கட்டுரை : சூறாவளி 1964 டிசம்பர். ஐம்பத்து மூன்றாண்டுகள் நிறைவு
.
அன்று 1964 டிசம்பர் 22. செவ்வாய்க்கிழமை என ஞாபகம். எனக்கு அப்போது வயது 14. திருக்கோணமலை வெலிங்டன் அடை வீதியில் குடியிருந்தோம்.
வெலிங்டன் அடைவீதி அன்றைய நாட்களில் கிறவல் பாதையாகவே இருந்தது. மின்சார வசதியை ஒருசில வசதிபடைத்தோரே பெற்றிருந்தனர். மின்சாரநிலைய வீதியிலமைந்திருந்த நிலையத்தில் இராப்பகலாய் மின்னாக்கி இரைந்து கொண்டிருக்கும். அங்கிருந்துதான் மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டது. மடத்தடியுடன் மின்சாரவசதி எல்லை முடிவடைந்துவிடும். மங்கலான மின்விளக்குகளே அப்போது காணப்பட்டன.
காலையிலிருந்து சூரியனைக் காணவில்லை. எனக்கு அது முதல் அனுபவமாகவும் ஆச்சரியமூட்டும் விடயமாகவும் இருந்தது. மாலையாயிற்று. மெல்லமெல்ல வீசிக் கொண்டிருந்த காற்று வழக்கத்துக்கு மாறாக உரத்து வீசத்தொடங்கியது. காற்று உரத்து வீசாதிருந்தால் புகையிரதம் வருகின்றபோது கேட்கின்ற இரைச்சலை வைத்தும்ää கடற்படையினர் ஊதுகின்ற விசிலை வைத்தும் ஊர்மக்கள் துல்லியமாக நேரத்தைக் கணித்துவிடுவார்கள். எனவே மாலையாயிற்று என்பதைத் தவிர வேறுவகையில் நேரத்தைக் கணிக்க முடியவில்லை.
நேரம் போய்க்கொண்டிருந்தது. காற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டே வந்தது. மெதுமெதுவாக இருளும் சூழத் தொடங்கியது. எங்கள் வீட்டில் மின்சாரவசதி கிடையாது. வீடு இருளாகத் தொடங்கியது. அம்மா அரிக்கேன் விளக்கைக் கொளுத்திவைத்தார். அரிக்கேன் விளக்கு காற்றைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட விளக்கு. அது பாதுகாப்பாக இருக்கக்கூடும் என்பது அம்மாவின் நம்பிக்கை.
தெருவில் இரண்டுபேர் வெளவாற்சிறகு போன்ற மழைக்கோட்டை அணிந்து, கைகளில் எரியவிடப்பட்ட அரிக்கேன் விளக்குகளை அங்குமிங்கும் அசைத்தபடி “புயல் வரப் போகிறது. எல்லோரும் கவனமாக இருங்கள். புயல் வீசுகின்றபோது வெளியே வரக்கூடாது. அது ஆபத்தானது. கவனம்.” என்று சொல்லிக் கொண்டே போய்க்கொண்டிருந்தார்கள். அவர்கள் நகராட்சி மன்றத்தால் அனுப்பப்பட்ட ஆட்களென்றும் இதேபோன்று வெவ்வேறு ஆட்கள் எல்லாத் தெருக்களிலும் சொல்லித் திரிவார்கள் என்றும் அப்பா சொல்லிக்கொண்டார்.
நிலம் இருண்டுபோனது. மழையுடன் காற்றும் அதிகரித்தது. தந்தையார் புயல் தொடங்கிவிட்டது. பிள்ளைகள் கவனம் என்றார். டோர்ச்லைட் வைத்துக்கொள்ளும் வசதிகூட எங்களுக்கு இருந்திருக்கவில்லை. காற்று உள்ளேவராமல் தந்தையார் கதவை அடைத்துக் கொண்டார். எங்களிடம் ஒரேயொரு மேசையே இருந்தது. அதன்மேல் என் சகோதரர்களை ஏற்றி வைத்தக்கொண்டு மூத்தவனான நான் பாதுகாப்புக்காக அவர்களருகே நின்றிருந்தேன். காற்றின் வேகம் தாங்காமல் அரிக்கேன் விளக்கும் அணைந்து விட்டது. அம்மா எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அதனை மீண்டும் ஒளிரவைக்க முடியவில்லை.
அடுத்த வீட்டில் குடியிருந்த ஆண்கள் மூன்றுபேரும் தங்கள் பாதுகாப்புக்கருதி எங்களுடன் இணைந்து கொண்டனர். இன்னோரு குடும்பமும் வந்து சேர்ந்து கொண்டது. தந்தையாரும் மற்றைய ஆண்களும் கதவருகே நின்று காற்றால் கதவு திறந்துவிடாதபடி பலத்தைப் பிரயோகித்துத் தடுத்துக் கொண்டிருந்தனர். கும்மிருட்டு..ஒருவர்முகம் ஒருவருக்குத் தெரியவில்லை. காற்றின் இரைச்சலும் தடதடவென்ற சத்தங்களும் எம்மைப் பயமுறுத்திக் கொண்டிருந்தன. தாயாரும் அடுத்தவீட்டு மாமியும் என்னருகே வந்து நின்று கொண்டனர்.
எங்கள் வீடு பனைமரங்களால் கூரையிடப்பட்டுத் தடித்த தகரத்தினால் வேயப்பட்டிருந்தது. வீடு பலமானது பயப்படத்தேவையில்லை என்று ஆளாளுக்கு ஆறுதலும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். பலமான வீடும் அவ்வப்போது அதிரத் தொடங்கியது. வீட்டுக்குள் மழைத்துளிகள் விழத்தொடங்கின. முகம் பார்க்க முடியவில்லை. பயந்து போயிருந்தோம். அம்மாவின் அரவணைப்பும் பெரியோர்களின் வார்த்தைகளுமே எனக்குத் துணையாயிருந்தன.
சற்றுநேரத்தில் வீட்டுக்குள் நீர் புகத்தொடங்கிவிட்டது. எனது முழங்கால் மட்டத்தையும் தாண்டிக் காற்சட்டையை நனைத்துக் கொண்டிருந்தது. அம்மா நீரைச் சுவைத்துப் பார்த்துவிட்டுக் கடல் பெருகி வீட்டுக்குள்ளும் வந்து விட்டது. நாங்கள் எல்லோரும் அழியப்போகிறோம் எனப் பெருஞ்சத்தத்துடன் அழத் தொடங்கிவிட்டார். நானும் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தேன். தந்தையார் அம்மாவை அதட்டி ஆசுவாசப் படுத்தினார்.
புயல் எவ்வளவு நேரம் நீடித்தது என்றோ. எத்தனை மணிக்குத் தொடங்கி எத்தனை மணிக்கு ஓய்ந்தது என்றோ என்னால் தெரிந்துகொள்ள முடியவில்லை. காற்றின் வேகம் குறைந்தபோது வீட்டுக்குள் புகுந்த நீரும் வடியத் தொடங்கியது. என்றாலும் விடியும்வரை தரையில் உட்காரவோ, அமைதிகொள்ளவோ முடியவில்லை. எவரிடமும் குளிர்ச்சட்டை இருக்கவில்லை. நிலந்தெளியும்வரை அனைவரும் குளிரால் நடுங்கிக் கெண்டிருந்தோம். எனது சகோதரர்களுக்க மாத்திரம் சற்றே தடித்த ஆடைகளால் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. அவையும் குளிரைத் தடுக்கக்கூடியதாக இருக்கவில்லை.
நிலம் தெளிந்ததும்தான் எங்கள் அவலநிலை புரிந்தது. நாங்கள் நின்ற பகுதியைத்தவிர மற்றைய அறைகளின்மேல் கூரைஎதுவும் இருக்கவில்லை. வீட்டுக்கூரைமரங்கள் சில முறிந்தும் போயிருந்தன. வீட்டின் அரைச்சுவர் எல்லாம் நீரிற் கரைந்து காணாமற் போயிருந்தன. சமையலறைப் பொருட்கள் உட்பட வீட்டின் தட்டுமுட்டுச் சாமான்கள் அனைத்தும் வெள்ளத்தில் அள்ளுண்டு போயிருந்தன. சுமார் ஐம்பதுயார் தூரத்தில் எதிர்வளவில் நின்றிருந்த தென்னைகளில் இரண்டு வட்டுடன் கழன்றுவந்து வீதியையும் தாண்டி எங்கள் வீட்டுக் கூரையின் படுத்திருந்தன.
தென்னைகள் விழுந்தும் வீடு சரிந்து போகாதிருந்தமை கடவுளின் செயல் என்று பெரியவர்கள் பேசிக் கொண்டார்கள். காணியின் பக்கத்தே ஓடிக்கொண்டிருந்த பெரிய வடிகாலூடாக் காற்றின் வேகத்தால் புகுந்த கடல்நீரே வீட்டுக்குள் வந்ததாகவும் கூறிக்கொண்டனர். விடிந்ததும் அந்தப் பொழுதுகள் எனக்கு மகிழ்ச்சியைத் தந்தன. இரவுப் பயம் நடுக்கம் எல்லாம் மறந்த கதைகளாயின.
வீட்டு முற்றமெங்கும் தேங்காய்களும் இளநீர்களும் சிதறிக்கிடந்தன. தென்னோலைகளை விலக்கிக் கொண்டு அவற்றைச் சேகரிக்கத் தொடங்கினேன். முன்காணியில் ஒன்றிரண்டு தென்னைகளைத் தவிர அனைத்தும் சரிந்து கிடந்தன. அந்தக் காணி இப்போது அரசடிச்சந்தியில் சர்வதேசப் பாடசலை அமைந்திருக்கும் இடந்தொடங்கி கிறிஸ்தவப் பாதிரிமார்கள் வசிக்கும் கட்டடம்வரையில் ஒரே நிலமாக நீண்டு தென்னந்தோட்டமாக அப்போது அமைந்திருந்தது.
புனித சூசையப்பர் கல்லூரிவளவில் கடற்கரைப் பக்கமான பகுதியில் நின்றிருந்த பனைமரங்கள் வேரோடு சாய்ந்து போயிருந்தன. பாதிரிமார்களின் இன்றைய இல்லம் பாதிப்பு எதுவுமின்றிக் கம்பீரமாக நின்றிருந்தது. பாதிரிமார்கள் எங்கள் வீடுகளைத் தேடிவந்து சிறுவர்களையெல்லாம் அழைத்துச் சென்று, தங்களிடமிருந்த ஆடைகளை அளவுபார்த்து எங்களுக்கு அணியத்தந்தனர். அவை விளையாட்டுத்துறை ஆடைகளாக இருந்தபோதிலும் மாற்றுடையற்ற எங்களுக்கு அவை வரப்பிசாதமாகவே அமைந்திருந்தன. ஒருவாரகாலமளவுக்கு எங்களுக்கு மூன்றுவேளை சுவையான சமைத்த உணவும்தந்து வீட்டில் எத்தனைபேர் இருக்கிறார்கள் என்ற தகவலையும் பெற்று அவர்களுக்கும் போதுமான உணவு கொண்டுசெல்லவும் தந்து உதவினர்.
கோட்டைக்குள்ளும், தபாற்கந்தோர் வீதியிலும், முற்றவெளியை அண்டிய கடற்படைத்தளவீதியிலும் நிழல்தரு விருட்சங்களாக நின்றிருந்த பல வாகைமரங்கள் அடியோடு சாய்ந்து போயின. நகரிலுள்ள ஒருசில பதிந்தவீடுகள் தவிர அனைத்துவீடுகளும் முழுமையாகவோ பகுதியாகவோ அழிந்து போயிருந்தன. கடைகள் அனைத்தும் தகர்ந்து பொருட்கள் நாசமாகிப்போயின. நெல்சன் படமாளிகை தவிர்ந்த அனைத்துப் படமாளிகைக் கட்டடங்களும் தரைமட்டமாகிக் கிடந்தன. வீடுகளுக்கு வேலி இல்லை. எல்லாம் திறந்த வெளிபோல் காட்சி தந்தன.
புனித சூசையப்பர் கல்லூரிக்காணி மின்சாரநிலைய வீதி, வெலிங்டன் அடைவீதி, உட்துறைமுக வீதி என்பவற்றைத் தொட்ட ஒரே நிலப்பரப்பாக அப்போது இருந்தது. அதற்குள் நின்ற சில பனைமரங்கள் வேரோடு சாய்ந்து கிடந்தன. அந்தக் காணிக்குள் கடலில் நிறுத்தப்பட்டிருந்த பத்துக்கும் மேற்பட்ட படகுகள் பரந்துபோயிருந்தன. கப்பல்களுக்குத் துணைசெல்லும் நான்கு பாரிய கடற்கலங்கள் தெருவோடு சாய்ந்து கிடந்தன. அவற்றுள் இரண்டு சிலமாதங்களுள் மீட்கப்பட்டு விட்டன. ஏனையஇரண்டும் பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கரையிற்கிடந்து இரும்புக்காக வெட்டி எடுக்கப்பட்டன.
உட்துறைமுகவீதி கடலலையாற் சிதைவுண்டு ஒற்றையடிப் பாதையைவிட மோசமாகக் காட்சியளித்தது. கடற்கரையோரத்து மதில்களெல்லாம் தரையோடு படுத்துக்கிடந்தன. இன்றைய நாட்கள் போல் அப்போது அந்தவீதி கட்டடங்களைக் கொண்டதாக இருக்கவில்லை. இருந்த இரண்டொரு கட்டடங்களும் இடிந்து காட்சியளித்தன. எலிபன்ட்ஹவுஸ் மோசமாகப் பாதிக்கப்பட்டு சோடா, ஐஸ், ஐஸ்கிறீம் உற்பத்திகள் பல மாதங்களாக நின்றுபோயின.
இறக்குமதி, ஏற்றுமதியில் முக்கிய பங்காற்றிய வி.எஸ்.ஓ இறங்குதுறை மோசமாகப் பாதிக்கப்பட்டது. எலிபன்ட்ஹவுஸ் எதிரே சுத்தியல் வடிவில் அமைந்திருந்த இறங்குதுறை இன்றும் அதன்பழைய வடிவத்தைப் பெறவில்லை. கப்பலிலிருந்த பொருட்களைக் கரைக்குக் கொண்டுவரும் வத்தை என அழைக்கப்பட்ட இழுவைப்படகுகள் பல இறக்குவதற்காக் கொண்டுவந்த பொருட்களுடன் தகர்ந்து போய்க் காட்சியளித்தன. உருளைக்கிழங்கு மூடைகள், பால் ரின்கள், நியூஸ்பிரின்ட் பேப்பர் ரோல்கள், ஒட்டுப்பலகைகள் என்பன கரையெங்கும் சிதறிக்கிடந்தன. முடிந்தவர்கள் தங்கள் இயல்புக்கேற்ப வேண்டியவற்றை அள்ளிக் கொண்டு போனார்கள். நானும் என் வயதுக்கேற்ப என்னாலான சிறிய ஒட்டுப்பலகைகள், உருளைக் கிழங்குகள், பால்தகரங்கள் என்பவற்றைச் சுமந்து சென்றேன். பெரியவர்கள் பேப்பர்ரோல்களை முழுமையாக உருட்டிக் கொண்டுபோகச் சிறுவர்கள்நாம் கத்தியால்வெட்டித் துண்டுதுண்டாகக் கடதாசியை எடுத்துச் சென்றோம்.
சொகுசுக்கார் சென்றுவரக் கூடியவகையில் அமைக்கப்பட்டிருந்த காக்கைத்தீவுக்கான பாதை துண்டுதுண்டாகக் காட்சியளித்தது. பின்னாட்களில் கற்களைக் கொட்டிச் சீர்செய்யப்பட்டதெனினும் பயன்பாட்டுக்கு ஏற்றதாக இன்றுவரை அமையவில்லை. துறைமுகப் பொலிஸ்நிலையம் இருக்குமிடம் அப்போது உருவாக்கப்பட்டிருக்கவில்லை. சுங்கவீதி சந்திக்குமிடத்தில் இன்றும் சிதைந்தநிலையில் காட்சியளிக்கும் இறங்குதுறையே அன்று மூதூர் போக்குவரத்துத் தளமாக இருந்தது. புயலுடன் நொறுங்கிப் போயிற்று.
திருக்கோணமலை மாவட்டம் முழுவதற்கும் தரமான தேங்காய்களை விநியோகித்துக் கொண்டிருந்த நிலாவெளி, சாம்பல்தீவுத் தென்னந்தோட்டங்கள் அனைத்தையும் அந்தப்புயல் வாரிச்சென்று விட்டது. பொருளாதார இழப்பைத் திருக்கோணமலை மாவட்டம் பாரியஅளவில் எதிர்கொண்டபோதும், எவ்வித உயிரிழப்பையும் எதிர்கொண்டிருக்கவில்லை என்பது அன்றைய நாட்களில் ஆறுதலாக அமைந்திருந்தது.
எனினும் அந்தச் சூறாவளியின் தாக்கத்தால் எழுந்த கடற்பேரலைகளால் தமிழ்நாட்டில் தனுஷ்கோடி என்ற நகரம் முற்றாகவே அழிந்து போனது. 1800 பேர்வரையில் மரணமடைந்தனர் என்பதும் பாம்பன் பாலம் தகர்ந்ததால் புகையிரதம் கடலில்முழ்கி நூற்றைம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காணாமற் போயினர் என்பதும் நினைவு கொள்ளத்தக்கது. இலங்கையில் திருக்கோணமலைதான் பாரிய பாதிப்புக்குள்ளாகியிருந்தது.
கருத்துகள்
கருத்துரையிடுக