தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 5

பதவியல் 


வேற்றுமை. (முதற்பகுதி)

வாக்கியம் ஒன்றில் வருகின்ற பெயர்ச்சொற்களின் நிலையை அல்லது நோக்கத்தை வெளிப்படுத்துபவையாக வேற்றுமைகள் அமைகின்றன. வேற்றுமை உருபுகளைப் புறந்தள்ளின், சொல்ல வந்த கருத்துகள் முழுமையடையாமற் போய்விடவுங் கூடும்.

வேற்றுமைகள் எட்டு என்பர் இலக்கணநூலார். எட்டைவிட அதிகம் எனக் கூறுபவர்களும் உளர். மூன்றாம் வேற்றுமையை இரண்டாகக்கொள்ள இடமுண்டு என்பர் இவர்கள். எனினும், தொல்காப்பியம் நன்னூல் என்பவை வேற்றுமைகள் எட்டு என்கின்றன. ஆறுமுகநாவலர் அவர்களும் தமது இலக்கணச் சுருக்கத்தில் வேற்றுமைகள் எண்வகைத்தன என்பதையும் கருத்திற் கொள்வோம். இனி அவற்றைப் பார்ப்போம்.


முதலாம் வேற்றுமை.

முதலாம் வேற்றுமைக்கு உருபுகள் எவையுங் கிடையா. இதனை எழுவாய் வேற்றுமை என்றும், பெயர் வேற்றுமை என்றும் அழைப்பர். வாக்கியத்தில் எழுவாயாக வருகின்ற பெயர்ச்சொல் எவ்வித மாற்றமுமின்றி அமைவது இதன் சிறப்பு.

கணபதி வந்தான்.
சுந்தரன் பாடினான்.  
என்பவற்றில் வருகின்ற கணபதி, சுந்தரன் ஆகியவற்றை முதலாம் வேற்றுமைக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.

ஆயினும் கணபதியானவன் வந்தான், கணபதியென்பவன் வந்தான், என இவற்றைக் கையாள முடியுமெனினும் இவ்விணைப்புச் சொற்கள் வேற்றுமையின் பாற்படா என்கிறார் ஆறுமுகநாவலரவர்கள். இவ்வுருபுகள்  கையாளப்படுவது மிகக் குறைவெனினும், அவை சிறுபான்மையாக ஐம்பாலுக்கும் பொருந்தி வருகின்றன என்பதை நினைவிற் கொளல் நன்று.

இரண்டாம் வேற்றுமை.

இதன் உருபு ‘ஐ’ ஆகும். பெயர்ச் சொல்லொன்றுடன் இவ்வுருபு இணைவதால்; அச்சொல் செயப்படுபொருள் என்ற நிலையை எய்துகிறது. எனவே இதனைச் செயப்படுபொருள் வேற்றுமை எனவுங் கூறுவர்.

தம்பி பாடத்தைப் படித்தான். என்ற வாக்கியத்தில் தம்பி எழுவாய் வேற்றுமையாக வருகிறது. தம்பி என்ற பெயர்ச்சொல் எந்த மாற்றத்துக்கும் உட்படவில்லை. பாடம் என்ற சொல் “ஐ” உருபு பெற்று செயப்படு பொருளாகிறது. 

யார் படித்தான் என்ற கேள்விக்கு தம்பி என்பது பதிலாக வருகிறது. எனவே தம்பி எழுவாய் எனப்படுகிறது. விரிவாகக்கூறின், தம்பி என்ற பெயர்ப்பதத்திலிருந்தே இவ்வாக்கியம் எழுகிறது எனலாம்.

எதைப் படித்தான் என்ற வினா எழுமாயின் பாடத்தைப் படித்தான் என்பது விடையாகிறது. எனவே இங்கு பாடத்தை என்பது செயப்படு பொருளாகிறது.

இரண்டாம் வேற்றுமையான ‘ஐ’ உருபை ஏற்றுச் செயற்படுபொருள் என்ற நிலையைப் பெயர்ச்சொல் அடையுமிடத்து அது ஆக்கல், அழித்தல், அடைதல், நீத்தல், ஒத்தல், உடைமை ஆகிய ஆறுவகைக் கருத்துகளை வலியுறுத்தப் பயன்படுகிறது.

ஆக்கப்படுபொருள்
குயவன் குடத்தை வனைந்தான், தம்பி பாடத்தைப் படித்தான் போன்ற வாக்கியங்களில் வருகின்ற ‘ஐ’ உருபு பெற்ற பெயர்ச்சொற்களான குடத்தை. பாடத்தை என்பவை ஆக்கப்பணி நோக்கிய கருத்தில் அமைகின்றன. எனவே இவை ஆக்கப்படுபொருள் அல்லது ஆக்கற்பொருள் எனப்படுகின்றன.

அழிக்கப்படுபொருள்.
குடத்தை உடைத்தான், படத்தைக் கிழித்தான், காட்டை அழித்தான், மரத்தை வெட்டினான் போன்ற வாக்கியங்களில் வருகின்ற செயப்படுபொருள்களான குடத்தை, படத்தை, காட்டை, மரத்தை ஆகியவை அழிவுநோக்கிய கருத்திற் பயன்படுத்தப்படுவதால் அழித்தற்பொருள் அல்லது அழிக்கப்படுபொருள் எனப்படுகின்றன.

அடையப்படுபொருள்.
இலக்கை எய்தினான், பதக்கத்தை வென்றான், பாடசாலையை அடைந்தான், பதவியைப் பெற்றான் ஆகிய வாக்கியங்களில் வருகின்ற இலக்கை, பதக்கத்தை, பாடசாலையை, பதவியை போன்ற சொற்கள் அடையப்படுகின்ற நோக்கில் வருவதால் அவை அடைதற்பொருள் அல்லது அடையப்படுபொருள் எனப் பெயர்பெறுகின்றன. 

நீக்கப்படுபொருள்.
கல்வியைத் தொடரமறுத்தான், ஊரை விட்டேகினான், நகரத்தை நீங்கினான், உலகைப் பிரிந்தான், ஆகிய வாக்கியங்களில் வருகின்ற கல்வியை, ஊரை, நகரத்தை, உலகை எனுஞ்சொற்கள் துறத்தல் அல்லது நீங்குதல் எனும் கருத்துக்காகப் பயன்படுத்தப்படுவதால் நீக்கப்படுபொருள் அல்லது துறத்தற்பொருள் எனவழைக்கப்படுகின்றன.

ஒக்கப்படுபொருள்.
பொன்னை ஒத்த வண்ணத்தாள், புலியை நிகர்த்த வீரன், மானைப் போன்ற விழியாள், மேகத்தையொத்த கூந்தல் போன்ற வாக்கியங்களில் வருகின்ற செயப்படு பொருள்களான பொன்னை, புலியை, மானை, மேகத்தை ஆகியன ஒப்புமைகாட்டும் நோக்கில் பயன்படுவதால் ஒத்தல் அல்லது ஒக்கப்படுபொருள் எனவிவை பெயர்பெறுகின்றன.

உடைமைப்பொருள்.
கல்வியை உடையோன். பணத்தைக் கொண்டிருப்பவன். நாட்டை ஆள்கின்றான் ஆகிய வாக்கியங்களில் வரும் கல்வியை, பணத்தை, நாட்டை போன்ற செயப்படுபொருட் பதங்கள் உடைமையைக் குறிக்கப் பயன்படுவதால் அவை உடைமைப்பொருள் எனப்படுகின்றன.

சிறப்புக்குறிப்பு:
இரண்டாம் வேற்றமையேற்று வருகின்ற பெயர்ச்சொற்களைப் பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் வேறோரு விதத்திலும் பகுத்துக் காட்டுகிறார். குறிப்புப்பெயர், குறிப்பிலாப்பெயர் என்பவையே அவை.

குறிப்புப் பெயர்:

நான் கண்ணனைக் கண்டேன்.
மாலா அம்மாவை அழைத்தாள்.
வீட்டுக்குப் பின்னால் நின்ற தென்னையை வெட்டினேன். 
 ஆகிய வாக்கியங்களில் சந்தேகத்துக்கு இடமில்லாமல் இரண்டாம் வேற்றுமை ஏற்கும்பதம் அடையாளப்படுத்தப்படுகிறது. அதாவது சிறப்பாக ஒன்றைக் குறித்துப் பேசுகிறது. கண்ணனை, அம்மாவை, (பின்னால் நின்ற) தென்னையை ஆகியபதங்கள் தெளிவான ஒன்றைச் சுட்டிநிற்கின்றன.

குறிப்பிலாப்பெயர்.

கந்தசாமி மரம் (மரத்தை) வெட்டினான்.
தங்கை நகையைத் தொலைத்தாள்.
பொலிசார் குற்றவாளிகளைக் கைது செய்வர்.
ஆகிய வாக்கியங்களில் எந்த மரம், எந்த நகை, எந்தக் குற்றவாளி என்பதற்குத் தெளிவான விளக்கம் இல்லை. எனவே இவை குறிப்பிலாப்பெயர்கள் எனப்படுகின்றன.

பொதுவாகக் குறிப்பிலாப்பெயர்கள் அஃறிணையாக அமையுமிடத்து “ஐ”உருபை வெளிப்படையாக ஏற்காது போகவுங்கூடும். உ-ம்: கந்தசாமி மரம் வெட்டினான், தம்பி பாடம் படித்தான். இவற்றில் மரத்தை, பாடத்தை என வரவேண்டிய செயப்படுபொருள் மரம் என்றும் பாடம் என்றும் வருவதைக் கவனிக்கலாம்.

எவ்வாறெனினும், குறிப்புப்பெயர், குறிப்பிலாப்பெயர் என்பவற்றையும் தெரிந்து வைத்திருப்பது மொழித்திறனுக்குச் சிறப்பைத் தரும்.

மூன்றாம் வேற்றுமை.

ஆல், ஆன், ஒடு, ஓடு, உடன் என்பவை மூன்றாம் வேற்றமை உருபுகளாகக் கொள்ளப்படுகின்றன. 
ஆல், ஆன் இரண்டும் கருத்தாப்பொருளிலும் கருவிப்பொருளிலும் பயன்படுத்தப்படுகின்றன. கருத்தாப் பொருளில் வருகையில் இயற்றுதற் கருத்தா, ஏவுதற்கருத்தா என இருவகைப்பட்டும், கருவிப் பொருளில் வரும்போது முதற்கருவி, துணைக்கருவி என இருவகைப்பட்டும் பொருள் தருகின்றன. 

தற்காலத்தில் ஆன் உருபு பொதுவாகப் பயன்பாட்டினின்றும் அருகிப் போய்விட்டதால் ஆல் உருபு மாத்திரமே நான்குவகைத்தும் செயல்படுகின்றன.
உதாரணங்கள்: கருத்தாப்பொருள்.
இது இயற்றுதற் கருத்தா. ஏவுதற் கருத்தா என இருவகைப்படுகிறது.

இயற்றுதற்கருத்தா
தச்சனால் கட்டப்பட்ட வீடு,  கணபதியால் செய்யப்பட்ட பொம்மை, திருக்குறள் திருவள்ளுவரால் இயற்றப்பட்டது ஆகிய வாக்கியங்களில் தச்சன், கணபதி, திருவள்ளுவர் ஆகிய கருத்தாக்கள் நேரடியாகச் செயல்பட்டிருப்பதால், ஆல் உருபு இயற்றுதற் கருத்தாப் பொருளைக் கொண்டிருக்கிறது என்பர் இலக்கணநூலோர்.

ஏவுதற்கருத்தா.
இராஜராஜசோழனால் கட்டப்பட்ட பெருங்கோயில், அரசால் வகுக்கப்பட்ட திட்டம், ஆகிய வாக்கியங்களில் மன்னனோ அரசோ பொருள்வழங்கப் பிறராற் பணி நிறைவேற்றப்படுவதால், அவை ஏவுதற்கருத்தா எனப்படுகின்றன.

கருவிப்பொருள்
முதற்கருவி.
மண்ணாலான பாத்திரம், தங்கத்தாலான காப்பு, மரத்தாற் செய்த கதவு என்பவற்றை நோக்கின், மண், தங்கம் மரம் என்பவையே பொருள் தோன்றுவதற்கு முதற்பொருளாக அமைந்ததனால் அவை முதற்கருவி எனப்படுகின்றன.

துணைக்கருவி.
இயந்திரத்தால் செய்யப்பட்ட நகை, வாளால் அறுக்கப்பட்ட மரம் என்பவற்றில் ஆல் உருபு பெறுகின்ற இயந்திரம், வாள் என்பவை துணையுபகரணங்களாகச் செயற்படுவதனால் துணைக்கருவி எனப்படுகின்றன.

வாள் கொண்டு மரத்தை வெட்டினான், இயந்திரத்தின் மூலம் செய்யப்பட்ட நகை என வாக்கியங்கள் அமைகின்றபோதில் கொண்டு. மூலம் ஆகிய சொற்கள் ஆல் உருபுக்குரிய பணிகளைச் செய்கின்றன. எனவே இவையும் மூன்றாம் வேற்றுமை உருபு சார்ந்தவையே என்பர் அறிஞர்.

அவன் சந்தோஷத்தால் துள்ளிக்குதித்தான், மாலா கவலையால் சோர்ந்து போனாள் ஆகிய வசனங்களில் வருகின்ற ஆல்உருபு உணர்வுப்பொருளிலும்,
அவன் வேலையால் இப்போதுதான் வந்தான், நான் கொழும்பால் வருகிறேன் ஆகிய வசனங்களில் ஆல் உருபு நீங்கற்பொருளிலும் வருகின்றன என்பதை அறிந்து கொள்வது சிறப்புச்சேர்க்கும்.

மூன்றாம் வேற்றமையின் மற்றைய உருபுகளான ஒடு, ஓடு, உடன் என்பவை உடனிகழ்வுக் கருத்துகளை முன்வைக்க உதவகின்றன.
கணவனொடு மனைவி சென்றாள். (ஒடு)
நண்பனோடு அவன் விளையாடினான்.(ஓடு)
இராமுவுடன் சோமன் வந்தான். (உடன்)


சில இடங்களில் இவ்வுருபுகள் அடைமொழிப் பொருளாகவும் இவை பயன்படுத்தப்படுவதுண்டு.
அன்போடு பார்த்தான்.
பசியொடு அலைந்தான்.
கோபத்துடன் எழுந்தான்.  போன்றவற்றை உதாரணங்களாகக் கொள்ளலாம்.


கலப்புறுப்பொருள் நிலைக்கும் இவ்வுருபுகள் பயன்படுத்தப்படுகின்றன.
பாலொடு தேன்கலந்தாற் போல.
பயிரோடு களையும் வளர்ந்தது.
சிரிப்புடன் அழுகையும் வந்தது.  போன்றவற்றை உதாரணங்களாகக் கொள்ளலாம்.


கூட்டல் அல்லது சேர்த்தற் பொருளிலும் இவ்வுருபுகள் பயன்படுவதுண்டு.
பத்தொடு பதினொன்றாய்….
ஐந்தோடு மூன்றைக் கூட்டு…
சம்பலுடன் தோசை சாப்பிட்டேன்.   என்பவற்றை எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம்.


இடந்தொடர்பான தெளிவுப்பொருளிலும் இவ்வுருபுகள் பயன்படுகின்றன.
அவர் இடமாற்றம் பெற்று ஊரொடு போய்விட்டார்.
ஓய்வுபெற்ற அப்பா இப்போது வீட்டோடுதான் இருக்கிறார்.
அவர் பொழுது வயலுடன்தான் கழிகிறது.    என்பவற்றை நோக்கலாம்.


வரையறைப்பொருளிலும் இவ்வுருபுகள் செயற்படுவதுண்டு.
வருகிற சித்திரையோடு மாமா ஓய்வுபெறுகிறார்.
கடந்த ஆண்டுடன் படிப்பு முடிந்துவிட்டது.
ஐந்து இடியப்பத்துடன் அவர் திருப்தியடைந்தார்.

இவற்றுடன், இரவோடுஇரவாக, காதோடுகாதாக, கதையோடுகதையாக, தோளோடுதோளாக, பணத்துடன்பணமாக என வருகின்ற இடங்களிலும் மூன்றாம் வேற்றுமை உருபுகளான ஓடு, உடன் என்பவை பயன்படும் விதங்களையும் தெரிந்து கொள்வது தமிழறிவை மேம்படுத்தும் எனலாம். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5