இந்துசமய விளக்கம் 11
இந்துசமய விளக்கம் 11
சமய அனுட்டானங்கள், திருமுறை ஓதல் என்பவையின்றி இறைவனை வழிபட முடியுமா? அப்படி வழிபடுவதை இந்துசமயம் ஏற்றுக் கொள்கிறதா?
எதற்கும் ஒரு நியமம் உண்டு. சமய அனுட்டானமும் அப்படித்தான். காலையில் நித்திரை விட்டெழும் ஒருவர், காலைக்கடன்களை முடித்து, குளித்து, சுத்தமான ஆடையணிந்து, தன்பணி தொடங்க வேண்டும் என்பது எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாகும். ஆனால், எல்லோரும் இந்நியதிப்படிதான் செயல்படுகிறார்கள் என்ற சொல்ல முடிகிறதா? அவரவர் உடல்நிலை, சூழ்நிலை, காலநிலை, மனநிலை என்பவற்றை அனுசரித்து, இவற்றுள் வேறுபாடுகள் தோன்றுவதில்லையா? அதனால் அவர் உலகப்பணிகளுக்கு உகந்தவர் அல்லர் என்று ஆகிவிட மாட்டார்.
இதேபோல்தான் சமய அனுட்டானங்கள், திருமுறையோதல் என்பவையும் விதிக்கப்பட்டுள்ளன. வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள், இவற்றைக் கடைப்பிடிப்பது உத்தமம்.
பாடசாலைக்கு வருவதற்கென மாணவர்களுக்கு ஒழுங்குமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை பொதுநன்மை கருதியவையாகும். இவை கல்வியாவதில்லை. கல்விக்கான தூண்டுதல்களே இவை.
இதேபோன்றுதான் சமயஅனுட்டானங்களும், பொதுநன்மை கருதியும், உளத்தூய்மையும் நல்லொழுக்கமும் கருதியுமே ஏற்படுத்தப்பட்டுள்ளன. தூய்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருத்தல் நல்ல சிந்தனைகளுக்கான அத்திவாரம் என்பதை மறந்துவிடலாகாது. எனவேதான் சமய அனுட்டானங்கள் உடற்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் பேணத் தூண்டுவதன்மூலம் உளத்தூய்மையயை உருவாக்க முனைகிறது.
நாம் வெப்ப வலயப் பகுதியில் வாழ்கிறோம். எனவே நாங்கள் ஆலயத்துக்குச் செல்லும் முன்னர் குளித்து, தோய்த்து உலர்ந்த ஆடையை உடுத்திக் கொள்வது கஸ்டமான ஒன்றல்ல. மாறாக, உடலைச் சுத்தம் செய்யாமலும், தோய்க்காத ஆடை அணிந்தும் செல்வதாக வைத்துக் கொள்வோம். எங்கள் உடல் வியர்வையின் பிசுபிசுப்பு எங்களுக்கே அருவருப்பாக இருக்காதா? எங்களுக்கே இப்படியென்றால், அருகில் நிற்பவர் எவ்வாறு சகித்துக் கொள்வார்? வியர்வை மணமும் அருவருத்த மனதும் கொண்டநிலையில் எங்ஙனம் இறைவன்பால் மனதைத் திருப்பி வழிபட முடியும்? நாம் ஒவ்வொருவரும் பேணும் சுத்தம், எம்மையும் பிறரையும் உடலாலும் மனதாலும் தூய்மையுறச் செய்து இறைவன்பால் சிந்தனையைத் திருப்ப உதவுகிறது.
கோயிலில் வீண்பேச்சுத் தவிர்த்தல், ஆடம்பர உடை ஆபரணங்களைத் தவிர்த்தல் கால்நீட்டி அமர்ந்திருத்தலைத் தவிர்த்தல் என்பவையெல்லாம் கவனம் திசை திரும்பாதிருப்பதற்காக மேற்கொள்ளப்படும் முன்னேற்பாடுகள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
இதேபோல், கிரியைகள் மந்திரங்கள் என்பவை இறைவன்பால் மனத்தினை இலகுவில் இட்டுச்செல்லும் கைங்கரியங்களாகும். நாதஸ்வரம், மேளம் என்பவற்றின் இசை, பக்தர்களை மெய்ம்மறக்கச் செய்யும் வசியங்களாகும்.
விரதங்கள்கூடச் சமய அனுட்டானங்களின் பாற்பட்டவைதாம். விரதங்கள்மூலம் மனம் தூய்மையாகிறது. உடல் ஆரோக்கியம் பெறுகிறது. எனவே, சமய அனுட்டானங்கள் என்பவை ஒருவரை மனோதத்துவரீதியில் இறைவன்பால் நாட்டம் கொள்ள வைப்பதற்கான முயற்சிகளே என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆயினும் இவை எதுவுமின்றிக்கூட இறைவனை வழிபட முடியும். ஞானியர்களும் யோகியர்களும் அனுட்டானங்களில் அக்கறை செலுத்துவதில்லை. ஞானியர் இறைவனும் தாமும் வேறல்லர் என்ற நிலையிலிருப்பவர்கள். யோகியர்கள் ஐம்புலன்களையும் அடக்கித் தமக்குள்ளேயே தெய்விக ஒளியைக்கண்டு பரவசப்படுபவர்கள். இத்தகையோருக்குச் சரியை, கிரியை ஆகிய அனுட்டானங்கள், ஆலயங்கள் என்பவை முக்கியமல்லாதவை.
ஆனால், வாழ்க்கைச் சிக்கல்கள் பலரைச் சமய அனுட்டானங்களிலிருந்து தூர விலக்கி வைத்து விடுகின்றன. இவர்கள், இறைவனை மனதில் நினைத்துக் கொண்டு வாழ்ந்தாற்கூட, அது வழிபாடு தான். தமது செயல்களின் பெறுபேறுகளுக்கு இறைவனே பொறுப்பு என்று உயர்ந்து கொண்டால் அது ஞானமாகிறது.
கடமையை நேராகச் செய்பவரிடத்தும், இரக்க சிந்தனை உள்ளவரிடத்தும், பெற்றோரைப் பேணுபவரிடத்தும், மனைவி குழந்தைகளை நேர்வழியிற் காப்பவரிடத்தும் தெய்வம் தாமாகவே தேடி வருகிறது என்று இந்துமதம் அடித்துச் சொல்கிறது. கடமைகளைச் செய்யாமல் இறைவனை வழிபடுவது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் இறைவனை நினையாமல் கடமைகளை ஆற்றுவது, என்பதை நினைவிற் கொள்ளல் நன்று. எந்தச் சூழ்நிலையிலும் இறைவனை மனதால் நினைந்து உருகி வழிபடுவதற்குத் தடை ஏற்படமாட்டாது.
கருத்துகள்
கருத்துரையிடுக