்கு அவ்வப் பதவிகளில்
இமைப்பொழுதும் நீங்காம லிருத்தலே – எமைவருத்தி
யேனுமவர் நிலைத்திருப்பார் எவர்வரினும் நியாயம்சொல்வார்
ஊனும்கடி நாயும்போ லவர்கள்.  (21)  09.04.2018


விதியைக் குறை சொல்வதோ?

மதிகெட்ட மேய்ப்பர்பின்னால் மந்தைகள் திரண்டுவந்தால்
விதியைக்குறை சொல்வதனால் யாதுபயன்? – புதியதொரு
வரலாறு காண்போமென வருந்தண்டப் பேர்வழிகள்
வரலாற்றால் கறைபட்டே யழிவர்.   (22)  10.04.2018


மனமில்லாதார்.

தூக்கி யெறிவதற்கும் துணிந்துவெளி யேறுதற்கும்
யார்க்கும் மனமில்லை யாமோ? – ஏக்கம்
பதவியொன்றே யாமெனப் பவிசுகெட்டு நிற்கின்றார்
உதவுவரோ மக்களினி உமக்கு.   (23)  11.04.2018


நேர்வழியோர் நிலைத்திருப்பர்.

அதிகாரம் பெறுதற்காய் அடிநக்கி யேனும்சிலர்
பொதிமாடாய்ப் பிறர்முன்னே பணிந்துநிற்பர் - எதுவரினும்
நேர்வழியி லன்றியதை நினையேனென் போர்களெல்லாம்
ஊர்மக்கள் மனத்திருப்பர் உயர்ந்து. (24)  12.04.2018


நிலைக்குமா சீர்மை?

மக்களிடம் வாக்குக்கேட்க மடையரையே அனுப்பிவைத்து
துக்கமெலாம் அவர்தலையிற் தோயவைத்து – சிக்கலெலாம்
முடிந்தபின்னர் வாக்குக்கேட்கா மன்னவனை அழைத்துவந்து
முடிதரித்தால் நிலைக்குமாமோ சீர்மை. (25)  13.04.2018


வீணர் செயல்.

ஆளுநர் சொல்பவற்றை அப்படியே கேட்டுவந்து
மீளுரைக்கும் பேர்வழிதாம் தலைவராமோ? – ஆளுநரின்
ஆணைப்படி நடப்பதென்றால் அதிகாரம் இவர்க்கெதற்கு?
வீணர்செய லாலேகெட்டோம் நாம்.  (26)  14.04.2018


நெஞ்சுறுதி வேண்டும்.

நெஞ்சிலுறுதி வேண்டும் நேர்மையராய் வாழ்வதற்கு
அஞ்சுதலும் நலமாம்:நலம் அல்லவைக்கு – பிஞ்சுமன
ஆற்றலதும் வேண்டும் அன்புநெறி நடப்பதற்கு
ஏற்றமுண்டோ மனிதர்க்கிவை யிலையேல்?.    (27)  15.04.2018


கலாபூசணம்.

தானே கலையெழுதித் தானே விண்ணப்பித்து
தானே முயன்றாற்றான் பூ~ணமோ? – ஏனோ
தானாய் வராப்பட்டம் தமிழுக்கு இழுக்கென்று
மானே உணர்வதெப்போ திவர்கள்?   (28)  16.04.2018


தமிழர் தலையெழுத்து.

பாலைக் குடித்தபூனை போதுமென்ப துண்டோ?நீதிக்
கோலெடுத் தவிக்கினேசர் வேறாமோ? – சோலைத்
தென்றல் தருசுகத்தைத் தூத்தூஎன் பாருமுண்டோ?
நன்றாம் தமிழர்தலை யெழுத்து.    (29)   17.04.2018


வில்லூன்றியானே…

வால்பிடிப்போர் வாழ்ந்திருப்பர்: வாய்புதைப்போர் பார்த்திருப்பர்
கோலெடுப்போர் கொள்கை பரப்பிநிற்பர் - வேல்பிடித்த
வில்லூன்றி யானேநீ வினையறுக்க வல்லவனேல்
நல்லோர்க்குத் துணையாவாய் நயந்து. (30)  18.04.2014




மனுசப்பதர்.

கால்களுக்  கிடைப்புகுந்து கவுரவம் தனையிழந்து
மேல்நிலை யடைதலென்ன முறையாமோ? - சூழ்நிலையின்
அனுசரிப்பு என்பதெல்லாம் அவமான மானபேச்சு
மனுசப்பத ருக்கேது மாண்பு?   (31)  19.04.2018


மக்கள் பரிவு.

சங்கூதினா ரொருவர் சன்னதமாகி னார்முதல்வர்
இங்கேவா என்கின்றா ரின்னொருவர் - எங்கேதான்
போனாலும் பொதுமக்கள் பரிவுஇவர்க் கில்லையெனில்
வீணாவ தாமன்றோ முயற்சி.    (32)  20.04.2018


சந்தர்ப்பவாதம்.

பதவி பெறுமுறையைப் பிழையென் றுரைத்தவர்கள்
பதவி பெற்றதுமே வாழ்த்துகிறார் - உதவி
தேவைப் படுமிடத்துத் தேனோழுகப் பேசியேனும்
சேவைபெற லாமென்ற நினைப்போ?   (33)  21.04.2018


வெண்டைக்காய்ப் பேர்வழிகள்.

நேர்மையாய் எதிர்க்கவேண்டும் நிதானமாய் உரைக்கவேண்டும்
ஓர்மமாய்த் தவறுண்டேல் இயம்பவேண்டும் - சீர்மையைக் 
கண்டுபா ராட்டவேண்டும்: காவடி எடுப்பதெல்லாம்
வெண்டைக்காய்ப் பேர்வழியர் வேலை.  (34)  22.04.2018


அறிக்கை வேந்தன்.

அமைந்தவுயர் பதவிதனை அறிக்கையிலே கடத்திவிட்டு
அமைப்பேனொரு  புதியகட்சி எனலாமோ? – உமையவளின்
புத்திரனே உனக்கெதிரி புறத்திலன்று: நின்குணமே
சத்துருவாய் வந்துன்னைக் கெடுக்கும்.   (35)   23.04.2018


தந்தையின் கொள்கை.

தந்தையின் கொள்கையென்பார் தயங்காமற் பொய்யுரைப்பார்
சிந்தையிலே தமிழர்நலம் சிறக்குதென்பார் - எந்தையே
நீங்கள் விதைத்தவுண்மை நேர்மைசெயற் பாடெல்லாம்
ஏங்கியிங்கே நிற்பதுவும் நன்றோ?   (36)   24.04.2018


முகத்தில் உமிழ்வர்.

எதிர்த்துவீழ்ந்த கட்டபொம்மன் இன்றுவரை நிலைக்கின்றான்
அடுத்துக்கெடுத்த எட்டப்பன் அவமானான் - கொதித்துநிற்கும்
தமிழர்நலந் தனைவிற்றுத் தலைநிமிர்தல் சரியென்றால்
உமிழ்வரன்றோ தமிழர்நும் முகத்தில்   (37)   25.04.2018


தந்தை செல்வா.

( இன்று தந்தை செல்வாவின் நாற்பத்தோராவது மறைவுதினம். )

தந்தை வழிநடக்கும் தனையர் அனைவருக்கும் 
வந்தனம் சொல்லிநாம் வாழ்த்திடுவோம் - சிந்தை
விடுதலையை நாடிநின்றால் வீண்பகட்டு பதவியெலாம்
பொடுகனைய பொருளன்றோ பேதாய்!   (38)   26.04.2018


அறப்போராட்டம்.

அறவழிப் போராட்டம் அமைதிவழி நடந்ததனால்
புறங்கூறு வாரெவரும் ஈங்கில்லை – மறத்தமிழர்
உணர்வுவழி வெளிப்பாட்டை உயர்கல்வி நிலையம்முன்னால்
கொணர்ந்தவரை வாழ்த்தும்திருக்கோணமலை  (39)   26.04.2018


உண்மை நிலைக்கும்.

கூட்டமைப்பைக் கவிழ்ப்பதற்குக் கூத்துகள் ஆடுகிறார்
ஏட்டினிலும் ஏதேதோ எழுதுகிறார் - போட்டுடைக்கின்
மக்கள்தீர்ப் பாலன்றி மாற்றங்கள் நிகழ்வதில்லை
எக்கால மும்நிலைக்கும் உண்மை.  (40)   27.04.2018


எதிர்க்கட்சித் தலைமை

நினைத்தவுடன் வீழ்த்துதற்கும் நேசமென்றால் வாழ்த்துதற்கும்
தினைத்துணையோ எதிர்க்கட்சித் தலைமை? – அனைத்தும்
அறிந்தன்றோ முயல்கின்றார் அறிவற்றோர் ஆட்டத்தைப்
புரிந்துபதில் சொல்வர்நாளை மக்கள்.    (41)  28.04.2018


மறப்போமா?

பச்சைக் கட்சியென்ன பக்குவமாய் நடந்ததென்றா
இச்சைகொண் டன்புவிழி காட்டுகின்றீர்? – கச்சை
அவிழ அடித்ததையும் அடங்காக்கொலை யாலெம்மைத்
தவழ வைத்ததுவும் கனவாமோ?     (42)  29.04.2018


நம்பலாமா?

வாக்குரிமை பறித்தவர்கள் வன்செயல்கள் புரிந்தவர்கள்
தாக்குதலால் எமையடக்கித் தழைத்தவர்கள் - தீக்குளித்து 
புனிதரா யினரென்றால் புத்தியுளோர் நம்புவரோ
இனியுமொரு தடவையே மாற்றமோ?     (43)   30. 04.2018


அல்லலுற்றோம்.

முகம்பார்த்துப் பேசியவர்கள் முகம்மறைக்க முயன்றதனால்
அகம்நொந்து அல்லலுற்றோம் இன்று – சகமெங்கும்
ஓர்மனிதம் ஒருமார்க்கம் ஓருறவு என்றிருந்தால்
நேர்வதுண்டோ இந்நிலைமை யெமக்கு    (44)   01.05.2018


மாச்சரியம்.

மனிதரிலே மதங்களேறி மாச்சரியம் பெருகியதால்
புனிதரென எவருமில்லை இங்கு - பனிநிலவே
மதமுண்டு மனிதமில்லை மனந்திறந்த உறவுமில்லை
சிதறுண்டு போவதுதான் சிறப்போ?       (45)   02.05.2018


மேதினம்.

உழைப்பவரை ஒதுக்கிவைத்து உயருகின்ற படித்தவர்கள்
பிழைப்பாகிப் போகுதிந்த மேதினம் - அழைப்பு
இல்லாம லும்வருவார் எல்லோர்க்கும் புத்திசொல்வார்
எல்லாம்படு மோசமான ஏய்ப்பு.         (46)   03.05.2018


இறைநிந்தனை.

ஆசிரியர் சேலைகளில்  ஆபாசம்  காண்பவர்கள்
வேசியரின் புதல்வரன்றி வேறெவரோ? – பேசுமொழி
ஆறிவிக்கும் ஆசிரியர்தம்; அங்கங்களை ரசிப்பதுவும்
இறைநிந்த னைக்குநேர்ச் செயலாம்.    (47)  04.05.2018


பொய்யர்கள்.

கைதட்டிக் கொண்டாடிக் கைகட்டி உரைகேட்டு
மெய்சிலிர்த்து நிற்பர்தொழி லாளர் - பொய்விதைத்துக்
கனவானாய் வாழ்பவர்கள் கடமையதன் பெருமைதனை
புனைந்துரைப்பர் மேடையதிற் பவிசாய்.  (48)  05.05.2018

வேடதாரிகள்.

மண்வெட்டி கடப்பாரை கோடரியைக் காணாதோர்
மண்பட்டுக் கால்கழுவி அறியாதோர் - விண்தொட்டு
கோசமிங்கு போடுகின்றார் தொழிலாளர் வாழ்கவென்று
மோசமன்றோ இவர்செயல்கள் காண்.  (49)  06.05.2018


தத்துவத்தால் ஓரினம்.

இந்துவும் பௌத்தமும் இணைந்திங்கு இயங்குமேல்
எந்தவிட ரும்எமக் கிருக்காது – சந்திதொறும்
புத்தருக்குப் பூவிடுவோம் முருகனுக்கு வேலெடுப்போம்
தத்துவத்தால் ஓரினமாம் நாம்.      (50)   07.05.2018


புதிய மொந்தை.

கதிரைகளை மாற்றிவிட்டால் கடமைநிறை வேறுமென்று
விதியெதுவும் அமைச்சரவைக் கில்லை – புதியதாய்ப்
‘பிளா’ச்செய்து பழையகள்ளைப் பக்குவமாய் ஊற்றித்தந்தால்
புளகாங்கித மடைய லாமோ?    (51)  08.05.2018



மேலான வாழ்வு.

அழுது புலம்பியீங் காவது ஏதுமில்லை
பழுது வாராவாழ்க்கை போதும் - தொழுதுபின்
சென்று பெறுவதெல்லாம் சந்ததிக்கு அவமானம்
என்றுணர்ந் தவாழ்வே மேலாம்.      (52)  09.05.2018


கோமாளி.

குற்றம் குறைகூறும் கோமாளி முதலமைச்சர்
சற்றுத் தன்சம்பளத்தைக் குறைத்தாரா? – வெற்று 
உரைபகர்ந்து பதவிச்சுகம் அனுபவித்த தல்லாமல்
முறைசெய்த வரலாறு முளதோ?     (53)  10.05.2018


மாற்றம் தேவை.

பணஉதவி புரிபவர்கள் பதவிநிலை பெறுவதென்றால்
சனநாயகம் என்ற பேரெதற்கு? – துணிந்தொரு
புரட்சியால்  நடைமுறையை மாற்றா விடிலிங்கு
வறட்சியாம் நற்றமிழர் வாழ்வு.    (54)  11.05.2018


அரசியல் வியாபாரம்.

பத்திரிகைகள் புகழ்வதனால் பக்குவம்தான் அடைந்தனென
உத்தமியாள் உமைபுதல்வர் மயங்குகிறார். – சத்தியமாய்
வியாபார நோக்கன்றி வேறெதுவும் அவர்க்கில்லை
நியாயத்தின் பதியேநீ சொல்.      (55)  12.05.2018


சுடரேற்றுதல்.

உயிர்பறித்த யுத்தமுனை உக்கிரத்தைக் காணாதோர்
செயலிலியாய் அவ்வேளை இருந்தோர் - பயமின்றி
ஈகைச்சுட ரேற்றுதற்கு முன்னுரிமை கோருகின்ற
சோகத்தை எங்குசொல்லி அழ?   (56)   13.05.2018


ஊழல் மனிதர்கள்.

உதவியோர் தெருவில் ஒட்டியோர் உறவில்
பதவியோ குறுக்கு வழியில் - எதிலும்
ஊழல் செய்வது உறுதியென் றானபின்
மீளும் வழியண்டோ மாதா.       (57)   14.05.2018


விதி செய்வோம்.

எங்கள் வாழ்வுக்காய் தங்கள் உயிர்துறந்த
பொங்கு தமிழர்தாள் பணிவோம் - எங்கும்
எதிலும் தமிழென்று இறுதிவரை வாழ்வதையே
விதியாயேற் றுலகை வெல்வோம்.  (58)  15;.05;.2018


போலிகள்.

போரை முன்னெடுத்தோர் போருக்காய் உயிர்துறந்தோர்
பேரைச் சிலர்பயன்படுத்தி வளர்கின்றார் - தேரின்
ஊமையர் மக்களெனின் உளறுதற்குப் பலர்வருவர்
ஆமாம்இது தான்தமிழர் போக்கு.   (59)   16.05.2018


பேரவலத் துயரம்.

எங்கள் விடியலுக்காய் இன்னுயிரை அர்ப்பணித்து 
அமைதி கொண்டவர்க்கு அஞ்சலிகள் - இமயம்
பெயர்ந்து வீழ்ந்தாலும் பேரவலத்தால் கொண்ட
துயரை மனம்மறந்து போமோ?     (60)   17.05.2018


சீர்பெறுவோம்.

இந்தநாள் தமிழர்கள் வெந்தநாள்: உயிரிழந்து
நொந்தநாள் அதைநினைவிற் கொள்வோம் - சிந்தையை
ஓர்முகமாய்த் திரட்டி உண்மையுடன் உழைத்திட்டால்
சீர்பெறுநாள் தூரத்தில் இல்லை.  (61)  18.05.2018


போலி அரசியல்வாதிகள்.

வீரவழி பாடுசெய்தோர் வீரரல்லர் ஓரமாய்த்
தூரநின்று பார்த்தோரும் துட்டரல்லர் - பேருக்கு
ஆசைப்படு வோர்கள் அரசியல் செய்யும்வரை
நாசமாம் எமதிளந் தலைமுறை.   (62) 19.05.2018


கண்மூடித்தனம்.

போரைத் தொடக்கியது: போரை நடத்தியது
போரை அரசே முடித்தது -  போரின்
காரணம் அரசின் கண்மூடிக் கொள்கையன்றி
காரணம் வேறுளதோ சொல்.     (63)   20.05.2018


பொய்கூறும் அரசு.

பொய்கூறிப் பொய்கூறிப் போக்குக் காட்டி
கையறுந்து போகுதெங்கள் அரசு – மெய்யாகத்
தமிழர் தாயகத்தைத் தன்னரசா யேற்றலின்றி
அமையுமோ இந்நாட்டில் அமைதி.  (64)  21.05.2018


பெரியர்.

விளக்கை ஏற்றியென்ன வீரஉரை ஆற்றியென்ன
களத்தில் நின்றோரே பெரியர் - குளத்தில்
வீழ்ந்த கல்லெனவே வீட்டுக்குள் இருந்துவிட்டு
ஆழ்ந்து இரங்குதலு மழகாமோ.  (65)  22.05.2018


பொருந்துமோ?

பாணும் பருப்பும்தின்று பயின்றஜன நாயகத்தைப்
பேணும் குணமெமக்குப் பொருந்துமாமோ? – வீணில்
இனத்தின் ஒற்றுமையைக் குலைக்காமல் இயங்குகின்ற
மனமன்றோ இன்றெமது தேவை.  (66)  23.05.2018


புல்லர்கள்.

ஆளைக் கடத்தியோரும் அருகிருந்து கொடிபிடித்து 
ஆளை விடுஎன்றும் கேட்கின்றார். – நாளை
நல்லதொரு நிலையை நந்தமிழர் பெறும்போது
புல்லரெனப் போவர் இவர்கள்.   (67)  24.05.2018


ஏமாற்று வேலை.

தென்னிலங்கைத் தேவையன்று செந்தமிழர் தேவையென்று
இன்னுமிந்த அரசுக்கேன் புரிவதில்லை – மின்னுகின்ற 
ஏமாற்று வேலைகளால் எமையேய்க்க முயல்வராயின்
தாமாக வேயழிவர் திண்ணம்.    (68)  25.05.2018



தமிழ்நாட்டுக் காவல்துறை.

திருப்பி அடியானென்று தீர்மானம் செய்தபின்னால்
நெருப்பானதே தமிழர் காவல்துறை – வெறுப்பாய்
இருக்கிறது: இவர்களால்நம் இனத்துக்கே அவமானம்
தருக்கர்க ளாட்சியழி யாதோ?   (69)  26.05.2018


சீர்பெறுமோ இலங்கை.

தீர்வெழுதித் தீர்வெழுதித் தீய்ந்துபோன கரங்கள்
ஆர்வமுடன் காத்திருந்த மனங்கள் - யார்வரினும்
தீர்வுவரா தென்றநிலை தொடர்ந்திங்கே நிலவுமெனில்
சீர்பெறுமோ இலங்கையிவ் வுலகில்?   (70)  27.05.2018


தீர்வு வருமா?

மூன்றாண்டு ஆயிற்று மூன்றடியும் நகரவில்லை
என்றாலும் தீர்வுவரும் என்கிறார் - நின்றாடும்
தில்லையிற் கூத்தனே திருகுதாளம் செய்பவர்தம் 
தொல்லைதாங்க இயலுமாமோ எமக்கு.? (71)  28.95.2018


பிரதிநிதிகள் பணி.

நிலம்பறி போகுதென்று நீண்டஉரை ஆற்றுகின்றார்
பலமிருந்தும் தடுக்கும்வகை அறிகிலார் - நிலப்பறிப்பை
மக்களிடம் சொல்வதுதான் பிரதிநிதிகள் பணிஎன்றால்
மொக்கர்களே பதவியுமக் கெதற்கு?   (72)  29.05.2018


தமிழர் வாழ்வு.

பேசிப்பேசி யெங்கள் பொழுதைச் சாயவைக்கும்
நீசர்களுக் கேன்பதவி கொடுத்தோம்? – பேசிலிங்கு 
அவர்களும் அவர்தம் உறவுகளும் வாழ்ந்திருக்க
அவமாகு தேதமிழர் வாழ்வு.       (73)  30.05.2018


தமிழன் பணம்.

தமிழனிடம் உழைப்பார்கள் தமிழன்பணம் கறப்பார்கள்
தமிழுக்கு இடமில்லை என்பார்கள் - உமிழ்ந்திவரைத்
தூரத்துரத் தாவிட்டால் துயருற்றுப் போய்த்தமிழர்
ஆருமற்ற ராவரென்ப துண்மை. (74)  31.05.2018


தேர்தல் ஆர்வம்.

தேர்தல் நெருங்கிவரத் தீவிரங்கள் கூடும்இன
ஆர்வமும் பெருக்கடுத்து ஓடும் - தீர்வுபற்றிப்
பேச்செல்லா மதிகரிக்கும் புரட்சிக் கனல்பறக்கும்
மூச்செல்லாம் பதவிபெறும் வரைதான்.  (75) 01.06.2018


ஆர்வமுடன் உழையுங்கள்.

அடுத்த தலைமுறைக்காய் ஆர்வமுடன் உழையுங்கள்
எடுத்த பணிவெல்லும் நம்புங்கள் - விடுத்து
வெளிநாட்டு வாழ்க்கையும் வீண்வாதப் பேச்சுகளும்
ஒருநாளும் விடிவுதரா தெமக்கு.   (76)  02.06.2018


தீர்வும் வாகனங்களும்.

தீர்வெழுதப் போவதற்குத் தீர்வையற்ற வாகனங்கள்
ஆருமற்ற ஏதிலியாய்த் தமிழர்கள் - பார்முழுதும்
தேடினுங் கிடைக்காத சீமான்கள் பெற்றுத்தந்த
கேடுகளுக் களவுண்டோ காண்?  (77)  03.06.2018


உய்யுமோ நாடு?

தூங்கி வழியுமிடம் துவேசம் விதைக்குமிடம்
ஈங்கிதன் பேர்பார் ஆளும்மன்றம் - ஏங்கி
மக்கள் காத்திருக்க மந்திரிகள் துயில்கொள்ள…
எக்கால முய்யுமிந் நாடு?   (78)  04.06.2018


ஆசைவார்த்தை.

தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுதனைக் காண்போமென
ஆசைவார்த் தைகூறுகிறார் இன்றுசிலர் - மேசையில்
பிரச்சினை இருந்தபோது போர்தொடுத்து எமையடக்கக்
கரிசனையா யிருந்ததெல்லாங் கனவோ?  (79)  05.06.2018


தேர்தற் திருகுதாளம்.

தோள்மீது கைபோட்டுத் தொடர்ந்துநாம் போவோமென்றார்
ஆள்கின்றோம் நாமென்றும் உறுதிதந்தார் - பாழும்
தேர்தல் நெருங்கிவரத் திருகுதாளம் பேசுகின்றார்
ஆருமற்ற ராயினரோ மக்கள்?   (80)  06.06.2018


காணாமற்போகும் குழு.

காணாம லாக்கப்பட்டோர் காணாமற் போனாரெனக் 
காணாமற் போகும்குழு தெரிவிக்கும் - வீணாக
ஆர்ப்பாட்டம் செய்தென்ன அழுது அரற்றியென்ன
தீர்ப்பிதுதான் வருமென்று தேர்.  (81)  07.06.2018


புதிய கதை.

தேர்தல் நெருங்கிவரத் திடீரென அறிக்கைகளில்
ஆர்வம் பெருக்குகிறார் முதலமைச்சர் - சீர்மைதரு
அதிகாரம் இல்லையென்று இப்போதா தெரிந்துகொண்டார்… 
புதிதாக வழக்குக்கதை ஏன்?  (82)  08.06.2018


தென்றலே கூறு.

அதற்குச் சேர்வேன்: இதற்குச் சேரமாட்டேன்:
எதற்காகவும் கொள்கை மாறேனென்று. – குதர்க்கமாய்ப்
பேசுத லன்றியிவர் சாதித்த தென்னவென்று
வீசுவட தென்றலேநீ கூறு.  (83)  09.06.2018


வீட்டுமுற்றமும் போயிற்று.

வீட்டு முற்றத்தையும் வேற்றானி டமிழந்து
நாட்டுத் தீர்வுபற்றிப் பேசுகிறோம் - ஏட்டுச்
சுரைக்காயை நம்பி அரசியல் செய்பவர்க்கு
இரையாகிப் போகுதெங்கள் இனம்  (84)  10.06.2018


குற்றமற்ற யுத்தம்.

குற்றம் செய்யாமலொரு யுத்தம்செய் தார்கள்
சற்றும் தவறின்றி நடந்தார்கள் - மற்றும் 
ஒன்றரை லட்சம்பேர் தாமாக மாய்ந்ததற்கு
நன்றாமோ அரசைக்குறை கூறல்.?   (85)  11.06.2018



வரணி கண்ணகையம்மன் தேர்.

எந்திரத்திற் பூட்டிக்கோவில் தேரதனை இழுக்கின்ற
தந்திரந்தான் உலகில் சரியாமோ? – அந்தரத்தில்
இனம்நொந்து கெட்டாலும் இவர்கள் திருந்தமாட்டார்
மனம்நொந்து போதலின்றி வேறென்?  (86)  12.06.2018


சிவனின் நிலை.

பாதி அமைச்சுக்காய்ப் பண்பாடு தொலைத்தவர்கள்
மோதி விழுகின்றார் நம்நாட்டில் - ஆதி
சிவனேயுன் நிலைகாக்கச் சிலைமறுப் பாளன்வரின்
அவமானம் வேறுண்டோ நெறிக்கு?. (87) 13.06.2018


தமிழர் நிலை.

விடையேறுஞ் சிவனாரினி நடைபயில்த லேநன்று
விடைகூடக் களவாடப் படலாம் - நடைபயின்று
இலங்கையைச் சுற்றிப் பார்த்தாற்றான் தெரியும்
களலங்கிடும் தமிழர் நிலை   (88)  14.06.2018


ஆகுங் காரியங்கள் செய்க.

காகங் கரைவதுபோல் காலத்திற் கரையாமல்
ஆகுங் காரியங்கள் செய்தல்மேல் - வேகம்
இருக்கிறது என்பதற்காய் எல்லாந் தெரிந்தவர்போல்
கருத்துரைத்தல் நன்றாமோ சொல்?  (89)  15.06.2018


அழிவம் திண்ணம்.

வெள்ளெருதை யாரோ வெட்டிக்கறி ஆக்கியதால்
தள்ளாடியே சிவனார் நடக்கின்றார். – உள்ளநகை
எல்லாம் பறிபோகும்: உருவங்கள் சிதைவாகும்
சொல்லாம லேயழிவம் திண்ணம்.  (90)  16.06.2018


ஆலயத்துள் வருவார்.

பசுவெட்டிப் பதப்படுத்திப் பக்குவமாய் உணவருந்தி
பசுபதியின் ஆலயத்துள் வருவார். - இசைமுழங்க
மாலையிட்டு வரவேற்று மந்திரங்கள் பலசொல்லி
கோலமிட்டுப் பூசகரும் மகிழ்வார்.  (91)  17.06.2018



பொருந்தா நியமனங்கள்.

எல்லோரு மாயிவரை ஆட்சியி லேற்றிவைத்தோம்
நல்லோர்க ளாயிருப்ப ரென்றெண்ணி – பொல்லாத
நியமனங்கள் செய்கின்றார்: நீதியைக் கொல்கிறார்
பயமின்றி நாம்வாழ்த லியல்போ?  (92)  18.06.2018


முதலமைச்சுப் பதவி.

வடக்குக்கோ கிழக்குக்கோ முதலமைச்சர் யாரென்று
இடக்கான தீர்மானம் எடுக்கலாமோ – நடக்கும்
சூழ்நிலையை அனுசரித்த லன்றியிப் போதிருந்தே
ஆழ்மனதால் மோதுவது சரியோ?  (93)  19.06.2018


தேர்தல் அனுமதி.

ஞானப்பா லுண்டவரின் ஞானத்தி லினித்தவர்க்கே
ஆனவினித் தேர்தலிலே அனுமதியாம் - தேனருந்து
வண்டாக எவர்சுற்றிப் பறந்தாலும் ஐயாவின்
செண்டாகு பவர்க்கேயச் சிறப்பு   (94)  20.06.2018


வறுமையிலும் வழ்வா?

ஏழைகளைக் கூட்டுகிறார்: ஏதேதோ நிறுவனமாம்
கோழைக ளாய்ப்பணத்தைச் சுரண்டுகிறார் - நாளையிவர்
நடுத்தெருவில் நின்றுழல்வர் நாய்கூடத் திரும்பாது
அடுத்தவரின் வறுமையிலும் வாழ்வா?  (95)  21.06.2018


கையாலாகாதவர்கள்.

பக்கத்துத் தெருவிருந்;தோர் பருவமச்சா னையழைத்துக் 
கொக்கரித்து மகிழ்ந்து விருந்துமிட்டு – எக்கணமும்
எமையாள வல்லஐயா நீங்களன்றோ எனவுரைப்போர்
தமையாரும் ஏற்பரோ சொல்?    (96)  22.06.2018


இராசதந்திரம்.

பதினொன்றை ஏழு பக்குவமாய் விழுங்கிவிட்டு
இதுராஜ தந்திரமாம் என்கிறதே – மதிகெட்ட
தண்டத் துரைகளுக்குத் தமிழர்கள் வாக்களித்துக் 
கண்டபயன் இதுதானென் றறி.  (97)  23.06.2018


கடையர்கள்.

நடைமுறை தெரியார்க்கு எப்பதவி கிடைத்தாலும்
கடைநிலையிற் றானவர்கள் நிற்பர் - இடையிடையே
தத்துவங்கள் உதிர்ப்பர் தமிழர்க்கே கிழக்குஎன்பர்:
இத்தனைநாள் உழைத்ததெலாம் வீண்.  (98)  24.06.2018


கனவு அழிகின்றதோ?

ஐயாவுக் கமைச்சரவை தான்பொருத்த மாமென்று
மெய்யாக வேகணேசர் சொல்கிறார் - ஐயாவின்
வழியென்ன தோற்றதோ? திறன்குறைந்து போனதோ?
ஆழிகின்ற தோதமிழர் கனவு?    (99)   25.06.2018


தலைவர்களுக்கு அர்ப்பணம்.

இரத்தினப் பிரியஎனும் இராணுவ அதிகாரி
எத்தனை கச்சிதமாய் மனம்வென்றார்? – அத்தனை
தேர்தலிலும் வாக்களித்த தமிழர்நிலை உயர்த்துதற்கு
ஆர்வமற்ற நம்மவர்க்கீ தர்ப்பணம்.   (100)  26.06.2018


நிறைவு.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5