இந்துசமயவிளக்கம் 9.

இந்துசமயவிளக்கம் 9.


நாற்பாதங்கள் என்பவை எவை?  ஏன் இவ்வாறு வகுக்கப்பட்டிருக்கின்றன?

சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவையே நாற்பாதங்கள் எனப்படுகின்றன. நாற்பாதங்கள் என்பதன் பொருள் இறைவனை அடைவதற்கான நான்கு வழிகள் என்பதாகும்.

இவை மனிதர்களின் ஆன்மிகத் தரத்துக்கேற்ப வகுக்கப்பட்டிருக்கின்றன. இவற்றுள் கீழ்நிலை மேல்நிலை என்று எதுவும் கிடையாது. பேசமுடியாத பிள்ளைகள், முரட்டுப்பிள்ளைகள், அறிவார்ந்த பிள்ளைகள், செல்வம் நிறைந்த பிள்ளைகள் என்று வேறுபட்ட பிள்ளைகள் வெவ்வேறு வடிவத்தில், அல்லது செயற்பாடுகளின்மூலம் தாயிடம் அன்பு செலுத்துவதாக வைத்துக் கொள்வோம். செயற்பாடுகள், வடிவங்கள் என்பவை வெவ்வேறாக இருந்தாலும், தாயிடம் செலுத்தும் அன்பில் நாம் ஏற்றத்தாழ்வு காணமுடியுமா? அவ்வாறுதான் இறைவனை நாம் நாடுகின்ற பாதைகள் வேறாயினும், பக்தியுணர்விலும் பயனிலும் வேறுபாடு இருப்பதில்லை.

இனி இவற்றை உலகியல் நடைமுறைகளோடு நோக்குவோம். சரியை என்பது பிறவுயிர்களுக்கு ஊறு செய்யாமல் வாழும் முறை எனலாம். ஆலயப் பணிகளுக்கு உதவுதல், நற்பணிகள் செய்வோருடன் இணைந்து அவர்களது பணிக்கு முடிந்தவரை உதவியாக இருத்தல் என்பவை சரியை வழிபாட்டின் பாற்படுகின்றன. வழிபாடானது அலயத்தை மையமாகக் கொண்டு விளங்குவதால், ஆலயத்தைச் சுத்தமாக வைத்திருத்தல், ஆலயச் செயற்பாடுகளுக்கு உதவுதல் என்பவை சரியைத் தொண்டு எனப்படுகின்றன.

பொதுவாக, உண்மையான ஆலயத் தொண்டரும், உண்மையான சமூகத் தொண்டரும் சரியை வழிபாடியற்றுபவர்களாகக் கருதப்படுகிறார்கள். ஆலயத் தொண்டருக்கு இயல்பாகவே ஆலயத்திற் பற்றும் இறைவன்பால் பக்தியும் மிகுந்திருப்பதால் அவரது செய்கை ஒவ்வொன்றும் ஆலயவழிபாடு சார்ந்ததாகவே இருக்கின்றது. அதேபோல், சமூகத் தொண்டருக்குச் சமூகத்தின்மேல் பற்றும், தன் செயற்பாட்டில் நேர்மையும் இருப்பதால் அவரது செயற்பாடுகளும் சமூகநலஞ் சார்ந்தனவாகவே இருக்கின்றன.

சமயசாரங்களை உணர்ந்து, அதன்படி நடந்து வழிபாடியற்றுவதோடு, பிறரையும் அவ்வாறு செயற்பட வைக்கத்தக்க வகையில் முன்மாதிரியாக நடந்துகொள்ளும் ஒருவர், கிரியை வழிபாடு செய்பவராகின்றார். ஆலய நிலையில் இத்தகைய ஒருவர் மந்திரங்களை அறிந்தவராக, கிருத்தியங்களில் தெளிவானவராக, திருமுறைகளை முறைப்படி ஓதுபவராக, விரத அனுஸ்டானங்களைச் சரிவரக் கடைப்படிப்பவராக இருப்பார். 

சுமூகவியல் நோக்கில் பிறருக்குப் பயன்படும் படியான வாழ்க்கையைத் தானும் வாழ்ந்து பிறரும் வாழ வகைசெய்யும் வழிகாட்டியாக இருப்பார். கிரியை என்பது முறைப்படியான செயற்பாடுகள் என்பதைப் புரிந்து கொண்டால் எல்லாம் தெளிவாகும்.

புலன்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது யோகம் எனப்படுகிறது. இறைபக்தியாளர் ஒருவர், புலன்களைத் தீயவழியிற் செல்லவிடாது அவற்றை அடக்கி, இறைவன்பால் செலுத்துவார். சமூகப் பணியாளர் புலன்களைக் கூடாவொழுக்கம், தீச்செயல்கள்பால் செல்லவிடாது தடுத்து, நற்சிந்தனை நல்லொழுக்கம் பேணுபவராக அமைவர். கடவுள்பக்தர் புலன்களைத் திருத்தித் தன்னுள் இறைவனைக்காண யோகம் வழிவகுப்பது போலவே, சமூகஆர்வலர் தன்னைத் திருத்தினால் தரணியே திருந்தும் என்ற சுயதிருத்தத்தில் கவனத்தைச் செலுத்துகிறார். இது மூன்றாவதுவகை வழிபாடு.

இறுதியாக ஞானமார்க்கம் கூறப்படுகிறது. ஞானியர் செயலின்பால் கட்டுப்பட்டவர்களல்லர். தன்னையுணர்ந்து, இறையையுணர்ந்து இறைவனோடு ஒன்றிப்போனவர்கள். இவர்களது செயலில் பற்று இருக்காது. பந்தபாசம், நட்புப்பகை, வேண்டியவர்வேண்டாதவர் என்ற பேதங்களைக் கடந்து, யாவும் இறைமயம் எனக் கொள்வோரே ஞானநிலையை அடைந்தவர்களாவர். பற்றற்றோர் என்றுகூட இவர்களைக் கூறலாம். பாவபுண்ணியங்கள் பற்றிய பேதங்கள் எவையுமின்றி தம்செய்கையை அப்படியே இறைவனிடத்தில் ஒப்படைத்துவிடும் இயல்பினர் இவர்கள்.

இவ்வாறான சரியை, கிரியை, யோகம், ஞானம் ஆகிய நான்கு வழிமுறைகளைப் பற்றிய அறிவைத்தான் ஒருவரால் பெறமுடியுமேதவிர, கடைப்பிடித்தல் என்பது உயிரின் ஆன்மிக நிலையாலேயே தீர்மானிக்கப்படுகிறது என்பதை உணர்க.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5