மக்களின் மனம் வெல்லா தமிழ் பிரதிநிதிகளும் கிழக்கு மாகாண சபையும்
கிழக்கு மாகாணசபையின் ஆயுட்காலம் எதிர்வரும் மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அதன் காலம் நீடிக்கப்படலாம் என்ற எண்ணம் நிலவியபோதும் அதற்கான வாய்ப்புகள் அரிதாகவே காணப்படுகின்றன. ஒருவேளை காலம் நீடிக்கப்படுமானால் அது தமிழர்களுக்கு கசப்பான அனுபவமாகவே அமையும் என்பது தமிழ்மக்களுடைய கருத்து.
மாகாணசபையின் ஐந்தாண்டு காலமும் முஸ்லிம் முதலமைச்சர்களாலேயே நிருவகிக்கப் பட்டிருக்கிறது. 2012 செப்டெம்பரில் தேர்தல் நடைபெற்றபோது முஸ்லிம் மக்களுடன் இணைந்தே ஆட்சி அமைப்போம் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேடைதோறும் பரப்புரை செய்து வந்தார். ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானதன் பின்னர் நிலைமை தலைகீழாயிற்று.
அத்தேர்தலில், ஐக்கியமக்கள் சுதந்திர முன்னணி 200,044 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களுடன் 2 போனஸ் ஆசனங்களுமாக 14 ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தது. த.தே.கூட்டமைப்பு 193,827 வாக்குகளைப் பெற்று 11 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் கைப்பற்றின. ஐ.தே.கட்சி 4 ஆசனங்களையும் தேசிய சுதந்திர முன்னணி 1 ஆசனத்தையும் கைப்பற்றிக் கொண்டன.
முஸ்லிம் காங்கிரஸ் நினைத்திருந்தால் சம்பந்தரின் பரப்புரையை இறுகப்பற்றி தமிழர் முஸ்லிம் இணைப்பாட்சியை நிறுவி, ஒற்றுமையை வளர்த்திருக்கலாம். முதலமைச்சுப் பதவியையும் ஏனைய இரண்டு அமைச்சுப் பதவிகளையும் முஸ்லிம்களுக்கு வழங்கச் சம்பந்தர் பகிரங்கமாகவே ஒப்புக் கொண்டிருந்தார்.
ஆனாலும் மகிந்தவின் கோபப்பார்வைக்குப் பயந்த முஸ்லிம்காங்கிரஸ் தலைவர், கொழும்பு அரசில் தாங்கள் வகிக்கும் அமைச்சுப் பதவிகளுக்கு ஆபத்து நேரலாம் எனக் கருதி, மகிந்த கட்சிக்கு முட்டுக்கொடுத்துத் தனது அரசவிசுவாசத்தை உறுதிப்படுத்திக் கொண்டார். சம்பந்தரின் திட்டம் வீணாயிற்று. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் பிரதான எதிர்க்கட்சியாயிற்று.
மகிந்தவும் தனது விருப்பத்தை முன்னெடுக்கக்கூடிய அப்துல்மஜீத் நஜீப் என்பவரை முதலமைச்சர் பதவியில் அமர்த்தினார். நஜீப் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் சுதந்திரக் கட்சி அமைச்சில் பிரதி அமைச்சராகவும் பணியாற்றியவர். எனவே கட்சிவழி வந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் முதலமைச்சராவதில் மகிந்தவுக்கு இரட்டைவெற்றி. முதலமைச்சுப் பதவிக்கு முஸ்லிம் ஒருவரே நியமனம் ஆனதால் வாயடைத்துப்போன முஸ்லிம் காங்கிரஸ் எதிர்ப்பின்றி ஏற்றுக் கொண்டது. மகிந்தவின் கோபத்தைச் சம்பாதிக்காதவாறு கிடைத்த பதவிகளையும் ஏற்று கொண்டது.
கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர். முஸ்லிம் காங்கிரசுக்கு ஆட்சியிற் பங்கு. மத்தியிலும் அமைச்சுப் பதவிகளுக்குப் பாதுகாப்பு. தந்திரமாக உச்ச சுகத்தை அனுபவித்தது முஸ்லிம்காங்கிரஸ்.
முதலாவதும், மூன்றாவதும் இடங்களைப் பெற்றகட்சிகள் கூட்டுச்சேர்ந்து கிழக்கில் ஆட்சியமைத்ததால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்து கொண்டது. எதிர்க்கட்சித் தலைவராகத் தண்டாயுதபாணி பொறுப்பேற்றார். தெரிவு செய்யப்பட்டவர்களுள் நிதானமும் நேர்மையுங் கொண்டிருந்த மூத்த உறுப்பினரான துரைராஜசிங்கத்தை விடுத்து, தேர்தலுக்காகக் கட்சியுடன் இணைந்து கொண்டவரும் பொதுச்சேவை எதிலும் முன்னொருபோதும் பங்குபற்றியிராதவருமான தண்டாயதபாணி சம்பந்தரின் கரிசனையடன் எதிர்க்கட்சித் தலைவராக்கப்பட்டமை தமிழரசுக்கட்சியுடன் நெருக்கமானவர்கள் மத்தியில் அப்போது பேசு பொருளாகவே அமைந்திருந்தது. தண்டாயுதபாணி பற்றிக் கட்டியெழுப்பப் பட்டிருந்த ஒரு போலிப்பிரமை சம்பந்தனை இவ்வாறு செயற்படத் தூண்டியிருக்கலாம் எனக் கொள்ளவும் இடமுண்டு.
எனினும் போராடிப்பழகிப்போன தமிழ்மக்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த தமிழ் உறுப்பினர்களிடம் எதையும் எதிர்பார்க்கவில்லை. விடுதலைக்காகப் போராடும் தமிழரினம் முஸ்லிம் ஆட்சியாளர்களிடம் மண்டியிட்டுச் சலுகைகளைப் பெறவேண்டுமென்பதில் எந்தத் தமிழனும் உடன்பாடு கொண்டிருக்கவில்லை. அவர்கள் எதிர்பார்ப்பெல்லாம் தமிழ்உறுப்பினர்கள் போராட்டத்தை வலுப்படுத்துபவர்களாகவும், தமிழருக்கு அநீதி இழைக்கப்படுமிடங்களில் துணிவுடன் தட்டிக் கேட்பவர்களாகவும் செயல்படவேண்டும் என்பதாகவே இருந்தது.
கொழும்பில் ஆட்சிமாற்றம் நிகழும்வரைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களின் இயலாமை பற்றித் தமிழ்மக்கள் அலட்டிக் கொள்ளவில்லை. மானத்தை விற்று வானத்தைத் தொடுவதற்கும் தமிழர்கள் தயாராக இருக்கவில்லை. அவ்வப்போது முஸ்லிம் அரசியல்வாதிகளின் தந்திர நடவடிக்கைகள் தமிழ்மக்களைப் பாதித்தபோதும் எதிர்க்கட்சி வரிசையிலிருக்கும் தமது உறுப்பினர்களால் சில விடயங்களைச் சாதிக்கமுடியாது என்பதை அவர்கள் ஏற்றிருந்தனர்.
வேலைவாய்ப்பு விடயத்தில் தமிழர்கள் அடாத்தாகப் புறக்கணிக்கப்பட்டபோதும், காணிவிடயங்களில் தில்லுமுல்லுகள் நிகழ்ந்தபோதும் தங்கள் பிரதிநிதிகள்மீது அவர்கள் வருத்தம் தெரிவித்தார்களேயொழியக் காரசாரமான கருத்துரைகள் எவற்றையும் முன்வைக்கவில்லை. இந்த மனப்போக்கு த.தே.கூ. மாகாணசபை உறுப்பினர்களுக்கு சாதகமான அம்சமாகவும் இருந்தது.
ஆனால், ஆட்சிமாற்றம் கொழும்பில் நிகழ்ந்தபோது கிழக்குமாகாணத்தில் முஸ்லிம் காங்கிரசுக்குத் தன் நிறத்தை உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டது. கொழும்பு அரசின் புதிய அமைச்சரவையில் இடம் பிடிப்பதற்காகக் கிழக்கில் நஜீப் கவிழ்க்கப்பட்டார். புதிய உறவு முஸ்லிம் காங்கிரசுக்குத் தேவைப்பட்டது.
இந்த இடத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்கள் புத்திசாதுரியமாக நடந்து கொள்ளவில்லை. தேர்தல் காலத்தில் சம்பந்தர் செய்த முஸ்லிம், தமிழர் உறவுப் பரப்புரையை வேதவாக்காகக் கொள்வதுபோல் நடித்துக் குள்ளத்தனமான செயலில் இறங்கியிருந்தார்கள்.
இடைக்காலத்தில் தமிழர்களுக்கு நடந்தவற்றை வசதியாக மறந்தார்கள். சம்பந்தர் அறியாமலேயே காய் நகர்த்தி ஹக்கீமின் இருப்பிடம் தேடிச்சென்று அவர் காலடியில் வீழ்ந்தார்கள். நீங்கள் விரும்பித்தருவதை நாங்கள் ஏற்றுக் கொண்டு முஸ்லிம்காங்கிரஸ் ஆள்வதற்குத் துணை நிற்கிறோம் என்றார்கள்.
தமிழ் உறுப்பினர்களின் நிலைப்பாடு பற்றிய விளக்கத்துக்கான சந்திப்பு ஒன்று திருக்கோணமலை சில்வர் ஸ்டார் விடுதியில் அப்போது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கட்சி முக்கியஸ்தர்களும் ஆதரவாளர்களும் அச்சந்திப்பிற் கலந்து கொண்டனர். இளைஞர்கள் சரமாரியாகக் கேள்விகள் எழுப்பினர். மாகாணபைத் தேர்தல் முடிவடைந்ததும் முஸ்லிம்காங்கிரஸ் நடந்துகொண்ட விதம்பற்றிச் சுட்டிக்காட்டி அவர்களுடன் உறவு வைத்துக்கொள்வது சரிதானா எனவும் கேட்டனர். கொழும்பு அமைச்சுப் பதவிகளுக்காகத் தமிழர்களை அவர்கள் உதறிச்சென்ற விதம்பற்றி எடுத்துரைத்தனர்.
சம்பந்தர் தெளிவாகவே பதிலைச் சொன்னார். இது முழுக்கமுழுக்க மாகாணசபை உறுப்பினர்களின் எடுத்த முடிவு. அவர்கள் முடிவெடுத்துவிட்டார்கள். செயல்பட வேண்டியவர்களும் அவர்களே என்ற தொனியில் அவர் பதில் அமைந்திருந்தது.
மாகாணசபை உறுப்பினர்களின் முடிவை நிராகரித்து அவர்களை நெறிப்படுத்தச் சம்பந்தர் முயன்றிருந்தால் பதவியாசை கொண்ட உறுப்பினர்களுட் சிலர் கட்சியை உடைத்துக்கொண்டு வெளியேற முயன்றிருப்பர். தமிழர் முஸ்லிம்களின் ஒற்றுமையைச் சம்பந்தர் உளமார விரும்பவில்லை என்ற பரப்புரையும் தமிழ் உறுப்பினர்களாலேயே முன்னெடுக்கப்பட்டு முஸ்லிம், சிங்களக்கட்சிகளின் வாய்க்கு அவல் தூவப்பட்டிருக்கும்.
இளைஞர்களின் எந்தக் கேள்விக்கும் துரைராஜசிங்கமோ, தண்டாயுதபாணியோ பதில் கொடுக்கவில்லை. மாறாக, இருவருமே, தமிழர்கள் கிழக்கு மாகாணசபையால் படுமோசமாகப் பாதிப்புக்குள்ளாக்கப் பட்டிருக்கிறார்கள். அவற்றை நிவர்த்தி செய்யவேண்டும்: இனிமேலும் தமிழர்கள் தாயகமண்ணில் அநாதைகள் போல் நடத்தப்படுவதற்கு இடம் கொடுக்க முடியாது. எனவே இரண்டு மந்திரிப் பதவிகள் கிடைக்கவிருக்கின்றன: அவற்றை நாங்கள் பெற்றுத் தமிழர்களிடையே பாலாறும் தேனாறும் பாயவைப்போம் என்ற கருத்துப்படப் பேசினார்கள். அவர்கள் கூற்றை யாரும் சட்டை செய்யவில்லை.
மாகாணசபையின் இறுதிக் கட்டம்வரைக்கும் பாலாறோ, தேனாறோ தமிழர்கள்மத்தியில் எங்கேனும் பாய்ந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை அமைச்சர்களின் வீடுகளிலும் அவர்களை அண்டிப்பிழைப்போர் வீடுகளிலும் பாய்ந்திருக்கலாம். ஒருசிலர் பிழைத்துக் கொள்வதற்காகக் கிழக்கு மாகாணத் தமிழர்களின் தலைவிதியை முஸ்லிம் தலைவர்களிடம் ஒப்படைத்து விட்டார்களே என்ற கவலைதான் தமிழர்களுக்கு எஞ்சியிருக்கிறது.
ஒருபுறம் இருஅமைச்சர்களும், ஓரிருவர்தவிர்ந்த ஏனைய உறுப்பினர்களும் பதவிச்சுகத்தில் மயங்கிக்கிடக்க, மறுபுறம் தமிழர்களின் வேலைவாய்ப்புகள் படுமோசமாக நிராகரிக்கப்பட்டு முஸ்லிம்களால் நிரப்பப்பட்டன. காணிகள் பறிக்கப்பட்டன. கிழக்குமாகாணத்தை முஸ்லிம் மாகாணமாக மாற்றுவதற்கான செயற்பாடுகள் பகிரங்கமாகவே முன்னெடுக்கப்பட்டன.
தமிழ்அமைச்சர்களில் ஒருவர் மேடைகளில் தத்துவம் பேசினார். மற்றையவர் தரவுகளை அடுக்கிப் பாடம் நடத்திக்கொண்டிருந்தார். தமிழர்களோ கோவணத்தையும் இழக்கின்ற நிலைக்கு இறங்கிக் கொண்டிருந்தார்கள். இவர்களின் கையாலாகாத தன்மையால் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களை விடத் திருக்கோணமலை மாவட்டமே மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. மாகாணசபையில் திருக்கோணமலைத் தமிழர்களின் குரல் இல்லையென்றாகி விட்டது.
இதற்குக் காரணம் இங்கிருந்து தெரிவானவர்கள் எவருக்குமே கொள்கைப் பிடிப்பு இல்லாது இருந்தமைதுதான். கூத்துக்கு வேஷம் கட்டினாற்போலத் தேர்தலுக்காக வேஷங் கட்டியவர்கள் இவர்கள். ஒருவர் வேறொரு கட்சியூடாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்குள் நுழைவதற்கு ஆயத்தம் செய்து கொண்டிருந்தவர். இன்னொருவர் மாணவர்பெயரைச் சொல்லித் தந்திரமாகச் செயல்பட்டவர். மூன்றாமவர் கதியற்றுக்கிடந்த மக்களின் தொண்டன் என விளம்பரப்படுத்திக் கொண்டு வேட்பாளரானவர்.
இவர்கள் சரியாகச் செயல்பட்டிருந்தால், மக்கள் தலையில் வைத்துக் கொண்டாடியிருப்பர். துரதிஷ்டவசமாக நேர்மையாகச் செயல்பட அவர்களது இயற்கைச்சுபாவம் இடங்கொடுக்கவில்லை. மக்கள் மத்தியில் இவர்களைப்பற்றிய வசைபாடல்களே இன்று எஞ்சிநிற்கின்றன. இவர்கள் தமிழ்மக்களுக்குச் சேவை செய்யவுமில்லை: தமிழரசுக் கட்சியின் கொள்கைகளை அங்குலமேனும் முன்னகர்த்தவுமில்லை.
மாறாக, முஸ்லிம்காங்கரசுடன் சேர்ந்து கூத்தடித்து அவர்கள் போட்ட பிச்சையில் தங்கள் வசதிகளைப் பெருக்கிக்கொண்டு திருக்கோணமலைத் தமிழ்மக்களையும், அமைச்சர்கள் என்றவகையில் கிழக்குமாகாணத் தமிழர்களையும் நட்டாற்றில் விட்டிருக்கிறார்கள். நசீர் அகமட்டை முன்னிலைப்படுத்திக் காலத்தைக் கடத்தியிருக்கிறார்கள்.
இவ்வளவு நடந்தபிறகும் திரும்பவும் தேர்தலில் போட்டியிடலாமென அவர்கள் நினைப்பதுதான மிகப்பெரிய துணிச்சலான வேடிக்கை. சம்பந்தர் சரியான நடவடிக்கையை எடுக்கத்தவறினால் தமிழரசுக்கட்சி திருக்கோணமலையில் மிகப்பெரிய பின்னடைவைச் சந்திக்கும் என்பது தெளிவான உண்மை. அது மாத்திரமல்ல, முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டுச்சேர்ந்து எதிர்வரும்நாட்களில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு மாகாணஅரசை நிறுவலாமென்ற எண்ணத்தைத் தமிழ்த்தலைவர்கள் முழுமையாகக் கைவிட வேண்டுமென்பதே தமிழ்மக்களின் அவா. ஏனெனில். தமிழர்களைப் பொறுத்தமட்டில் முஸ்லிம்கட்சிகளைக் காட்டிலும் சிங்களக்கட்சிகள் தீங்கு குறைந்தவை என்பது கிழக்குமாகாணசபை தமிழர்களுக்குக் கற்றுத்தந்த பாடம்.
கருத்துகள்
கருத்துரையிடுக