இந்து சமய விளக்கம் 07.
கிருஷ்ணன் அல்லது கண்ணன் என்றழைக்கப்படும் தெய்வமூர்த்தம் பெண்களிடையே சிருங்கார லீலைகள் புரிவதுபோல் சித்திரிக்கப்படுவதன் காரணம் என்ன?
கண்ணன், கிருஷ்ணன் எல்லாம் மஹாவிஷ்ணுவினுடைய அம்சம். மஹாவிஷ்ணுவுடைய கடமை உயிர்கள் வழிதவறிப் போய்விடாமல் பாதுகாப்பதுதான். அதுமட்டுமன்றி உலகின் நெறிமுறைகள் தளர்ந்து போகாதிருக்க அவ்வப்போது நடவடிக்கை எடுப்பவரும் மஹாவிஷ்ணுவே தான்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் மஹாவிஷ்ணு மானுடராகப் பூமியில் தோன்றிப் பணிபுரிவதாக இந்துமதம் கூறுகிறது. மகாபாரதத்தில் கிருஷ்ணராகத் தோன்றியதும் உலகின் தர்மத்தை நிலைநிறுத்தும் பொருட்டே என்பதை மறத்தல் கூடாது.
இனிக் கண்ணனிடம் வருவோம். கண்ணன் இடையர் குலத்திலேயே வளர்ந்தவர். மானிடர்களுக்கும் தேவர்களுக்கும் இடைப்பட்ட நிலையில் கண்ணன் வாழ்ந்து காட்டினார் என்பதன் பொருளாகவும் இடையர்குலம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கலாம். கண்ணன் வாழ்ந்த இடம் கோகுலம் எனப்படுகிறது. கோகுலம் என்பதன் பொருள் பசுக்களின் இடம் அல்லது குலம் என்பதாகும். இதன்படி கண்ணன் பசுக்களின் மத்தியில் வாழ்ந்திருக்கின்றான்.
இடையர் என்றவகையில் கோகுலத்தில்வாழும் ஒருவரின் கடமை பசுக்களைப் பராமரிப்பதுதான். இங்கு கண்ணனும் புல்லாங்குழல் இசைத்து ஆடிப்பாடி, பசுக்களை மகிழ்வித்துத் தன்பால் ஈர்த்துக் கொள்கிறார். இங்கே மேலெழுந்தவாரியாகப் பசுக்கள் கறவையினத்தைக் குறிக்கின்ற போதிலும் பதி, பசு, பாசம் எனவரும் தத்துவப்பொருளில், பசு உயிர்களைக் குறிக்கிறது.
இடையர் இல்லாத பசுக்கள் கட்டப்பட்டோ, அடைக்கப்பட்டோ தான் இருக்கும். ஆனால் மேய்ப்பதற்கு இடையர் வருகின்றபோது பசுக்கள் தம் தளைகளிலிருந்து, அதாவது கட்டுகளிலிருந்து விடுபடுகின்றன. இடையரின் வழிகாட்டுதலின்கீழ் தாங்களாகவே உணவு தேடிக்கொள்கின்றன.
இங்கு பதி, பசு, பாசம் என்ற முப்பொருளில் பதியாகிய கண்ணன் வசப்படும் பசுக்களாகிய உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை எனப்படும் பாசங்களாகிய மூன்று தளைகளிலிருந்தும் விடுபடுகின்றன. பதியினுடைய நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க தளைகள் மெல்ல மெல்ல அற்றுப் போகின்றன.
இந்த நோக்கிலேதான் கண்ணனின் சிருங்கார லீலைகள் பார்க்கப்படவேண்டும். இங்கே, கண்ணன் என்ற இறைவன் ஆணாகவும், இறைவனை எண்ணிவாழும் ஆன்மாக்கள் பெண்களாகவும் சித்திரிக்கப் பட்டிருப்பதை உற்றுநோக்க வேண்டும். எனவே இறைவனைச் சுற்றிவந்த ஆன்மாக்களாகக் கோபியரையும், ஆன்மாக்கள் உய்யும்பொருட்டு இறங்கிவந்து அருள்விளையாடல் புரியும் பதியாகக் கண்ணனையும் கொண்டால் நம்சிந்தனை தெளிவுபெறும். இதுவே கண்ணனின் லீலைகள் காட்டும் பேருண்மை.
பாம்பை வழிபடும் பழக்கம் இந்துக்களிடம் உள்ளது. வி~ப்பிராணியை வழிபடலாமா?
இந்துக்களிடம் நாகவழிபாடு பரவலாகக் காணப்படுவது உண்மையே .நாகமும் பாம்பின் இனம் என்பதால் பாம்பை வழிபடுவதாகப் பாமரர்கள் நினைக்கிறார்கள். இலங்கையின் ஆதிக்குடிகள் இயக்கர், நாகர் எனச் சரித்திரம் கூறுகிறது. இயற்கையைத் தெய்வமாக வழிபட்டவர்கள் என்ற கருத்திலோ, இயற்கையோடு இணைந்து வாழ்கின்றவர்கள் என்ற கருத்திலோ அப்பெயர் ஏற்பட்டு நாளடைவில் அவர்கள் இயக்கர் ஆகியிருக்கலாம். இவ்வாறே நாகவழிபாடு செய்தவர்கள் நாகர் எனப்பட்டிருக்க வேண்டும்.
மற்றச் சமயத்தவர்களைவிட இயற்கையை வழிபடுவதில் இந்துக்கள் மிகவும் ஆர்வமுள்ளவர்கள் என்பதை நோக்கின் இயக்கர் இந்துக்களே என்ற முடிவுக்கு வரலாம். இதன்படி அக்காலத்தில் வாழ்ந்த நாக வழிபாட்டையுடைய இந்துக்களும் அறிவிற் குறைந்தவர்களான இருந்திருக்க முடியாது. எனவே நாகம் என்பது தத்துவஅடையாளம் என்பதை உணரவேண்டும்.
ஒருசாரார் இயற்கையோடு ஒன்றுபட்டு வாழம் தருமத்தை மேற்கொள்ள, இன்னொருசாரார் நாவினதும் அகத்தினதும் தூயதன்மைக்காக வழிபாடியற்றியிருக்கிறார்கள். நாவிலும் மனத்திலும் தூய்மையைப் பேணுவதும், இயற்கையோடிணைந்தவாழ்வைப் பேணுவதும் ஒரே இலக்கை நோக்கிய நகர்வுகள் என்பது சிந்தனையுள்ள எவருக்கும் எளிதிற்புரியும். உண்மை (உளத்தூய்மை) வாய்மை (வார்த்தைத் தூய்மை) என்பவை உலகவாழ்க்கையின் சிறப்புகள் என்பதன் வெளிப்பாடே நாவும் அகமும் கொண்ட நாக வழிபாடாகும்.
தற்காலத்தில் உள்ள சிறந்த கருத்துப் படக்காரர்களை விட நம்முன்னோர்கள் உயர்ந்த தத்துவார்த்தக் கருத்துருவவியலாளர்களாக விளங்கியமைக்கான எடுத்துக்காட்டுதான் நாக உருவத்துக்கான வழிபாடு என்பதைப் புரிந்துகொண்டால் நம்முன்னோர் பெருமை விளங்கும்.
நாக வழிபாட்டைப் போலவே இயற்கை வழிபாட்டையும் நாம் பேணி வருகிறோம் என்பது பெருமை கொள்ளத் தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக