துயரப் பொங்கல்.
துயரப் பொங்கல்.
வெள்ளத்தால் வாடியொரு பொங்கல்
வேதனையால் விம்மியொரு பொங்கல்
உள்ளத்தால் வருந்தியொரு பொங்கல்
உணர்வுகளை அள்ளியொரு பொங்கல்
துள்ளித்தான் பல்கலைக்குச் சென்று
துயருற்றுச் சிறையினிலே இன்று
அள்ளிய உணர்வுகளில் வாழும்
அன்பிளவல் களுக்குஒரு பொங்கல்
வறுமையைப் போக்கிடவென் றெண்ணி
வாஞ்சையுடன் சவூதிசென்று மறைந்த
சிறுபெண் ரிஸானாவின் துயரத்தைச்
சிந்தையிலே நிறுத்தியொரு பொங்கல்
உரிமையுடன் நாம்வாழ உழைத்து
உருக்குலைந்து தம்வாழ்வை இழந்து
தெருவினிலே நடைப்பிணமாய்த் திரிகின்ற
தீரர்களை வணங்கியொரு பொங்கல்.
வீடிழந்து முகாம்களிலே வேதனையில்
வீழ்ந்துழலும் உறவுக்கா யொருபொங்கல்
கூடிவாழ்ந்த மகிழ்ச்சிதனை இழந்தின்று
குமுறுகின்ற மனங்களுக்கா யொருபொங்கல்
தேடிவரும் நலமொருநாள் என்று நம்பும்
திண்ணுள்ளத் தமிழருக்கா யொருபொங்கல்
நாடிவரும் நல்லுழவர்க்கா யொருபொங்கல்
நம்மினத்தின் விடிவுக்கா யொருபொங்கல்.
எம்மவரை வதம்செய்து மகிழ்நதிருக்கும்
எத்தர்திமிர் அடக்குதற்கா யொருபொங்கல்
நம்மவர் கண்முன்னே அவர்கள்வீழ்ந்து
நலிந்துபிழை உணர்வதற்கா யொருபொங்கல்
விம்மலுடன் நம்பெண்கள் விழியில்வழிநீர்
வேற்கூர்மை பெறுவதற்கா யொருபொங்கல்
எம்மண்ணில் எம்மக்கள் நிமிர்ந்திருக்க
எழுகதிரை வணங்கிவர வேற்கும்பொங்கல்.
(2013 தைப்பொங்கற் கவிதை)
கருத்துகள்
கருத்துரையிடுக