வெருகற்பத்து 06- தென்கயிலை வேலன்
தென்கயிலை வேலன்..
தென்கயிலைப் பூமியிலே தென்புலத்து எல்லையிலே
தென்றல்வரும் பாதையிலே அமர்ந்திருப் பாய்நீ
தேவியிரு மாதரோடும் மகிழ்ந்திருப் பாய்நீ
அன்புகொண்ட அடியவர்கள் ஆனந்தப்பூச் சொரிந்திருக்க
அன்னைஉமை பாலகனாய் அமர்ந்திருப் பாய்நீ
ஆற்றங்கரை வேலவனாய் மகிழ்ந்திருப் பாய்நீ.
கோலமயில் ஏறிவந்து சேவற்கொடி அழகன்என்று
கோலமகள் குஞ்சரியோடு அமர்ந்திருப் பாய்நீ
கொஞ்சுவிழிக் குறத்தியோடு மகிழ்ந்திருப் பாய்நீ
சீலமுள்ள தளபதியாய் தேவசேனைக் கதிபதியாய்
சேலுலவும் ஆற்றங்கரை அமர்ந்திருப் பாய்நீ
சித்திரவே லாயுதனாய் மகிழ்ந்திருப் பாய்நீ.
வானவரும் போற்றுகின்ற வள்ளல்என வாய்த்தவனே
வானிலவாய் ஒளிகொடுத்து அமர்ந்திருப் பாய்நீ
வெருகற்பதி அமர்ந்தினிதே மகிழ்ந்திருப் பாய்நீ
தேனமுதத் திருப்புகழும் தெய்வத்தமிழ்ப் பாசுரமும்
தேனளிபோல் கேட்டினிதே அமர்ந்திருப் பாய்நீ
தென்றல்வரும் பாதையிலே மகிழ்ந்திருப் பாய்நீ
கருத்துகள்
கருத்துரையிடுக