தமிழ் இலக்கணம் அறிவோம். - இயல் 02 - பகுதி 11-2

பதவியல் 2 பகுதி 11 - 2

ஆகுபெயர்.  (தொடர்ச்சி)

7. நீட்டலளவாகுபெயர்.

புடைவைக் கடைக்குச் செல்லும் ஒருவர், தனக்குரிய துணியைத் தேர்வு செய்துவிட்டு “மீற்றர் என்னவிலை?” என்று கேட்பாராகில் கடைக்காரர் வைத்திருக்கும் மீற்றர்ச் சட்டத்தைக் கேட்பதாக யாரும் கருத மாட்டார்கள். துணியைக் கேட்கிறார் என்றே பொருள் கொள்ளப்படும்.

அதேபோல் கயிறு வாங்க வருகின்ற ஒருவரும் கடைக்காரரிடம் “மீற்றர் என்ன விலை?” எனக் கேட்கக் கூடும். இங்கும் மீற்றர் எனுஞ்சொல் அளவைத்தடியைக் குறிக்காது. மாறாக கயிற்றைக் குறிக்கிறது.

எனவே, மீற்றர் எனும் நீளத்துக்கான அளவு தன்னைக் குறிக்காமல் துணி, கயிறு என்பவற்றுக்கு ஆகிவருவதால் நீட்டலளவாகு பெயர் எனப்படுகிறது.

தம்பி நூறு மீற்றரைக் குறுகிய காலத்துள் ஓடிமுடித்தான் எனும் வாக்கியத்தில் நூறுமீற்றர் என்பது  ஓடுதளத்தைக் குறிப்பதால் அதுவும் நீட்டலளவாகு பெயராகிறது.

இந்தியத் தமிழகத்தையும் ஈழத்தமிழகத்தையும் பதினெட்டு மைல் பிரித்திருக்கிறது என்று கூறின் அது நீரிணையின் குறுக்களவைக் கூறுவதால் அது நீட்டலளவாகு பெயர் எனப்படுகிறது.

எனவே, நீளத்தைக் குறிக்கின்ற அளவீடுகள் மீற்றர், கிலோமீற்றராய் இருந்தாலென்ன, அங்குலம்,  அடி, யார், சங்கிலி, பர்லாங்கு, மைல் எனப் பழையமுறையில் அமைந்தாலென்ன, சாண், முழம், பாகம் என நம்மவர் முறையிற் கொண்டாலென்ன, அவை தம்மைக் குறிப்பிடாமல் தம்மைப் பயன்படுத்தி அளவீடு செய்யப்படும் பொருள்களைக் குறிக்குமாயின் அவையெல்லாம் நீட்டலளவாகு பெயர் எனப்படும் என்பதை மனதிற் கொள்க.


8. நிறுத்தலளவாகு பெயர்.

மீன் விற்பவரிடம், அரைக்கிலோ தாருங்கள் எனக் கேட்டாலோ, வெங்காய வியாபாரியிடம் கிலோ என்ன விலை என்று வினவினாலோ, அவை மீனையும் வெங்காயத்தையும் குறிக்கின்றனவே யன்றி நிறுத்தல்அளவான கிலோவைக் குறிப்பதில்லை என்பது வெளிப்படை. கிலோ எனப்படும் நிறுத்தலுக்கான அளவு நிறுக்கப்படுகின்ற பொருட்களுக்கு ஆகி வருவதால் நிறுத்தல் அளவாகு பெயர் எனப்படுகிறது.

“நாட்டின் அரிசித் தட்டுப்பாட்டை உடனடியாக நீக்கும் பொருட்டு பத்தாயிரம் மெட்ரிக்தொன் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது.” என்ற செய்தியில் இறக்குமதியான பத்தாயிரம் மெட்ரிக்தொன் என்ற நிறுத்தல் அளவு அரிசிக்கு ஆகி வருவதால் அது நிறுத்தலளவாகு பெயராகிறது.

கிராம் தொடங்கி மெட்ரிக்தொன் வரையிலான புதிய அளவீடுகளும், அவுன்ஸ் தொடங்கி தொன் வரையிலான பழைய அளவீடுகளும், மஞ்சாடியில் தொடங்கும் தமிழர்களின் நுண்பொருள்களுக்கான நிறுவை அளவீடுகளும் தம்மைக் குறிப்பிடாமல் தம்முதவியாற் கணிக்கப்படும் பொருள்களைக் குறிப்பிடுமிடத்து அவை அனைத்தும் நிறுத்தலளவாகு பெயராகின்றன.

9. முகத்தலளவாகு பெயர்.

அரிசி, பருப்புப் போன்ற தானியங்களும், பால், நெய், தயிர், எண்ணெய் போன்ற திரவவகைகளும் அள்ளி அளக்கப்படுகின்ற முகத்தல் அளவையாற் கணிக்கப்பட்டு வந்தன. எனினும் தற்காலத்தில் தானியவகையும் மாவகையும் நிறுத்தல் அளவைக்கு மாற்றப்பட்டபோதும் கிராமங்களில் மரபுவழியான முகத்தலளவையே பெரிதும் பேணப்பட்டுவருகின்றன என்பதையும் நினைவு படுத்தி முகத்தலளவாகு பெயருக்கான எடுத்துக்காட்டுகளைப் பார்க்கலாம்.

“எத்தனை மூடை விளைச்சல் கிடைத்தது? என ஒருவர் விவசாயியைப் பார்த்துக் கேட்பாராகில் மூடை என்ற சொல் குறிப்பிட்ட கொள்ளளவைக்  கொண்ட நெல்லைக் குறிக்கிறது எனலாம். எனவே இங்கு மூடை அளக்கின்ற சாக்குப்பையைக் குறிக்காது நெல்லுக்காகி வருவதால் அது முகத்தலளவாகு பெயர் எனப்படுகிறது.

“வயலில் வேலை செய்தவர்களுக்கு இன்று எத்தனை படி தந்தார்கள்?” எனக் கேட்குமிடத்து படி என்ற அளவை நெல்லுக்காகி வருவதால் அது முகத்தலளவாகு பெயராகிறது.

பாற்கடைக்குச் சென்று “இரண்டு பக்கட் தாருங்கள்,” எனக் கேட்டாலோ, எண்ணெய் விற்குமிடத்தில் “ஒரு போத்தல் தாருங்கள், அல்லது இரண்டு லிற்றர் தாருங்கள்.” எனக் கேட்டாலோ அவை பாலையும் எண்ணெயையும் குறிப்பிடுவதால் முகத்தலளவாகு பெயர் எனப்படுகிறது.

எனவே, கொள்ளளவைக் குறிக்கின்ற லிற்றர், போத்தல், கலன், சிறங்கை(கையின் கொள்ளளவு) கொத்து, படி, சேர், பறை, வீசம், அவணம் போன்ற அளவீடுகள் தம்மைச் சுட்டாது தம்மால் அளக்கப்படும் பொருளைச் சுட்டுமிடத்து அவை அனைத்தும் முகத்தலளவாகு பெயராகின்றன என்பது கவனிக்கத்தக்கது.

10. எண்ணளவாகு பெயர்.

“அவன் மிகவும் குழப்படிகாரனாக இருக்கிறான்: இரண்டு போட்டுத்தான் வழிக்குக் கொண்டுவந்தேன்” ; “தெருச் சண்டியர்களுக்குக் காவல்துறை வந்து நாலு போட்டால் ஊர் அமைதியாக இருக்கும்.” 

இந்த வசனங்களிற் காணப்படுகின்ற இரண்டும் நான்கும் எண்களைக் குறிக்காமல் “அடி”யைக் குறிக்கின்றன என்பது வெளிப்படை. இரண்டு, நாலு ஆகிய பதங்கள் தமக்குரிய எண்களைக் குறிப்பிடாது அடியின் எண்ணிக்கைக்கு ஆகிவருவதால் எண்ணளவாகு பெயர் எனப்படுகிறது.

“நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.” என்ற வரியில் வருகின்ற நாலும் இரண்டும் தம்மைச் சுட்டாது நாலடியார்,(நாலடிப்பாடல்) திருக்குறள் (இரண்டுவரி வெண்பா) ஆகிய நூல்களையே சுட்டுவதால், அதாவது அந்த நூல்களின் பாடல்வரி எண்ணிக்கையின் அடிப்படையில் அவை ஆகிவருவதால் எண்ணளவாகு பெயர் எனப்படுகின்றன.

தேங்காய் வியாபாரியிடம் ஒருவர் “ஒன்று என்னவிலை?” என்பாராகில் அந்த “ஒன்று” தேங்காய்க்கு ஆகி வருவதால் எண்ணளவாகு பெயராகின்றது.

11. கருவியாகு பெயர்.

“அவரது தவில் என்னை மயக்கியது.”  
“நாதஸ்வரத்தை இரசிக்கத் தெரியாதவன் இசைமூடன்.” 
“நேற்று நடந்த நிகழ்ச்சியில் வயலின் மிக அருமையாக இருந்தது.” 
“அவனது வாள்முன்னே எவனால்தான் நிற்க முடியும்?” 
“முருகனின் சிலம்பம் எதிர்கொள்ள இயலாதது.” 
 “வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி.” 
“கண்ணனின் புல்லாங்குழலில் மெய்ம்மறக்காதார் யாருளர்?” 

மேற்காணப்படும் வாக்கியங்களில் வருகின்ற தவில், நாதஸ்வரம், வயலின், புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகள் அனைத்தும் தம்மைச் சுட்டாமற் தம்மால் பிறப்பிக்கப்படும் இசைச்சிறப்பைச் சுட்டிநிற்பதால் கருவியாகு பெயர் எனப்படுகின்றன.

இதேபோல், வாள், சிலம்பம் ஆகிய சொற்களும் தம்மைச் சுட்டாது தம்மைக் கொண்டிருப்பவரின் திறமையை வெளிப்படுத்துவதால் இவையும் கருவியாகு பெயர் எனப்படுகின்றன.

12. காரியவாகு பெயர். 

ஒரு காரியம் அல்லது செயன்முறை அதனோடு தொடர்புடைய பிறிதொன்றுக்கு ஆகிவருமிடத்த அது காரியவாகு பெயர் எனப்படுகிறது.

“தம்பி, மருத்துவம் படிக்கிறான்.”
“குமார், பொறியியலுக்கு எடுபட்டிருக்கிறான்.”
“தங்கை ஒப்பனை தெரிந்தவள்.”

இங்கே மருத்துவம், பொறியியல், ஒப்பனை என்பவை நடைமுறைச் செயல்களால் நிரம்பப்பெற்ற காரியங்களாகும். 

மருத்துவம் படிக்கிறான் எனும்போது அச்செயன்முறைகளைப் பயிற்றுவிக்கும் நூல்களைப் படிக்கிறான் என்பதுதான் பொருள். மருத்துவம் தொடர்பான கற்கைநெறி அல்லது நூல்கள் மருத்துவம் எனும் காரியத்துக்கு ஆகிவருவதால் காரியவாகு பெயர் எனப்படுகிறது.

பொறிமுறைகள் தொடர்பான அறிவைத் தருகின்ற கற்கையைத் தொடர்வதற்கு குமார் தகுதி பெற்றிருக்கின்றமை இரண்டாம் வாக்கியத்தின் பொருள். எனவே பொறியியல் அறிவைத் தருகின்ற கற்கைநெறி பொறியியல் என்ற காரியத்துக்கு ஆகி நிற்பதால் காரியவாகு பெயராகிறது.

ஒப்பனை என்பது ஒரு செயன்முறை. தங்கை அச்செயன்முறைக்கான அறிவைக் கொண்டிருக்கிறாள் என்பதே  வாக்கியத்தின் கருத்து. ஒப்பனை எனும் காரியம் அது சார்ந்த அறிவுக்கு ஆகிவருவதால் அது காரியவாகு பெயர் எனப்படுகிறது.

           தொடரும்…  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5