அரசியற்கட்டுரை -02 -தமிழரசுக் கட்சியின் திருமலை மாவட்டக்கிளையும் அதன் தற்போதைய நிலையும்.
தமிழரசுக் கட்சியின் திருமலை மாவட்டக்கிளையும் அதன் தற்போதைய நிலையும்.
திருக்கோணமலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிலைமை பரிதாபமாகிக் கிடக்கிறது. அமரர் இராஜவரோதயனாரால் திருக்கோணமலையில் விதை தூவப்பட்டு, அமரர் ஏகாம்பரம், அமரர் நேமிநாதன், அமரர் தங்கத்துரை போன்றோரால் சிறப்பிக்கப்பட்டு இன்றைய தலைமுறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட கட்சி இது. திரு வீர.சுப்பிரமணியம், அமரர் மாணிக்கசபாபதி, அமரர் ஈழத்துநாதன், அமரர் எலட்ரிக்கல் ராஜன் ஆகியோரால் கண்ணுங்கருத்துமாக வளர்க்கப்பட்டு புதிய தலைமுறையினருக்காக விட்டுச் செல்லப்பட்ட கட்சி இது.
1977ல் திரு.சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலந்தொட்டு, பல இன்னல்களுக்கு மத்தியிலும் செயலாளர் நாயகமாக, கட்சித் தலைவராக, இப்போது எம்மை வழிநடத்தும் தமிழர் தலைவராகச் செயலாற்றி வருவதன்மூலம் பேணப்பட்ட கட்சி இது. தமிழர் விடுதலைக் கூட்டணியாகச் செயல்பட்டபோது அதன் பிரதான சக்தியாக இயங்கியதோடல்லாமல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாகியதன் பின்னரும் அதன் தலைமைச் சக்தியாகச் செயல்படுகின்ற கட்சி இது. ஆனால் இன்று இத்துணைப் பெருமை நிறைந்த தமிழரசுக் கட்சியின் நிலைமை திருக்கோணமலையில் தலைகீழாகிக் கிடக்கிறது.
1952தொடக்கம் தமிழர்களின் இதயங்களில் கோயிலாகக் கோலோச்சிய கட்சி கொள்கையில்லாக் குறவர்களின் கூடாரமாகக் காட்சியளிக்கிறது. அன்றைய இளைஞர்களால் ஐம்பது சதமும் ஒரு ரூபாயுமாகச் சேர்க்கப்பட்டு அரசடி, சிவன்கோவிலடி. பத்தாம்குறிச்சி கணேசன் சந்தி, திருக்கடலூர் எனப் பல்வேறு இடங்களிலும் கிளைகள் நிறுவப்பட்டு மக்களால் பேணப்பட்ட கட்சி பதவியாசை கொண்ட உலுத்தர்களின் கைகளில் அகப்பட்டுச் சின்னாபின்னப் பட்டுப்போய் நிற்கிறது
.
திருக்கோணமலைத் தமிழரசுக் கட்சிக்கிளை அந்த நாட்களில் பாராளுமன்ற உறுப்பினர்களையும் கட்டுப்படுத்தி வேலை வாங்கும் வல்லமை உடையதாக இருந்தது. அன்றைய மாவட்டக்கிளைத் தலைவர்கள் நேர்மையாகவும் உண்மையாகவும் உழைத்ததன் காரணமாகவே அவர்களால் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் தைரியமாக மோத முடிந்தது. எங்கள் கருத்துகளையும் அனுசரித்து நடக்க முடியாவிட்டால் தெளிவாகச் சொல்லி விடுங்கள். நாங்கள் வேறாகச் செயல்படுவோம்: நீங்கள் தனியாக இயங்கிப் பாருங்கள் என்ற அழுத்தமாகச் சொல்கின்ற துணிச்சல் அவர்களுக்கு இருந்தது.
ஒரு பொதுத் தேர்தலின்போது சம்பந்தனும் தங்கத்துரையும் வேட்பாளர்களாக நிறுத்தப் பட்டிருந்தார்கள். சம்பந்தன் அத்தேர்தலிற் போட்டியிட விரும்பவில்லை. தங்கத்துரையை நிறுத்தி எல்லோரும் இணைந்து பரப்பரைசெய்து அவரை வெல்லவைப்போம் என்பதாகவே அவர் கருத்து இருந்தது. நகரசபை மண்டபத்தில் பொதுச்சபையைக் கூட்டி சம்பந்தனும் தேர்தலில் நின்றேயாக வேண்டும் என வற்புறுத்தி அவரைப் பணியவைக்குந் திறன் அன்றைய மாவட்டத் தலைமைக்கு இருந்தது.
அதே தேர்தலில் தங்கத்துரையின் இலக்கம் 2ஆகவும் சம்பந்தனின் இலக்கம் 4ஆகவும் அமைந்தபோது நான்குக்கும் இரண்டுக்கும் கட்டாயம் விருப்புவாக்கை அளியுங்கள்: மற்றைய விருப்புவாக்கை நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு அளியுங்கள் என்ற பரப்புரை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்தப்பரப்புரையில் சம்பந்தன் முதல் ஸ்தானத்திலும் தங்கத்துரை இரண்டாம் ஸ்தானத்திலும் இருந்தனர். தங்கத்துரையும் பெருந்தன்மையுடன் இதனை ஏற்றுக் கொண்டு பரப்புரைகளை நிகழ்த்தினார்.
செல்வநாயகபுரம் மேடையிற் பேசிக்கொண்டிருந்த தங்கத்துரை வாய்தடுமாறி இரண்டுக்கும் நான்குக்கும் கட்டாயம் வாக்களியுங்கள் என்று தனது இலக்கத்தை முதன்மைப் படுத்திவிட்டார். இது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒன்றல்ல: எதேச்சையாக இடம்பெற்ற சம்பவம். தங்கத்துரை பேசிமுடிந்து மேடையை விட்டிறங்கியதும் அவரை அணுகிய ஈழத்துநாதன், ‘அண்ணே.. நீங்கள் இந்தமாதிரிப் பேசுவதாக இருந்தால் அடுத்த மேடையில் உங்களுக்கு இடம் கிடையாது.’ என்றார் கண்டிப்புக் கலந்த தொனியுடன். அப்போதுதான் தன்னையறியாமல் தவறு நேர்ந்துவிட்டதை உணர்ந்த தங்கத்துரை எவ்விதத் தயக்கமுமின்றி உடனேயே மன்னிப்புக் கோரினார்.
மக்கள் செல்வாக்குப் பெற்றிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை உடனடியாகவே கண்டித்த ஈழத்துநாதனின் துணிச்சலும், தயக்கம் எதுவுமின்றி தனது தவறுக்கு அந்த இடத்திலேயே மன்னிப்புக் கேட்ட தங்கத்துரையின் பக்குவமும் அன்றைய கட்சிக் கட்டுக்கோப்பின் விளைவுகள். கட்சிக்கிளைக்குத் தொண்டர்களும் தலைவர்களும் கொடுத்த மதிப்பின் அடையாளங்கள். தனக்காக உழைக்காமல் கட்சிக்காக உழைக்கின்ற உன்னதத்தின் வெளிப்பாடுகள்.
ஒருதடவை, கட்சிக்கிளையின் செயலவைக்கூட்டம் சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நகரசபைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வதென்பதே அதன் பிரதான கருவாக இருந்தது. சம்பந்தன் அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவரது தம்பி விக்கினேஸ்வரனை நகரசபைத் தலைமை வேட்பாளராக நிறுத்துவது என்ற அபிப்பிராயம் உறுப்பினர்களிடையே பரவலாகவும் உறுதியாகவும் காணப்பட்டது. சம்பந்தருக்கு இதில் உடன்பாடில்லை. அரசியலுக்குத் தம்பி வருவதை அவர் விரும்பவில்லை. கடுமையாக அதனை எதிர்த்தார். என்றாலும் விக்கினேஸ்வரனின் கருத்து அறியப்படாமலேயே தலைமை வேட்பாளர் விக்கினேஸ்வரனே எனக் கிளை தீர்மானம் போட்டது.
கட்சிக்கிளையின் மூத்த உறுப்பினர் ஒருவருக்கு இதில் உடன்பாடு இருக்கவில்லை. அவர் கருத்தையும் மீறி முடிவெடுக்கப்பட்டு விட்டது. அவர் எழுந்தார். “கட்சியையும் திருக்கோணமலையையும் சம்பந்தன் குடும்பத்துக்கு எழுதிக் கொடுத்தாயிற்றா?” என்று பளிச்செனக் கேட்டார். “அண்ணன் எம்.பி, தம்பி சேர்மன்: என்ன நியாயம் இது?” என்றும் கேட்டார்.
யாரும் இத்தகைய ஒரு கேள்வியை எதிர்பார்க்கவில்லை. சம்பந்தன் ஒருகணம் ஆடிப்போனார். அந்த அளவுக்கு அவருக்கிருந்த மனத்துணிவும், சம்பந்தனை எதிர்க்கின்ற தைரியமும் கட்சிப்பற்றாலும் கொள்கைப் பிடிப்பாலும் ஏற்பட்டதேயன்றி வேறெந்தப் பின்னணியாலுமல்ல.
துரைரெட்ணசிங்கம் தலைமை ஏற்றிருந்த காலத்திற்கூட நேர்மைமிக்கவர்களால் கட்சிக்கிளை சூழப்பட்டிருந்தது. தன்னலமற்றவர்களால் பாதுகாக்கப்பட்டிருந்தது. சம்பந்தனுடன் நேரில் மோதுகின்ற தைரியத்தை அவர் கொண்டிராதபோதிலும், தொண்டர்களை அரவணைப்பதிலும், மக்கள் உறவைப் பேணுவதிலும் உயர்ந்தே நின்றார். அடிக்கடி ஆதரவாளர்களை அழைத்துக் கூட்டம் போட்டார். அவர்கள் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்குச் சிரித்த முகத்துடன் பொறுமையாகப் பதிலளித்தார். ஏச்சுப்பேச்சுகளைத் தாங்கினார். கட்சியின் செயற்பாடுகளை மக்களுக்கு விளக்கினார். மக்கள் ஆதரவுபெற்ற கட்சிக்கிளையாகவே அது இயங்கியது.
துரைரெட்ணசிங்கத்தின் வேகம் காணாது என்று சிலர் சொன்னார்கள். கூட்டம் நடைபெறுகிற நேரத்தில் தங்கள் கோபக் கணைகளை அள்ளி வீசினார்கள். தலைமையை மாற்றிக் கட்சிக்கிளையை நிமிர்த்துவோம்: இளைஞர்களே வாருங்கள் என்றார்கள். கட்சிக்குப் புதுரத்தம் பாய்ச்சப் போகிறோம் என்றார்கள். ஆனாலும் அவர் ஊழல் செய்தாரென்றோ நேர்மையீனமாக நடந்து கொண்டாரென்றோ எவரும் கூறவில்லை.
கட்சிக்கிளை இப்போது கைமாறிவிட்டது. உண்மையான கட்சித் தொண்டர்கள் புறந்தள்ளப்பட்டு, தந்திரசாலிகள் தலைமையைக் கைப்பற்றிக் கொண்டனர். புதுரத்தம் பாய்ச்சப் புறப்பட்டவர்களிற் சிலரும் தலைமை மாற்றத்துக்குத் துணைநின்றார்கள். தலைமை மாற்றத்துக்கு அத்திவாரம் போட்ட பழையவர் ஒருவர் புதிய வரவுகளால் முற்றுமுழுதாகப் புறந்தள்ளப்பட்டார். கறிக்குள் விழுந்த கறிவேப்பிலையாகி நொந்து போயிருக்கிறார். அவரை இப்போது உண்மையான கட்சித்தொண்டர்களும் நம்புவதாயில்லை. தான் இறக்கமுன்னர் ஒரு தடவையாகிலும் நகரசபைத் தலைவராக இருந்துவிட்டால் போதும் என்று புலம்பிக்கொண்டு திரிகின்ற நிலை அவருக்கு இப்போது.
மாகாணசபைத் தேர்தலைக் குறிவைத்துக் கட்சிப்படியில் கால்வைத்தவர்கள், அவர்களுக்குத் துணையாக நிற்கிறோம் என்று பெருமை பேசியவர்கள், அதிகாரம் உள்ளவர்களுடன் ஒட்டிக்கொண்டால் வயிறு கழுவலாம்: சொகுசை அனுபவிக்கலாம் என்று திட்டம் போட்டவர்கள் ஆகியோரால் கட்சிக்கிளை பொதுமக்களிடமிருந்து அந்நியப்பட்டுப்போய் நிற்கிறது.
கிளையின் பொறுப்பிலிருப்பவர்கள் பொதுமக்கள் மத்தியில் தாறுமாறான விமர்சனத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். கொள்ளைக்காரர்கள் என்றும் பதவிக்காக எதையும் செய்யத் தயங்காதவர்கள் என்றும் தூற்றப்படுகிறார்கள்.
மாகாணசபை அதிகாரங்கள் சிலநாட்களில் அற்றுப்போகப் போகின்றன என்ற தெரிந்தவுடன், வயிறு கழுவச் சென்றவர்களும் வார்த்தையாடல்களில் ஈடுபடத் தொடங்கிவிட்டார்கள். பிழைகளையும் பித்தலாட்டங்களையும் சகித்துக் கொண்டல்லவா காலந்தள்ளினோம் எனப் புனிதர்கள் போலப் பேசுகிறார்கள்.
யார் இவர்களைப் போகச்சொன்னார் என்ற கேள்விக்கோ, பிழை நடக்கிறது என்று தெரிந்தும் வெளியில் வராமல் ஏன் ஒட்டிக் கொண்டிருந்தார்கள் என்ற வினாவுக்கோ யாரிடமும் விடை கிடையாது. இப்போது அடுத்து அதிகாரம் யார்கையில் செல்லக்கூடும் என்பதும், அவர்களுடன் எப்படி இணைந்து தங்கள் காரியங்களைப் பார்க்கலாம் என்பதுமே இவர்களின் ஆராய்ச்சியாக இருக்கிறது.
ஆயினும், இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழர் தலைவர் சம்பந்தனும் பொதுமக்கள் மத்தியில் பழுதற உயர்ந்தே நிற்கிறார்கள். அரசியல் காழ்ப்புணர்வாளர்களால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எவையும் மக்கள்முன் எடுபட்டதாகத் தெரியவில்லை. தமிழரசுக் கட்சியால் மட்டும்தான் தங்களை வழிநடத்திச் செல்லமுடியும் என்பதில் திருக்கோணமலைத் தமிழர்கள் அசையாத உறுதியுடன் இருக்கிறார்கள்.
கிளையை அலங்கரிப்போர் பொதுமக்களுக்குப் பயனற்ற சுயநலமிகளான போதிலும் மாற்றானின் கையோங்குவதை அவர்கள் விரும்புவதில்லை.
ஆனால் சிலர் இந்தத் தருணத்தில் கனிபறித்துவிட முயல்கிறார்கள். ஊராட்சிமன்றத் தேர்தலையும், மாகாணசபைத் தேர்தலையும் இலக்காகக் கொண்டு செயல்படத் தொடங்கியிருக்கிறார்கள். சிங்களக் கட்சிகளுக்குப் பின்னால் திரிந்தவர்களும், சிங்களப் பெண்அரசியல்வாதியின் பாதுகாப்பில் மாதக்கணக்காக மறைந்து கிடந்தவரும், சம்பந்தனைத் திட்டுவதொன்றே சரியான அரசியல் முறைமை எனச் செயல்பட்டவர்களும் நகராட்சிமன்றத் தலைவராகவாவது வந்துவிட மாட்டோமா என்ற அங்கலாய்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இன்னும் சிலர் முயற்சி தோல்வியடைந்தால் மாற்று அணி போட்டாவது தாக்கத்தை ஏற்படுத்தி விடமுடியாதா எனவும் யோசிக்கிறார்கள்.
இத்தகையோர் தலையெடுப்பதற்கு செயல்திறனற்ற கட்சிக்கிளையே காரணமாகியிருக்கிறது. மக்களுடன் உறவாடாமல் சம்பந்தனைச் சுற்றிச்சுற்றி வருவதுதான் கட்சிப்பணி என்று நம்புகின்ற சில உறுப்பினர்களும் காரணமாயிருக்கிறார்கள். சம்பந்தன்முன்னால் நல்லபிள்ளையாக நடந்து கொள்வதுதான் வேட்பாளர்களாவதற்குத் தகுதி என எண்ணுகின்ற பேர்வழிகளும் துணையாக இருக்கிறார்கள்.
இனிவரும் தேர்தலில், சரியான வேட்பாளர்களை நிறுத்துவதில் சம்பந்தன் கூடிய கவனம் செலுத்தவேண்டும். தன்னைச் சுற்றி வட்டமிடுபவர்களே சிறந்த கொள்கைவாதிகள் என நம்புவாரேயானால். சம்பந்தனின் வார்த்தைகளும் மக்கள்மத்தியில் மதிப்பிழந்து போகலாம். உண்மைநிலையைச் சம்பந்தன் அறிந்துவிடாதபடி மறைக்கின்ற பேர்வழிகளால்தான் கட்சிக்கிளை மக்களிடமிருந்து எட்டநிற்கிறது.
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் திருக்கோணமலைப் பிரிவு தனது பழைய உயர்நிலையை மக்கள்மத்தியில் எட்டவேண்டுமானால், தன்னைச் சுற்றிநிற்பவர்கள் உண்மை பேசுகிறார்கள் என நம்புவதைச் சம்பந்தன் உடனடியாகக் கைவிடவேண்டும். அவர்கள் தனக்காகவும் கட்சிக்காகவும் உழைப்பவர்கள் என்ற எண்ணத்தை விலக்கிக் கொள்ளவேண்டும். தான் வேட்பாளராக வேண்டும் என்பதற்காகக் கூட்டத்தை அழைத்து வந்து கோஷம் போடுகிறவர்கள் விடயத்திற் கவனமாக இருக்கவேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, கட்சிக்கிளைகள் கலைக்கப்பட்டுத் தன்னலமற்ற கட்சிப் பணியாளர்களிடம், உள்ளகத்தலைமை ஒப்படைக்கப்பட வேண்டும். கட்சிப் பணிக்குப் பொறுப்பானவர்கள் ஆகக்குறைந்தது அடுத்துவரும் எந்தத் தேர்தலிலும் போட்டியிடும் சிந்தனை இல்லாதவர்களாக இருக்கவேண்டும்.
கடந்தகாலங்களில் அப்பழுக்கற்று வாழ்ந்தவர்களாகவும் மக்கள்முன் சென்று இன்றைய கட்சிக்கிளையின் செயற்பாடற்ற தன்மைக்கு மன்னிப்புக் கேட்டுப் புதிய கட்டுமானத்தை உருவாக்க வல்லவர்களாகவும் இருக்கவேண்டும்.
கட்சியின் தேவையை முன்னிலைப்படுத்துவோர்க்கு இயலாததென்று எதுவுமில்லை.
08.09.2017.
கருத்துகள்
கருத்துரையிடுக