பிந்துனுவௌ படுகொலைகள்.
25, அக்டோபர், 2000
பிந்துனுவௌ படுகொலைகள்.
25, அக்டோபர், 2000
(பிந்துனுவௌப் படுகொலைகளுக்கு உள்ளாகி மரணித்த எம் தமிழ் இரத்த உறவுகளை நினைவுகூருமுகமாக இது பற்றி கனடா ஐ.ரி.பி.சி. தமிழ்வானொலிக்கு 26.11.2000 அன்று குரல்வழியாக வழங்கப்பட்ட எனது வாரசாரச் செய்திக்குறிப்பின் எழுத்துரு இது.)
மனிதப் படுகொலைகள் விடயத்தில் இலங்கைக்கு என்று எப்போதுமே உலகில் தனியிடம் உண்டு. தமிழர்களின் இறைச்சியைத் தின்றுதான் உயிர்வாழ்வோம் என்ற உயர்ந்த கோட்பாடு சிங்கள இனத்துக்கு இருக்கும்வரையில் இந்தத் தனியிடத்தை உலகின் எந்தச் சக்தியாலும் பறித்துவிட முடியாது.
சிறைச்சாலைப் படுகொலைகளிற்கூட எப்போதும் நமதுநாடுதான் முன்னணியில் நிற்கிறது. அத்தனைச் சிறைச்சாலைப் படுகொலைகளும் தமிழர்களை அழிப்பதற்காக மட்டுமே நிகழ்த்தப்பட்டன என்பதும் ஒரு வரலாற்றுச் சிறப்புத்தான்.
1983ல் வெலிக்கடை, மகசின் சிறைச்சாலைகளில் இருந்த தமிழ்த் தடுப்புக்காவற் கைதிகளில் 53பேர் மிருகத்தனமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். நிராயுதபாணியான இவர்கள்மேல் தொடர்ந்து இரண்டு நாட்கள் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இத்தாக்குதல்களுக்கு சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் உடந்தையாக இருந்திருக்கிறார்கள். அரசும் மௌனம்சாதித்து அந்தக் கொலைகளுக்கு ஆசீர்வாதம் வழங்கியது.
அன்றிருந்த ஜே.ஆர் அரசு சிங்களக் கைதிகளிடம் எப்படி ஆயுதங்கள் வந்தன என்றோ, தாக்குதல்கள் நடந்தநேரம் ஆயுதபாணிகளான சிறைக்காவலர்கள் ஏன் கடமை தவறினார்கள் என்றோ. கலவரத்தை அடக்க நடவடிக்கை நடவடிக்கை எடுக்காமலிருந்ததன் காரணம் என்னவென்றோ பக்கச்சார்பற்ற விசாரணையொன்றை நடத்தியிருந்தால், -- இலங்கைக்கு உலகஅரங்கில் அவப்பெயர் ஏற்படக் காரணமாயிருந்த இந்தப் படுகொலைகளின் சூத்திரதாரிகள் யார் என்பதைத் தீவிரமாக ஆராய்ந்திருந்தால்-- இத்தகைய அநாகரிகமான சம்பவங்கள் மேலுந்தொடராமல் அந்த ஒரு சம்பவத்துடனேயே முற்றுப் பெறச்செய்திருக்கலாம். ஆனால் கள்வனே தலையாரியானால் திருடனைப்பிடி என்று உத்தரவிடவா முடியும்?
இந்தநிலையில், விசாரணை நடத்தவோ, உண்மைக் குற்றவாளிகளைத் தேடவோ அரசு முயலவில்லை. சிங்களமக்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்வதே அரசின்பணி என்ற கோட்பாட்டிலிருந்த ஜே.ஆர். அரசு. சிறைச்சாலைகளில் தமிழ் இளைஞர்களுக்கு நேர்ந்த மரணங்களை அசட்டை செய்தது. இந்த அசட்டையின் தொடர்ச்சியாகப் பல சிறைச்சாலைப் படுகொலைகள் அத்தனையும் எங்கள் இளைஞர்களைப் பலிகொண்ட சம்பவங்களாகவே தொடர்ந்தன.
இந்தவகையில் நடந்த ஒன்றுதான் பண்டாரவளையில் அமைந்துள்ள பிந்துனுவௌ முகாமில் இடம்பெற்ற படுகொலைகள்.
இந்தப் படுகொலைச் சம்பவம் நடந்து ஒருமாதமாகி விட்டது. அதாவது கடந்த அக்டோபர் 25ஆந் தேதி இந்தச்சம்பவம் நடந்திருக்கிறது. ஆனல், இச்சம்பவத்தாற் கொல்லப்பட்ட தமிழ் இளைஞர்களின் எண்ணிக்கையோ காயமடைந்த இளைஞர்களின் எண்ணிக்கையோ அரசாங்கத்தால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை. அரசஊடகங்களும், தனியார் ஊடகங்களும் இறந்தோர் தொகையச் சொல்வதில் முரண்பட்டே நிற்கின்றன. 26 இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும், 27 இளைஞர்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் 31 இளைஞர்கள் மரணமானார்கள் என்றும் இவை தமக்குள் முரண்பட்டு நிற்குமளவுக்கு நாகரிக, நவீன தொடர்புச்சாதன உலகில் விடயங்கள் மூடிமறைக்கப்படுகின்றன என்பதைக் கருத்திற்கொண்டால், தமிழ் இளைஞர்களின் உயிருக்கு இலங்கை கொடுக்கும் மதிப்பைச் சட்டெனப் புரிந்துகொள்ளலாம்.
இந்தப் படுகொலைகள் எப்படி நடந்தன என்றோ, ஏன் நடந்தன என்றோ, இக்கொலைகளின் பின்னணியில் நின்ற காட்டுமிராண்டிகள் யார் என்றோ அறிந்துகொள்வதில் இலங்கையரசு இந்தக்கணம்வரை உரிய அக்கறை செலுத்தவில்லை என்றே கொள்ளவேண்டி இருக்கிறது.
இலங்கையரசு நினைத்திருந்தால் உடனடியாக விசாரணைகளைத் தொடங்கி உண்மைநிலையை உலகின் கண்களுக்குக் காட்டியிருக்க முடியும். கொலைச்சூத்திரதாரிகளைக் கண்டுபிடித்துத் தண்டித்திருக்க முடியும். ஆனால் அரசோ இவ்விடயத்தில் மந்தப்போக்கையே கடைப்பிடிக்கிறது.
அரசின் இந்த மந்தப்போக்குக்குக் காரணம், அரசியல்வாதிகள் யுத்தவியாபாரிகளாக மாறிவிட்டமையும், தங்கள் அரசஅதிகாரங்களின் பெரும்பங்கை ஆயதப்படை அதிகாரிகளிடமும், காடையர் தலைவர்களிடமும் இழந்துவிட்டமையே என்பது இலங்கை அரசியலை உன்னிப்பாகப் பார்ப்பவர்களால் எளிதிற் புரிந்து கொள்ள முடியும்.
கொலைக்களமான பண்டாரவளை பிந்துனுவௌப் புனர்வாழ்வுமுகாம், சம்பவம் இடம்பெற்ற நாளில் தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றத்தின் நிர்வாகத்தின்கீழ் இருந்துள்ளது. இம்மன்றம் இளைஞர்விவகார அமைச்சின்கீழ் இயங்கிவருகிறது.
புனர்வாழ்வு நிலையத்துக்குப் பொறுப்பாக அபேரத்ன என்பவர் ஆறுவருடங்களாக இருந்துவருகிறார். இவர் இலங்கை இராணுவத்தின் கடற்பிரிவைச் சேர்ந்த கப்டன் தரத்திலான் ஓர் அதிகாரியாவார். சம்பவம் நடைபெறுவதற்கு இரண்டுமாதங்களுக்கு முன்னர் மற்றுமொரு லெப்டினன்ட் தரத்திலான இராணுவ உத்தியோகத்தர் அபேரத்னவின் நிர்வாகக் கடமைகளுக்கு உதவும்பொருட்டு அனுப்பப்பட்டிருக்கிறார். இவர்களைத்தவிர, மேலும் நான்கு சிவில உத்தியோகத்தர்களும் இந்தப் புனர்வாழ்வு முகாமில் கடமையில் இருந்துள்ளனர்.
இங்கு ஒரு பொலிஸ் காவலரணும் இருந்தது. இதில் பொலிஸ், ஊர்காவல்படை நான்குபேர் எந்நேரமும் கடமையில் ஈடுபடுவார்கள். இவர்கள் கடமையின்போது, மூன்று ரி56ரகத் துப்பாக்கிகளையும் ஒரு சாதாரணரகத் துப்பாக்கியையும் எப்போதும் கூடவே வைத்திருப்பார்கள்.
இந்தமுகாமில் எத்தனை தடுப்புக்காவல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்ற விபரம் இதுவரை வெளியாகவில்லை. எனினும். மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் தகவலின்படி அக்டோபர் 15ஆந்தேதி இங்கு 46பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்று தெரியவருகிறது.
எனினும் பொலிசாரின் தகவலின்படி, அக்டோபர் 25ஆந்திகதியில் 41பேர் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள் என்றே கொள்ளவேண்டி இருக்கிறது. இவர்களுடைய தகவலின்படி 27பேர் கொல்லப்பட்டும், 14பேர் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்டும் இருக்கிறார்கள். ஆனால் அன்றையதினம் முகாமில் தடுத்து வைக்கப் பட்டிருந்தோர் தொகை அதிகம் என்றுதான் தெரியவருகிறது.
அன்று நடந்தது என்ன?
பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் பிரேமரத்ன பெற்றுக்கொண்ட தகவலின்படி,
அடிக்கடி தடுப்புமுகாமில் இடம்பெறும் வழமையான கூட்டம், 24ஆந்திகதி பிற்பகல் ஆறுமணிக்கு இடம் பெற்றவேளையில், தங்களைக் குறிப்பிட்டகாலத்துக்கும் மேலாகத் தடுத்து வைத்திருப்பதாகத் தமிழ் இளைஞர்கள் சிலர் கூறியிருக்கிறார்கள். அத்துடன் தங்களைக் கூடியகெதியில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டிருக்கிறார்கள். இந்த வாக்குவாதம் முற்றியதால், முகாம் பொறுப்பாளரை இளைஞர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். கடமையிலிருந்த ஒரு பொலிஸ்உத்தியோகத்தர் வானத்தை நோக்கிச் சுட்டிருக்கிறார். இதனையடுத்து இளைஞர்கள் கலகம் செய்திருக்கிறார்கள். கலவரத்தைக் கட்டுப்படுத்தப் பயந்த பொலிஸ்காரர்களும் ஏனைய உத்தியோகத்தர்களும் முகாமைவிட்டு வெளியே ஓடியிருக்கிறார்கள். தப்பியோடிய உதவியாளரான இராணுவலெப்டினன்ட் பண்டாரவளைப் பொலிசாருக்கு முகாமில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பாகத் தொலைபேசிமூலம் அறிவித்திருக்கிறார்.
பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், தனது அறிக்கையில் இளைஞர்கள் பணயக்கைதிகளாக எவரையும் பிடித்து வைத்திருக்கவில்லை என்பது விசாரணைகள்மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்பதை அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்.
இரவு எட்டுமணியளவில் பொலிஸ்தலைமையக இன்ஸ்பெக்டரின் தலைமையில் ரி56ரகத் துப்பாக்கிகள் சகிதம் 30 பொலிசார் பிந்துனுவௌ முகாமுக்கு வந்துசேர்ந்தனர். இளைஞர்கள் இவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. எனினும் இன்ஸ்பெக்டர் ஆயதம் எதுவுமின்றித் தான்மட்டும் முகாமுக்குள் சென்று இளைஞர்களுடனும் பொறுப்பதிகாரி அபேரத்னவுடனும் உரையாடினார். பொலிஸ் தலையீடு தேவைப்படாது என்றும் நிலைமையைத் தன்னால் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்றும் பொறுப்பதிகாரி பொலிஸ் இன்ஸ்பெக்டரிடம் கூறியிருக்கிறார்.
பொலிஸ் இன்ஸ்பெக்டர் வெளியே வந்தபோது, கிராமத்தவர்கள் எனக் கருதப்படுவோர் சுமார் 300 பேரடங்கிய கும்பல் முகாமுக்கு வெளியே நின்று தமிழர்களுக்கு எதிரான கோஷத்தை எழுப்பினார்கள். இந்தவேளையில் இராணுவமும் அங்கு வந்து சேர்ந்திருக்கிறது.
கிராமத்தவர்களைக் கலைந்து போகும்படி பொலிசாரும் இராணுவத்தினரும் செய்தார்கள். நிலைமை அமைதியாகக் காணப்படுகிறது எனக்கருதிய இராணுவம் அதிகாலை 1.30 மணியளவில் அவ்விடத்தை விட்டகன்றது. எனினும் பொலிசார் அங்கு நின்றிருந்தனர்.
ஆனாலும் மீண்டும் அதிகாலைவேளையில் கூடிய ஜனத்திரள் கத்தி. பொல்லு, கோடரிகள் மண்வெட்டிகள் சகிதம் பொலிஸ்காரர்களின் காவலையும்மீறி நிதானமாக உள்ளேநுழைந்து தமிழ்இளைஞர்களை அடித்தும், வெட்டியும், கொத்தியும் கொன்றிருக்கிறார்கள். இச்சம்பவம் நடைபெறும்போது அந்தஇடத்தில 69 பொலிசார் ஆயதபாணிகளாக நிறுத்தப்பட்டிருந்தனர் என்று ஒரு பதிவேடு கூறுகிறது.
ஆனால் அவர்களனைவரும் சிங்களக் கும்பலுக்கெதிராகத் தம் துப்பாக்கிகளைப் பயன்படுத்தாது அகிம்ஸாமூர்த்திகளாக நின்றிருக்கிறார்கள். திரண்டுவந்த சிங்களக் காடையர்களை மறிக்கவோ, துரத்தவோ அவர்கள் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. ஒரு ரவையைத்தானும் வானத்தை நோக்கித் தீர்த்து அவர்களைப் பயமுறுத்த வேண்டுமென்றுகூட நினைக்கவில்லை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்களைக்கொண்ட அந்தக்கும்பல் நிதானமாக, வாசல்வழியாகப் பக்குவமாக உள்ளேநுழைந்து தன்காரியத்தைச் சாதித்து முடித்திருக்கிறது.
இந்தமுகாமில் இருந்த இளைஞர்களெவரும் ஆயுதபாணிகளலல்லர். அனைவரும் ஏறத்தாழ விடலைப் பருவத்து இளைஞர்களும் சிறுவர்களும்தான். 11வயது, 12வயதுச் சிறுவர்களுங்கூட இருந்திருக்கிறார்கள். போராளிக்குழுவுடன் சிலநாட்கள் தொடர்புவைத்துவிட்டுப் பின்னர் வெளியேறியவர்களும் வெறுமனே சந்தேகத்தின்பேரில் கைதானவர்களுமே இங்கு தடுத்துவைக்கப்பட்டு இருந்தார்கள். இவர்கள் குற்றமற்றவர்கள் என்ற தீர்மானத்தின் அடிப்டையிலேயே புனர்வாழ்வுக்காகச் சிபாரிசு செய்யப்பட்டவர்கள்.
இவர்கள் கொலையாவதற்குப் பொலிசாரும் உதவியிருக்கிறார்கள் என்றே கொள்ளவேண்டி இருக்கிறது. காயமடைந்த இளைஞர்கள் கூறிய தகவல்களின்படி,
தமக்கு வரும் கடிதங்கள் ஒப்படைக்கப்படாமை, தொலைபேசி அழைப்புகள் மறுக்கப்படல், விடுதலைக்கு நீண்டகாலத் தாமதம் என்பவை தொடர்பாக முகாம்பொறுப்பாளரிடம் முந்தையதினம் இவர்கள் பிரச்சினைப் பட்டிருக்கிறார்கள். இதனால் பதற்றம் நிலவியிருக்கிறது. பொலிசார் வரவழைக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டா மாத்திரம் உள்ளேநுழைந்து சமரசம் பேசியிருக்கிறார். இதேவேளை ஊரார்களும் முகாமுக்கு வெளியே திரண்டு கற்களை வீசியிருக்கிறார்கள். ஆனாலும் முகாம்பொறுப்பாளர் கப்டன் அபேரத்ன, முகாமுக்குள் பொலிசார் தேவையில்லயென்றும், வெளியாரை உள்ளே வரவிடாமற் பாதுகாக்குமாறும் இன்ஸ்பெக்டரைக் கேட்டிருக்கிறார்.
நிலைமை சீரடைந்திருந்தது. இளைஞர்கள் 11.30மணியளவில் நித்திரைக்குச் சென்றிருக்கிறார்கள். அதிகாலை கூச்சல்கேட்டுக் கண்விழித்தபோது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அடங்கிய காடையர் கும்பல் கத்தி, பொல்லு, வாள் போன்ற ஆயுதங்களுடன் முகாமுக்குள் நின்றனர். அருகே பொலிசாரும் பக்குவமாக நின்றனர்.
பொலிசார் பார்த்துக் கொண்டிருக்கத் தாக்குதல் தொடங்கியது. இளைஞர்களை வெட்டியும் அடித்தும் கொலை செய்தார்கள். இளைஞர்கள் தங்கியிருந்த மண்டபங்களுக்குத் தீ வைத்தார்கள். அதில் இளைஞர்களை உயிரோடு தூக்கிப்போட்டார்கள். காடையரிடமிருந்து தப்பியோடிய இளைஞன் ஒருவனை ஒரு பொலிஸ்காரர் சுட்டு வீழ்த்தினார். அவனையும் அவர்கள் நெருப்பில் போட்டார்கள். பொலிசாரின் ட்ரக் வண்டிக்குள் ஒளிந்துகொள்ள முயன்ற மூன்று இளைஞர்களைக் காடையர் கும்பல் இழுத்தெடுக்க அதைப் பொலிசார் பார்த்துக்கொண்டு அமைதியாக நின்றார்கள்.
எல்லாச் சம்பவங்களும் 15 அல்லது 20 நிமிடங்களுக்குள் நடந்து முடிந்து விட்டன. புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வுக்காகக் காத்திருந்த தமிழ் இளநெஞ்சங்கள் செயலற்றுப்போயின. ஆடியோடிய உடல்கள் அரக்கர்களின் வெறிக்குப் பலியாகி அலங்கோலமான துண்டுகளாகவும், எரியூட்டப்பட்ட சடலங்களாகவும் வீழ்ந்துபோயின. எல்லாம் முடிந்து விட்டது. 1983 ஜூலையில் வெலிக்கடை மகசின் சிறைச்சாலைகளில் தொடங்கப்பட்ட கொலையாட்டு விழாவின் தொடரங்கம் பிந்துனுவௌவிலும் நடந்தேறியிருக்கிறது.
சில உடல்கள் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டன. சில உடல்கள் கருகியநிலையில காணப்பட்டதால் அடையாளங் காணமுடியாத நிலையில் ஒப்படைக்கப்படாமலே போயின.
இச்சம்பவத்தில் உடனடியாக 27பேர் இறந்ததாகவும். 14பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரும் பலமரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
இந்தச் சம்பவங்களில், தடுப்புக்காவலில் இருந்த அன்ரன் ஜேம்ஸ் என்ற தடுப்புக்காவல் கைதி இளைஞர்களைப் பிழையானவழியில் தூண்டிவிட்டார் என்ற கருத்து பரவலாக வைக்கப்பட்டது. ஆனால், அன்ரன் ஜேம்ஸ் பற்றியோ அல்லது அவரது பிழையான நடத்தை பற்றியோ எந்த ஆவணமோ, கடிதங்களோ, குறிப்புகளோ முகாம் பொறுப்பாளரிடம் இல்லாதபடியால் இது அப்பட்டமான பொய் என்றே தெரிகிறது.
இதேபோல, முகாம் அமைந்துள்ள ஊரைச்சேர்ந்த மக்கள் முகாமை அகற்றும்படி கேட்டிருந்தார்கள். அகற்றப்படாதபடியால் ஆத்திரமடைந்து இவ்வாறு நடந்துகொண்டார்கள் என்றும் ஒருவதந்தி உலவ விடப்பட்டது. ஆனால் முகாமை அகற்றக்கோரி அந்தப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்த சம்பவங்கள் எதுவும் இல்லாதபடியால் இதுவும் பொய் என்றே தோன்றுகிறது.
இவற்றை வைத்து நோக்கும்போது ஏதோ ஒரு இனவாத அமைப்பு நன்கு திட்டமிட்டு, பொலிசாரையும் கைக்குள் கோட்டுக்கொண்டு, இரவோடிரவாகச் சுவரொட்டிகளை ஒட்டியும் மக்களைத் தூண்டியும் இனவாத விஷத்தைப் பரப்பித் தனது காரியத்தைச் சாதித்திருக்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது.
இது வீரவிதான அமைப்பாகவோ, சிஹலஉருமய அமைப்பாகவோ இருக்கலாம் என்ற சந்தேகங்கள் வலுவடைந்துள்ள நிலையிலும், இறந்தவர்கள் தமிழர்கள்தானே என்ற மாற்றாந்தாய்ப் போக்கில் அரசு அக்கறையற்று இருப்பதால் வழமைபோல இம்முறையும் குற்றவாளிகள் தப்பிவிட நிறையவே வாய்ப்புகள் இருக்கின்றன.
இனத்தின்பேரால் இலங்கைஅரசபடைகளாலும். சிங்கள இனவாதிகளாலும் அன்றாடம் கொன்றொழிக்கப்படும் தமிழர்களின் தொகை இனியும் அதிகரிக்காமல் இருக்கவேண்டுமானால், பிந்துனுவௌப் படுகொலைகள் மேலுந்தொடராது தடுக்கப்பட வேண்டுமானால் அதற்கு எதிராகப் போராடவேண்டியவர்கள் நாமே ---ஈழத்தமிழர்களாகிய நாமே--- என்பதை அழுத்தமாகச் சொல்லி, எங்கள் வாழ்வுக்காகத் தங்கள் வாழ்வைத் துறந்தவர்களை நினைவுகூர்ந்து, அடுத்தவாரம் சந்திப்போமென்று கூறி விடைபெறுகின்றேன்.
கருத்துகள்
கருத்துரையிடுக