அரங்கக் கவிதை 1 - தி.த.க.

 எங்கள் சிந்தையில்  தி.த.க.

திருக்கோணமலை தந்த தமிழறிஞர் தி.த.கனகசுந்தரம்பிள்ளை அவர்கள் நினைவு விழாவில் சுமார் பத்தாண்டுகளுக்கு முன்னர் -ஆண்டு சரியாக நினைவில் இல்லை- பாடிய கவிதை இது. திருக்கோணமலை சாம்பல்தீவு மகாவித்தியாலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைந்த கலைஞர் கலாவினோதன் சித்தி அமரசிங்கம் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.


                                              இந்தத் தமிழரங்கில் இனிதே கவிதைசொலத்
                                              தந்த வாய்ப்புக்காய்த் தமிழாலே வணங்குகிறேன்.

                                              முந்தைத் தமிழ்ப்பெருமை முகிழ்சாம்பல் தீவுதனில்

                                              செந்தமிழன் புகழ்பாட சிறியேன்நான் பேறுபெற்றேன்.

                                               வந்திருக்கும் பெரியோர்க்கும் வளர்தமிழர் சந்ததிக்கும்

                                               எந்தன்இரு கரம்கூப்பி இதயந்தொட வணங்குகிறேன்.

                                               இந்தவித்தி யாலயத்தின் இசைவிளங்கத் தன்பணியைத்

                                               தந்துஇங்கு அமர்ந்திருக்கும் தலைமையால் மிடுக்குற்றேன்.

                                               பேசரிய பெருமையுடன் என்னெதிரில் அமர்ந்திருக்கும்

                                               ஆசிரியப் பெருந்தகையீர் அன்பான வணக்கங்கள்.

                                               மேடை பெருமைகொள மேன்மைநிறை சொற்பொழிவால்

                                               வாடை கிளப்பவந்த வல்லோர்க்கும் என்வணக்கம்.



எங்கள் நெஞ்சில் தி.த.க.
 என்றும் நிறைந்து நிற்கின்றார்
பொங்கு தமிழர் வலுவாகப் 
 புதுமைத் தென்றல் மணமாகத்
திங்கள் சிந்தும் ஒளியாகத்
 தேனிற் குழைத்த பாகாக
உங்கள் திறமை ஊற்றாக
 உயிரிற் கலந்து வாழ்கின்றார்.

பிறந்த மனிதன் இறக்கின்றான்
 பிறவா திருக்க நினைக்கின்றான்
மறந்தும் பிறர்க்கு உதவாத
 மரம்போல் வீழ்ந்தும் மடிகின்றான்
பிறந்த பயனை ஒருசிலர்தாம்
 வாழும்போதே எய்துகின்றார்
நிறைந்த தொண்டால் தி.த.க.
 நினைவில் இன்றும் வாழ்கின்றார்.


தமிழைத் தொழுது அவர் படித்தார்
 தமிழின் சிறப்பை அவருணர்ந்தார்
தமிழை உணர்ந்து கற்றதனால்
 தமிழாள் அவரின் பின்சென்றாள்
தமிழில் அன்னார் மயங்கிநின்றார்
 தமிழின் புகழை மீட்டுத்தந்தார்
அமிழ்தாய்த் தமிழின் றிருப்பதற்கும்
 அன்றே தாங்கும் தூணானார்.


சங்க காலத் தமிழுக்குச்
 சகத்தினில் மீண்டும் உயிர்தந்தார்
மங்கிப் போன சுவடிகளை
 மலர வைத்து மீள்வித்தார்
தங்கத் தமிழின் அணிகலனைத்
 தூசு தட்டி அணிவித்தார்
எங்கள் முன்னோர் சிறப்புணர
 எமக்கு அவரும் வழிசமைத்தார்.


கோணை நாதர் குடிகொண்ட
 கொள்கை மறவர் தமிழ்மண்ணின்;
வீணைக் கொடியோன் இராவணனார்
 விருப்புடன் துதித்த இம்மண்ணின்
ஆணை கேட்டுத் தமிழ்நாட்டு
 அறிஞர் கூட்டம் நின்றதென்றால்
மாணப் பெரிய தி.த.க.
 மகிமை சொல்ல வேறுண்டோ?


இலக்கணம் அறிந்த வித்தகராய்
 இலக்கியம் செறிந்த தத்துவராய்த்
தலைக்கனம் அழிந்த புத்தியராய்த்
 தமிழுக் குழைத்திடும் சக்தியராய்
விலக்குகள் அகற்றிய விழுமியராய்
 வியத்தகு தமிழர் பெருமைகளாய்
நிலமிசை வாழ்ந்தார் தி.த.க.
 நெஞ்சினில் நிறைந்தார் தி.த.க.



அன்னார் பெருமை தனையுணர
 இந்த மண்ணோர் மறந்ததனால்
மின்னும் போலி உலுத்தர்கள்
 எமக்கு நிலவு காட்டுகின்றார்
மண்ணில் பிறந்த பெரியோரை
 மதிக்க நாம்மறந் தோமானால்
எண்ணில் அடங்காப் போலிகள்
 இங்கே வந்து முடிகொள்வார்.



இயலே இசையே நாடகமே
 இணைந்து வந்த முத்தமிழே
புயலாய் எழுந்து உலகினிலே
 புரட்சி செய்கண னித்தமிழே
செயலாய்த் திரண்டு உருக்கொண்டு
 செருக்களம் வென்ற செந்தமிழே
இயலாத் துறையும் உனக்குண்டோ?
 இகத்தினில் உனக்கு நிகருண்டோ?


உந்தன் உதிரக் குழந்தைகளாய்
 உயிரிற் கலந்த பிஞ்சுகளாய்
இந்த மண்ணில் நாம்பிறந்தோம்
 இடர்மிகு வாழ்வை நாம்கடந்தோம்
சொந்தப் பலத்தில் தோளுயர்த்தி
 சூழ்ந்திடும் அரக்கர் தமைத்துரத்தி
முந்தைப் பெருமை மீட்கவந்தோம்
 முழுமனத் தோடு அருள்வாயே


அன்னை அருளை இறைஞ்சிநின்று
 அறிஞர் புகழைத் தாங்கிநின்று
கன்னல் தமிழில் கவிதொடுத்தேன்
 கனக சுந்தரன் புகழ்படித்தேன்
என்னை இங்கு வரவேற்ற
 இளையோர் பெரியோர் அனைவருக்கும்
நன்றி கூறிப் பெரியோர்சூழ்
 சபையி னின்றும் விடைபெற்றேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5