ITAK -03

நாம் கடந்து வந்த பாதை 3


1961ஆம் ஆண்டு. சிறிமாவின் ஆட்சிக்காலம். வடக்கு கிழக்கு எங்ஙணும் தமிழரசுக் கட்சியின் தலைமையில் அரசுக்கெதிராகத் தமிழ்மக்கள் திரள்திரளாகக்கூடிச் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள்.

திருக்கோணமலையிலும் கச்சேரி முன்னால் போராட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. அன்றைய கச்சேரி  கடற்கரையின் முன்னால் இப்போதுள்ள கடற்படையினரின் அருங்காட்சியகக் கட்டடத்தில் அமைந்திருந்தது. எனது தாயாரும் தினமும் காலையில் வந்து கட்டடத்துக்கு முன்னால் தெருவோரம் விசாலமாக அமைந்திருந்த நிலப்பரப்பில் அமர்ந்து விடுவார். என் தாயாரைப்போல் நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் காலையிலேயே கூடிவிடுவார்கள். எனக்கு அப்போது பத்து வயது. நானும் தாயாருடன் வந்து அமர்ந்து கொள்வேன். தந்தையார் எங்களிருவரையும் அழைத்துவந்து விட்டுவிட்டுத் தன் பணிக்காகச் சென்றுவிடுவார்.

கச்சேரி முடங்கிப் போய்க் கிடந்தது. தமிழர் மாவட்டங்களில் அமைந்திருந்த அனைத்துக் கச்சேரிகளுக்கும் இதுதான் நிலை. அரச நிர்வாகம் தமிழர்நிலங்களில் செயலிழந்து போனது. அவ்வப்போது பொலிசாரும் இராணுவத்தினரும் வந்து  அறப்போராளிகள்மீது ஆத்திரத்துடன் தடியடி நடத்துவார்கள். அறப்போராளிகளும் அடிகளை வாங்கிக் கொண்டு உரக்கக் கோஷமிடுவார்கள்.

அமரர் இராஜவரோதயரும், அமரர் ஏகாம்பரமும் கூட்டத்தினருடன் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாது அமர்ந்திருப்பார்கள். அவர்கள் இல்லாச் சமயங்களில் சத்தியாக்கிரகிகளுடைய பாதுகாப்பைக் கவனிப்பதற்காகச் சில செயற்றிறனான இளைஞர்கள் தமிழரசுக் கட்சியால் நியமிக்கப் பட்டிருந்தார்கள். அவர்களில் ஒருவராக இன்றைய தமிழர்தலைவர் சம்பந்தனும் இருந்தார் எனப் பின்னாளில் அறிந்து கொண்டேன். இருபத்தாறு வயது நிரம்பிய இளைஞனான சம்பந்தன் அப்போதுதான் புதிதாகச் சட்டத்தரணியாகி இருந்தார்.

வசதிபடைத்த தமிழர்கள் சத்தியாக்கிரகிகளுக்கு உணவுப் பொதிகளையும் குளிர்பானங்களையும், மிட்டாய் முதலிய பொருள்களையும் தேவைக்கேற்ப வழங்கிக் கொண்டிருந்தனர். சுவையான பானங்களிலும் மிட்டாய்களிலும் நான் பிரியமானவனாக இருந்தேன். எனக்கு வெயில் தெரியாத அளவுக்;கு அவை மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருந்ததை இன்றும் மறக்க முடியவில்லை.

அன்றைய நாட்களில் ஒலிச்சாதனங்கள் இப்போதுபோல் வசதியானவையாக இருக்கவில்லை. எனவே அறப்போராளிகளை உற்சாகப்படுத்துவதற்கு உரையாளர்களும் வாய்ப்பாட்டுக்காரர்களும் தேவைப்பட்டனர். உரையாளர்கள் அரசியல் நிலைமைகளையும், போராட்டத்தின் இயல்பையும், அதனால் ஏற்படுகின்ற மாற்றங்களையும் அறப்போராளிகளுக்குத் தெரிவித்துக் கொண்டிருப்பார்கள். வாய்ப்பாட்டுக்காரர்கள் தங்கள் இனிமையான குரலால் அன்றைய பிரசித்திபெற்ற மெட்டுகளில் பாட்டமைத்துப்பாடி உற்சாகப்படுத்திக் கொண்டிருப்பார்கள். மக்களும் அவர்களுடன் இணைந்துபாடி மகிழ்வார்கள். இவர்களில் எவரும் இறக்குமதியாளர்களல்லர். அனைத்து வளவாளர்களும் சத்தியாக்கிரகிகளாகவே இருந்தார்கள்.

இவர்களில் ஒருவர் திருமதி லீயோ என்பவர். இவர் கணீரென்ற குரலெடுத்துப் பாடினால் சுட்டெரிக்கும் வெயிலும் தன்வயமிழந்து போகும். அறப்போராளிகளிடையே ஆர்வம் பொங்கி வழியும். இவரின் கணவர் திரு.லீயோ தொலைத்தொடர்புத் திணைக்கள ஊழியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் அந்தக் காலகட்டத்தில் சிறந்த நாடகக்கலைஞர். நல்ல மேடைப் பேச்சாளி. உரையாடிக் கொண்டீருக்கும்போதே பச்சை மரத்துண்டில் அழகான பொம்மைகள் செய்து கையளித்துவிட்டுப் போகின்ற அளவுக்குச் சிறந்த கைவினைஞர். ஒரே வார்த்தையில் சொல்வதானால், சிறந்த கலைக்குடும்பம். தந்தை செல்வாமேல் அதீத பக்தி கொண்டவர்கள்.

அந்த நாட்களில் “மாப்பிள்ளை வந்தார். மாப்பிள்ளை வந்தார் மாட்டு வண்டியிலே…. பொண்ணு வந்தா பொண்ணு வந்தா பொட்டி வண்டியிலே….” என்ற திரைப்பாடலும், “ நீலவண்ணக் கண்ணா வாடா… நீ  ஒரு முத்தம் தாடா…” என்ற பாடலும் எல்லோர் வாயிலும் உலவும் பாடல்களாக இருந்தன. இப்பாடல்களின் மெட்டுகளில் திருமதி லீயோ இனிமையான உரத்த குரலெடுத்து எழுச்சிப் பாடல்களைப் பாடுவார். அவரது குரலும் பாடல்களின் கட்டுமானமும் கேட்போரை மெய்ம்மறக்கச் செய்துவிடும்.

“ மாப்பிள்ளை வந்தார்….” என்ற மெட்டில் பாடிய பாடலில் தொடக்கவரிகள் மட்டுமே இப்போது என் நினைவில் நிற்கின்றன. அந்தப் பாடல் வரிகள்:

“சிறிமா வந்தா சிறிமா வந்தா
 சிறகு வண்டியிலே
சிணுங்கி நின்றா சிணுங்கி நின்றா
 சிங்களக் கண்டியிலே..”  என்று தொடர்கிறது.

இதேபோல் “ நீலவண்ணக் கண்ணா வாடா..” என்ற பாடல் மெட்டில் பாடப்பட்ட பாடல் வரிகள் இவை:

“மானமுள்ள தமிழா வாடா
மார்போடு முன்னே வாடா
மதியாதார் முற்றந் தன்னை
மிதியாமுத் தமிழா வாடா……(மானமுள்ள..)

தேனும்பாலும் ஒன்றாய்க் கூட்டித்
தீந்தமிழ்த்தாய் தந்தாள் ஊட்டி
நானும் நீயும் உண்ணும்போது
நாய்களுக்கேன் வம்புப் போட்டி….(மானமுள்ள..)

பள்ளிசெல்லும் பாலா வாராய்
சொல்லும்சேதி அன்பாய்க் கேளாய்
தெள்ளுதமிழ் கொள்ளு சீராய் 
தள்ளுசிங் களத்தை வீறாய்….(மானமுள்ள…) 

போராட்டக் காலத்தில் உழைத்த லீயோ குடும்பம் பின்னாளில் தமிழரசுக் கட்சிக்காரர்களால் கண்டு கொள்ளப்படவில்லை. திரு.லீயோ பல ஆண்டுகளுக்கு முன்னரே காலமாகிவிட்டார். திருமதி. லீயோ கடந்த ஆண்டு திருக்கோணமலை நித்தியபுரியில் காலமானார். அவரது மரணச்சடங்கில் கலந்துகொண்ட ஒரேயொரு தமிழரசுக் கட்சிக்காரன் நானாகவே இருந்தேன் என்பது கவலையான செய்தி. தந்தையாரைப் பற்றி நிறைய அறிந்திருந்த மகன் கமலநாதன் தாயாரின் சாதனைகள் பற்றி அறியாதவராகவே இருந்தார். நான் மேற்கண்ட பாடல்களைச் சொல்லித் தாயாரின் திறமைகளை விபரித்தபோது தன் தாயார் மேடைப்பாடகர் என்றமட்டில் அறிந்திருந்ததாகவும் எனது செய்தி தனக்குப் பெருமிதமூட்டுவதாகவும் கூறித் தாயாரின் உடலைப்பார்த்துக் கண்ணீர் விட்டமை என் நெஞ்சைக் கனக்கச் செய்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5