வெருகற்பத்து 05 - தமிழ்க் கடவுள்......
தமிழ்க் கடவுள்.
தேவர்குலம் காக்கவந்த எங்கள் வேலவன்தீந்தமிழர்க் கடவுளென வந்த பாலகன்
மாவலியாள் கரையமர்ந்து அருள்சுரக் கின்றான்
மாதர்வள்ளி யானையுடன் வலம்வரு கின்றான்
இச்சைஞானம் கிரியையென்று வேதம் சொன்னவன்
ஏத்தும்பக்தர் உள்ளங்களில் குடிய மர்ந்தவன்
கச்சியப்பர் நாவினிலே கவிதை யானவன்
கந்தக்கோட்டம் தனிலமர்ந்து காவல் செய்பவன்.
வடக்கினிலே சந்நிதியில் அருள்பொழி கின்றான்
கிழக்கினிலே வெருகலனாய் மனம்நிறை கின்றான்
தெற்கினிலே கதிரைமலை தனிலமர் கின்றான்
தேடிவரும் அடியவர்க்கு ஒளிகொடுக் கின்றான்;
பார்வதியாள் பாலகனை மனத்தில் ஏந்துங்கள்
பாசமுள்ள சரவணனைக் கரத்தில் ஏந்துங்கள்
கார்த்திகேயன் அருள்பெறவே நிமிர்ந்து நில்லுங்கள்
கலியுகத்துக்குக் கடவுள்அவன் உரத்துச் சொல்லுங்கள்.
கருத்துகள்
கருத்துரையிடுக