வெருகற்பத்து 1. ஆற்றங்கரை வேலவா.....
கிழக்கு இலங்கையின் பிரசித்தி பெற்ற முருகனாலயமாகத் திகழும் வெருகலம்பதியின் திருவிழா நடைபெறுகின்றது. பதினோராந் திகதி திங்கட்கிழமையன்று தீர்த்தோற்சவம் இடம்பெற இருப்பதன் காரணமாக திருக்கோணமலையிலிருந்து இவ்வாலயம் நோக்கித் தமது பாதயாத்திரையை மேற்கொள்ளும் பக்த அடியார்கள் முருகனின் திருநாமத்தை உச்சரித்து உளம்கனிந்து பக்தி பரவசத்தில் தமைமறந்து களிப்புற்று பயணக்களைப்பை உணராதிருக்க இவ் வெருகற்பத்து யாக்கப்பட்டு நாளொன்றாய் பத்து நாட்களுக்கும் வௌியிடப்படுகிறது...........
கடவுள் வாழ்த்து
"வேழ முகக்கடவுள் விரைந்தென் அருகமர்ந்துஆழத் தமிழ்சொல்ல அருளுவரேல்; - நாளும்
நல்ல கவிபடைப்பேன் நற்கீர்த்தி நான்பெறுவேன்
எல்லா மவன்செயலே காண்"
ஆற்றங்கரை வேலவா.
ஆற்றங்கரை வேலவா
அருள்தர ஓடிவா
மாற்றமொன்று வேண்டுமையா
மயிலேறி வாருமையா
(ஆற்றங்கரை வேலவா..)
சிவகுரு ஆனவா
செந்தமிழர் காவலா
துள்ளிவரும் வேலெடுத்துத்
துயர்துடைக்க வாருமையா
(ஆற்றங்கரை வேலவா..)
சித்திரவே லாயுதா
சிவனுமை பாலகா
பக்தர்எமைப் பாருமையா
பழவினைகள் தீருமையா
(ஆற்றங்கரை வேலவா..)
உந்தனடி வருகிறோம்
உள்ளந்தூய்மை பெறுகிறோம்
கந்தப்பெரு மானேயுந்தன்
கருணைக்காகத் தவிக்கிறோம்
(ஆற்றங்கரை வேலவா..)
எங்கள்முகம் பாரையா
இன்னுங்குறை ஏதையா
உன்னையன்றி எமக்குலகில்
தெய்வமுண்டோ கூறையா
(ஆற்றங்கரை வேலவா..)
கருத்துகள்
கருத்துரையிடுக