இந்து சமய விளக்கம் 06



மும்மூர்த்திகளின் வடிவங்கள் பற்றி…….?
பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய மூர்த்தங்களே மும்மூர்த்திகள் என அழைக்கப்படுகின்றன. பரம்பொருளே பிரபஞ்ச இயக்கத்துக்காக மும்மூர்த்திகளைத் தோற்றுவிப்பதாக இந்துமதம் கூறுகிறது. இவர்களில் பிரமன் படைக்கும் தொழிலையும், விஷ்ணு காக்கும் தொழிலையும், உருத்திரன் அழிக்கும் தொழிலையும் பிரதான கடமைகளாகச் செய்கிறார்கள் என்று நமது மதம் கூறுகிறது.

நல்லவற்றைக் உருவாக்குவதும், அவற்றைக் காப்பதும் முறையே பிரமனுடையதும் விஷ்ணுவுடையதும் கடமைகளாகின்றன. தீயவற்றை அழித்துப் பிரபஞ்சத்தை உய்விப்பது உருத்திரனின் பணியாகிறது. இத் திரிமூர்த்திகள் தத்தமது கடமைகளின்போது வெவ்வேறு தோற்றங்களைக் கொண்டிருந்தாலும் மூவரும் ஒருவரே என்று இந்துமதம் அழுத்தமாகக் கூறுகிறது.

இன்றைய சமுதாய நோக்கில் இவற்றை நோக்குவோமானால், குடிசார்துறை, காவல்துறை, நீதித்துறை ஆகியவற்றின் சாயலை இங்கு காணலாம். குடிசார்துறை நல்லவற்றை ஆக்கிக் கொண்டிருக்கிறது. காவல்துறை அவ்வாக்கங்களுக்கு ஊறுநேராத வகையில் பாதுகாப்பளிக்கின்றது. நீதித்துறையோ நல்லவற்றுக்கு இடையூறாக அமைபவற்றைத் தண்டித்து ஒடுக்குகிறது.   

எனவே. பிரமன் இங்க குடிசார் கடமைகளின் உருவமாகவும், விஷ்ணு காவல்சார் கடமைகளின் உருவமாகவும், உருத்திரன் நீதிசார் நெறிகளின் தோற்றமாகவும் காணப்படுகின்றனர்.

இனி இவர்களின் வடிவங்களை நோக்குவோம். பிரம்மன் அறிவுசார் கடமையின் பாற்பட்டவர். ஆக்கத் துறைக்கு அறிவே பிரதானம் என்பது கண்கூடு. அறிவு நாற்றிசை தழுவியதாக இருக்க வேண்டும். இதனாலேயே பிரம்மன் நான்குதிசைகள் நோக்கிய முகங்களை உடையவராக உருவகிக்கப்பட்டிருக்கிறார். பிரம்மனின் சக்தியாகக் கலாதேவியான சரஸ்வதி அமைந்திருக்கிறாள். இது அவரது படைப்புத் திறனை மேலும் அதிகரிக்கச் செய்கிறது.

அறிவிற் சிறந்தோனான பிரம்மன் படைப்புத் தொழிலைச் செய்ய, அனைத்துக் கலைகளிலும் சிறந்தவளான சரஸ்வதி படைப்புத் தொழிலுக்கு மேலும் மெருகூட்டுமுகமாகத் திறமையுடன் துணையிருக்கிறாள். பிரம்ம தேவரும் சரஸ்வதியும் வாசஞ்செய்யும் இடங்கள் கலைக்கூடங்களாகவும் அறிவுமடங்களாகவும் அமைந்திருக்கின்றன. 

விஷ்ணு காத்தற் தொழிலைச் செய்கிறார். பிரம்மனால் படைக்கப்பட்ட பூவுலகும் உயிர்களும் செல்வச் செழிப்புடன் பஞ்சம் பசியற்று வாழ்வதற்கும், தீமைகள் தலையெடுத்துப் பூமியின் நல்லொழுங்கை அழித்து விடாதிருப்பதற்குமான பொறுப்பை விஷ்ணு ஏற்றுள்ளார்.

ஊரைப் பஞ்சம் பிணி என்பவற்றிலிருந்து காப்பவர் ஐஸ்வரியனாக இருக்க வேண்டும். விஷ்ணுவாகிய திருமால் ஐசுவரியனாகவே தோற்றந் தருகிறார். அவரது சக்தியாகிய இலக்ஸ்மிதேவி செல்வத்துக்கே அதிபதியாக அமைகிறார். இரப்போருக்கு இல்லையென்னாது வழங்கும் சக்தியுடைய மஹாவிஸ்ணுவிடம் உலகைக் காக்கும்படி பக்தர்கள் கேட்பது சரியாகத்தானே இருக்கிறது?

அதுவுமல்லாமல், உலகில் அறம் நலிந்து தீமைபெருகி உலகம் வருத்தமுறும் வேளைகளில் எல்லாம் உலகைக்காக்க அவதாரம் செய்பவராக மஹாவிஷ்ணுவே விளங்குகிறார் என்பதையும் நினைவுபடுத்திக் கொள்ளலாம். இந்துமதக் கடவுளர் மூர்த்தங்களில் மஹாவிஷ்ணுவே அடிக்கடி பூமியில் அவதாரஞ்செய்து அறங்காத்தவராகிறார் என்பதும் நோக்கத்தக்கது. 

இராமராக, கிருஸ்ணராக அவதாரஞ்செய்து உலகில் அறம் அழிந்து விடாதபடி விஷ்ணு காத்து வருகிறார்: இனிமேலும் அவதாரம் எடுப்பார் என்றும் இந்துமதம் நம்புகிறது.

மஹாவிஷ்ணுவின் உறைவிடம் பாற்கடல் எனச் சித்திரிக்கப்படுகிறது. உலகின் செல்வங்கள் அனைத்துக்கும் கடலே காரணம். அதுமட்டுமன்றி இயற்கைச் செல்வத்தின் பெரும்பகுதியையும் கடலே கொண்டிருக்கிறது. இத்தகைய கடலில் பாம்பை மஞ்சமாகக் கொண்டு திருமால் தன்தேவியுடன் அமர்ந்திருக்கிறார்.

நீரின் அசைவு செல்வத்தின் நிலையாமையைக் காட்டுகிறது. கடலின் ஆழத்தின் தன்மை, ஒருபுறம் உலகச் செல்வத்தின் பெரும்பாகத்தைக் கொண்டிருக்கும் சிறப்பை உணர்த்தினாலும், செல்வமென்ற கடலில் மிதப்பவர் எந்தநேரத்திலும் அமிழ்ந்து காணாமற் போய்விடக்கூடிய ஆபத்தையும் உணர்த்துகிறது. அதேபோல் திருமாலுக்கு நிழல்கொடுத்துப் பஞ்சணையாக அமைந்துள்ள அரவமானது, செல்வம் எத்துணைச் சுகத்தைத் தரினும் புறஆபத்துகளையும் தரவல்லது என்பதைக் காட்டுகிறது.

திருமால் நீலநிற மேனியர். நீலநிறமானது ஆழத்தையும் உயரத்தையும் குறிக்கும் அடையாளமாகும். ஆழக்கடலும் உயர்ந்த வானமும் நீலநிறமாக இருப்பதை அவதானித்தால் உண்மை விளங்கும். எனவே திருமாலின் தன்மை அல்லது செல்வத்தின் ஆதிக்கம் பூமியின் ஆழத்தையும் வானத்தின் உயரத்தையும் தழுவியதாக அமையும் என்பதைக் காட்டுகிறது.

இனி உருத்திரரிடம் வருவோம். உருத்திரர் அழித்தற்கடவுள். இயற்கையின் நியதி ஊறுபடாதிருப்பதற்கும், தீயன தலையெடுக்காது இருப்பதற்கும் இவரே பொறுப்பாக நின்று தீயவற்றை அழிக்கிறார். இவர் அகோரமான தோற்றங் கொண்டவர்போல் காட்சியளிக்கிறார். இவரது சக்தியான துர்க்காதேவியும், கடுமையான பாவனை கொண்டவராகக் காட்சியளிக்கின்றார். மண்டையோடுகளை ஆபரணமாக அணிவதும், சுடலைப் பொடி பூசுவதும், உருத்திரனுடைய சிறப்பம்சங்கள் எனலாம். இவை உலகிற் பிறக்கும் உயிர்கள் தாம் எடுத்துள்ள உடம்பை நிலையானது எனக்கருதி அகங்காரம் கொள்ளக்கூடாது என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

மனிதன் உலகவாழ்வில் எந்தத் தரத்திலிருப்பினும் இயற்கையின் நியதிக்கு முன்னால் அது ஒரு பொருட்டல்ல என்பதையும் மண்டை ஓடுகளும் சுடலைச் சாம்பரும் எடுத்துக் காட்டுகின்றன. அவற்றில் ஏழை பணக்காரன், அறிஞர் பேதை என்ற பேதங்கள் கிடையா. இயற்கையின் முன்னும் கடமையின் முன்னும் அனைத்தும் சமம் என்பதைத்தான் இது கூறுகிறது.

02.10.2017

தொடரும்…. 
;

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5