இந்து சமயம் - விளக்கம் 05

கடவுளரும் குடும்பம் நடத்துவதுபோல எங்கள் சமயத்தில் சித்திரிக்கப்படுகிறதே : இதன் காரணம் என்ன?

அறிந்தவற்றைக் கொண்டுதான் அறியாத ஒன்றை விளக்கமுடியும். ஏவுகணை அல்லது விண்ணோடம் எவ்வாறு வேலை செய்கின்றது என்று பத்துவயதுச் சிறுவன் கேட்கக்கூடும்.  “தேவையற்ற கேள்விகளைக் கேட்கக்கூடாது.” என்று அவனுக்குத் தடைபோட்டால் அது பாவம். விஞ்ஞான முறைப்படிதான் விளக்கப்போகிறேன், என்று புறப்பட்டால் அது பையனைப் பைத்தியக்காரனாக்கும் காரியமாகிவிடும். எனவே வாணவெடியை உதாரணங்காட்டி, அது தீச்சுவாலையின் பின்புற உந்துதலினால் முன்னோக்கி எழுகின்ற தன்மையை ஒப்பிட்டு, ஏவுகணை அல்லது விண்ணோடம் இயங்கும் முறையை விளக்குவதே சிறுவனின் கேள்விக்குச் சரியான விடையாகிறது. அப்போதுதான் சிறுவனால் அது எப்படி இயங்குகின்றது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

அதுபோல, சாதாரண மக்களும் இறைவனைப் புரிந்துகொள்ள வேண்டும்: அவர். தேவையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நம் முன்னோர்கள் கடவுளின் தன்மையைக் குடும்பங்கள் மூலம் உருவகித்து இருக்கிறார்கள்.

இதன்மூலம் கடவுள் எமக்கு நல்ல தந்தையாக, அன்புத் தாயாக, கூடிவிளையாடும் சகோதரனாக எம்மோடு உறவாடுகிறார் என்பது போதிக்கப்படுகிறது. கடவுளுக்கு உயிர்கள் அடிமைகளல்ல: தந்தையுடன் முரண்படுவதுபோல், தாயுடன் சண்டை செய்வதுபோல், சகோதரனுடன் கோபித்துக் கொள்வதுபோல் அவை அவருடன் நடந்து கொள்ளமுடியும்: ஆயினும் அவரின் அன்பை இழந்துவிட முடியாது என்பது தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது.

எல்லாவற்றுக்கும் மேலாக. ஒரு தந்தையின் கடமை என்ன, ஒரு தாய் எவ்வாறு நடந்து கொள்கிறாள், சகோதரர்கள் எப்படி ஒருவருக்கொருவர் துணையாக இருக்கின்றார்கள், பிள்ளைகள் பெற்றோரை மதிக்கும் பாங்கு என்ன, மாமன், மருமகன், மைத்துணன், அண்ணன், தங்கை எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பவற்றுக்கு உன்னத விளக்கமாகவும் கடவுளர் குடும்பம் சித்திரிக்கப்படுகிறது.

எனவே, சாதாரணமக்கள் கடவுளை இலகுவாக உணர்ந்து கொள்ளவும், கடவுள் தமக்கு அந்நியமானவரல்லர் என்பதைப் புரிந்து கொள்ளவும், குடும்பஉறவு, உறவுமுறை, மற்றும் சமூகக்கடமைகள் எவ்வாறு என்று தேர்ந்து அதன்படி ஒழுகவுமே எங்கள் மதத்தில் கடவுளும் குடும்பப் பாங்கானவராகச் சித்திரிக்கப்படுகிறார்.


சிவன், சக்தி என்பவற்றின் தாற்பரியம் என்ன?

மேல்வாரியாகப் பார்த்தால், சிவனும் உமையும் எனக் கொள்ளலாம். இந்து சமயத்தின் பிரிவினரான சைவ சமயத்தவர்கள் சிவனையே முழுமுதற் கடவுளாக வழிபடுகிறார்கள். சிவனின் மனைவியாகச் சக்தி உருவகிக்கப்பட்டிருக்கிறாள். சிவன் நடராஜாவாகவும், வைத்தீஸ்வரராகவும், விஸ்வநாதராகவும். கோணேஸ்வரராகவும் சைவமக்களால் கொண்டாடப்படுகிறார். அதேபோல் சக்தி பார்வதியாக, வைத்தீஸ்வரியாக, துர்க்கையாக, உமையாகப் பலவாறு போற்றப்படுகின்றாள்.

பண்டைய இலக்கியங்களில் வருணிக்கப்பட்ட ‘சேயோன்’ என்ற கடவுளும் சிவனையே குறிக்கிறது என அறிஞர் கூறுவர். சேயோன் என்பது செய் என்ற சொல்லிலிருந்து தோன்றியதென்றும் அவர்கள் கூறுவர். செய் என்பது பண்பட்ட நிலத்தைக் குறிக்கும் ஒரு சொல் எனலாம். நன்செய் (நஞ்சை) புன்செய் (புஞ்சை) என்று விளைநிலங்கள் இன்றும் அழைக்கப்படுவது கண்கூடு.

நிலத்தைப் பண்படுத்துவதற்கு மனிதனுக்குத் துணையாக இருந்தது காளைமாடு. இங்கே சிவபெருமான் காளையை உடையவராக இருப்பது நோக்கத்தக்கது. பயிர்ச்செய்கையும், மாடுகள் உடைமையும் பண்டைய நாட்களில் செவ்வனே வாழ வழி வகுத்ததை நோக்கின் சிவதோற்றம் நல்வாழ்க்கையின் சின்னமாக அமைவதைக் காணலாம்.

சிவபெருமான் செந்நிறத்தினர். உலகை வழிநடத்தும் சூரியனைத் தனக்குள் கொண்டவராக அமைந்துள்ளார். சிவனின் உமையானவள் பச்சை நிறத்தினள் என்ற வர்ணிக்கப்படுகிறார். இது பூமிக்கு ஒப்பானது. இதனால்தான் உமைக்குப்; பூமாதேவி என்றும் பெயர் கூறப்படுகிறது. சூரியனதும் உலகத்தினதும் தொடர்புகளில்தான் உயிர்கள் தோன்றுகின்றன என்பதன் விளக்கமாகவே சிவன் சூரியத்தன்மையும் சக்தி பூமித்தன்மையும் கொண்டு தோன்றுகிறார்கள். 

இன்னொரு வகையில் நோக்கின், சிவனும் சக்தியும் இன்றேல் பிரபஞ்சமுமில்லை நாமுமில்லை. நாம் காணும், உணரும் பொருட்கள் அத்தனையும் சிவசக்தி மயமே. உலகின் மிகச்சிறு துகளான அணு சிவமெனின், அதைச் சுற்றி ஓடிக்கொண்டிருக்கும் நியூத்திரன், எலக்ட்ரோன் என்பவை சக்தியின் வெளிப்பாடு.  கல் சிவமெனில் கல் துணிக்கைகளாகிக் கரைந்துவிடாதபடி பிடித்து வைத்திருக்கும் தன்மை சக்தியாகிறது. உடல் சிவமெனில், அதனுள் நின்றோடும் குருதிச்சுற்றை இயக்கி உடலை நடமாட, சிந்திக்க, செயலாற்ற வைப்பது சக்தியாகும்.

ஒரு நல்ல குடும்பத்தின் தலைவன் சிவமாகிறான். தலைவி சக்தியாகிறாள். சக்தி இல்லையேல் சிவமான தலைவனின் இயக்கம் தளர்ந்து போய்விடும். சிவம் இல்லையேல் சக்தியின் வெளிப்பாடு பற்றுக்கோடு இல்லாமற் புதைந்து போய்விடும். சமூகவாழ்வின் மிகச்சிறிய கூறான குடும்பம் செவ்வனே அமைந்தால் சமூகமே செம்மை பெறும். சிவனும் சக்தியும் ஒரு நல்ல குடும்பத்தின் வெளிப்பாடு. உலக இயக்கத்தின் உருவகம்.

                                                                                                                                         தொடரும்…

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5