இந்துசமயம் விளக்கம் 04

கேள்வி பதில்......

அவ்வாறாயின் நாம் விரும்பும் வடிவத்தில் கடவுளை வழிபடலாமா? இதை அனுமதித்தால் வழிபாட்டுக்குப் பயன்படும் கடவுளர் உருவங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகாதா?

கடவுள் வழிபாடு என்பது மன அமைதியுடனும் ஒருமைப்பாட்டுடனும் நிகழ வேண்டுமென்பதால் அவரவர் விரும்பிய வடிவங்களில் வணங்குதற்கு இந்து தர்மம் அனுமதியளிக்கின்றது. ஆனால் இந்த அனுமதியை எல்லைமீறிப் பயன்படுத்தலாகாது.

ஒருவர் தாயின்மேல் நிறைந்த அன்பு கொண்டவராக இருக்கலாம். இதன் பிரதிபலிப்பால் தாயின் வடிவில் இறைவனைக் கண்டு வணங்குவதிற் தவறேதும் இல்லை.

இன்னொருவர், தந்தையை, குருவை, மகான்ஒருவரை இறைவடிவில் கண்டு வணங்கலாம். அதிற் பிழையேதுமில்லை. ஆனால் அத்தகைய ஒருவர் தன் தாயை, தந்தையை, குருவை, தான்போற்றும் மகானைத் தான் வணங்குவதுபோல் பிறரும் வணங்க வேண்டுமென எதிர்பார்க்கலாகாது. அது சரியுமல்ல. அத்துடன், வாழும் அல்லது வாழ்ந்த ஒருவரின் வடிவத்தூடாகக் கடவுளைக் காணமுயலும் ஒருவர், அந்த வடிவம்பற்றிய உயர்ந்த எண்ணத்துக்கு இடையூறு ஏற்படாது பார்த்துக் கொள்ள வேண்டியதும் முக்கியமானதாகும்.

இதேபோல் ஊருக்கு நன்மைசெய்து தம்மை வருத்திக் கொண்டவர்களைக்கூடத் தெய்வத்தின் உருவமாகக் கொண்டாடும் வழக்கம் இருக்கிறது. இத்தகைய வடிவங்களைக் குறிப்பிட்ட கிராமமோ அல்லது ஊரோ திரண்டு வழிபடுகிறது. ஆயினும், இவ்வடிவங்கள்கூட, பிற ஊர்மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டுமென்றோ அல்லது வழிபாடியற்றப்பட வேண்டும் என்றோ எதிர்பார்த்தலாகாது.

உதாரணமாக, மதுரைவீரன் வணக்கம் மதுரைசார்ந்த இடங்களில் மட்டுமே அதிகமாகக் காணப்படுகின்றமை நோக்கத்தக்கது. கண்ணகை அம்மன், திரௌபதியம்மன் வழிபாடுகளும் இத்தகையவே.

ஆனால், எல்லோரும் வழிபடத்தக்க கடவுளர் உருவங்கள் தத்துவார்த்த விடயங்களை அடக்கி விதிமுறைகளை அனுஷ்டித்தே வடிவமைக்கப்படுகின்றன. இவை ஞானியரால் அருளப்பட்டவை. 

சாதாரண மக்களுக்கு உருவங்களாகக் காட்சியளிக்கும் இவை, இந்து தத்துவங்களை ஓரளவுக்கேனும் விளங்கிக் கொண்டவர்களுக்கு வியப்பையும் ஆனந்தத்தையும் தரவல்லனவாக இருக்கின்றன. 

நாம் வணங்கும் சிவன், பார்வதி, சிவலிங்கம், விஷ்ணு, லட்சுமி, துர்க்கை, கணபதி போன்றவை இத்தகைய வடிவங்களே. தத்துவார்த்த ரீதியிலல்லாமல் இத்திருவுருவங்களின் வடிவங்களில் மாற்றம் செய்ய எவருக்கும் அனுமதி இல்லை.


ஞானியரால் வடிவமைக்கப்பட்ட உருவங்களில் அப்படி என்ன சிறப்புகள் இருக்கின்றன?

ஞானியர்கள் சாதாரண மனிதர்கள் அல்லர். அவர்கள் எம்மைவிடப் பன்மடங்கு மேம்பட்டவர்கள். ஆன்மிக நிலையில் உயர்ந்து இறையருளின் சிறப்பை நெருக்கமாகவும், நேரடி அனுபவத்தாலும் உணர்ந்து அதன் பெருமையை உலகுக்கு எடுத்துச் சொன்னவர்கள். அத்தகையவர்கள் தாம் உணர்ந்த பேரின்பத்தின் ஒரு பகுதியையேனும் சாதாரண மக்களும் பெறவேண்டும் என்ற நோக்கிலேயே கடவுளர் தோற்றங்களை வழங்கிச் சென்றிருக்கிறார்கள்.

கடவுளர் தோற்றங்கள் எழுந்தமானத்தில் வகுக்கப்பட்டவையல்ல. ஆழ்ந்த தத்துவத்துடனும் ஆகம நெறிப்படியுமே அவை அமைக்கப்பட்டிருக்கின்றன.
உதாரணமாக, முருகக்கடவுளின் வடிவத்தை எடுத்துக் கொள்வோம். மேல்வாரியாகப் பார்க்கும் ஒருவர் முருகனை ‘இரண்டு பெண்டாட்டிக்காரன்’ என்றே நினைப்பார். இத்திருவுருவம் பற்றிய புராணக் கதைகளும் சுவாரசியமாக அமைந்திருப்பது இவ்வெண்ணத்தை மேலும் வலுப்படுத்த உதவுகிறது.

சாதாரண மக்கள் முருகப் பெருமான்மேல் ஈடுபாடு கொள்ள அவரது தோற்றமும், அவர் பற்றிய இனிய கதைகளும் பெரிதும் காரணமாக இருக்கின்றன.

ஆனால், அறிவார்ந்த கோணத்தில் உற்று நோக்குவோமானால், முருகப் பெருமானின் தோற்றமும் அவர் பற்றிய வரலாறுகளும் பெரும் தத்துவத்தை எடுத்துக்கூறி, நினைக்குந்தோறும் பரவசத்தில் ஆழ்த்த வல்லனவாக இருப்பதை உணரலாம்.

ஒரு மனிதன் நிறைவான வாழ்க்கையில் இருப்பின் அவனிடம் மூன்று அம்சங்கள் காணப்படுகின்றன. அவன் அறிவார்ந்தவனாக இருக்க வேண்டும் என்பது முதலாவது அம்சம். இரண்டாவதாக அவன் சமூகக் கடமைகளை ஆற்றுபவனாக இருக்க வேண்டும். இத்தகைய ஒருவனே தனக்கும் பிறருக்கும் பயன்படும் மனிதனாக இருக்கிறான். அத்துடன் மனநிறைவுடன் வாழ்பவனாகவும் இருக்க வேண்டும்.

இப்போது திருமுருகனை நோக்குவோம். முருகன் அழகன். அழகாக இருக்க ஆசைப்படாத மனிதன் எவனுமிலன். அழகு மட்டும் போதாது: அறிவும் வேண்டும். பிள்ளைகளுக்கு முதல் அறிவை ஊட்டுபவள் தாய். இங்கே முருகனின் தாயான உமாதேவியார் முருகனுக்கு ஊட்டிய அறிவின் அடையாளம்தான் கைவேல். இதனை ஞானசக்தி என்ற அழைப்பர். ஞானம் என்பது அறிவு. ஆகவே முருகனுக்கு உமாதேவியாரால் வழங்கப்பட்ட வேல் அறிவுச் சக்தியாகிறது. 

முருகனின் வேலை இன்றைய பாஷையில் சொல்வதானால் சான்றிதழ் என்று கூறலாம். சான்றிதழ்கள் கல்வியாவதில்லை. ஆனால், கல்வியின் பெறுமதிமிக்க அடையாளம் சான்றிதழே என்றால் மறுப்பதற்குமில்லை. இவ்வாறே முருகனுக்கு அறிவூட்டிய தாயாரால் வழங்கப்பட்ட சான்றிதழ்தான் அவரது கைவேல் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

அறிவை இளவயதிலேயே பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதால்தான் முருகன் இளமையிலேயே ஞானசக்தியின் அடையாளத்தைப் பெற்றுக் கொண்டார். அறிவுச் சக்தி எவ்வாறு இருக்க வேண்டும்?  வேலின் தோற்றமே கூறுகிறது. எதையும் ஊடறுத்து நுழையும் வல்லமை உடையதாக இருக்க வேண்டும்: வேலின் கூர்மை அதற்குச் சாட்சி. அகன்ற பரப்பைத் தழுவியதாக இருக்க வேண்டும்: வேலின் அகலப்பகுதி சான்று. ஆழமானதாகி நிலைபெற வேண்டும்: வேலின் கீழ்ப்பகுதி அந்த அமைப்பை இயம்புகிறது.

ஆழமாக, அகலமாக, எதையும் ஊடுருவுகின்ற அறிவைப் பெற்றுக்கொண்ட ஒருவருக்குச் சமூகத்துக்கு ஆற்றவேண்டிய பணிகளும் இருக்கின்றன. இதனைக் கிரியை என்றுங் கூறுவர். சமூகப்பணி என்பதில். ஆற்றுகிறவரைக் காட்டிலும் எவருக்காக ஆற்றப்படுகிறதோ அவர்களின் நன்மைதான் முக்கியத்துவம் பெறுகிறது.

இங்கே முருகன், தேவர்கள் என்றழைக்கப்படும் நல்லவர்கள் அடைந்துவரும் துன்பத்தைப் போக்கவேண்டி, அசுரர்கள் எனப்படும் கொடியோரின் கொட்டத்தை அடக்குகின்றார். இந்தக் கிரியையின் பயனாகவே கிரியா சக்தி எனப்படும் தெய்வயானையை மணம் முடிக்கிறார். தெய்வயானை திருமணம் என்பது சமூகத்தின் நன்மைகருதி ஆற்றப்படும் கடமையின் வெளிப்பாடே.

அடுத்து முருகன் வள்ளியையும் தனது சக்திகளில் ஒன்றாகக் கொள்கின்றார். முதற்சக்தி தாயாரால் ஊட்டப்பட்டது. இரண்டாவது சக்தி சமூகத்தால் ஏற்றப்பட்டது. மூன்றாவது சக்தியான இச்சாசக்தி முருகனாலேயே ஏற்படுத்தப்படுகிறது. அதாவது, விருப்பச் சக்தியாக வள்ளியம்மை வருகிறாள். புராணக் கதைகளின்படி முருகன் வள்ளியைத் தேடிவந்து காதலித்து மணம் புரிகிறார்.

இவற்றைத் தேர்ந்துகொண்டு நோக்கும் ஒருவருக்கு முருகனின் திருவுருவம் இரண்டு பெண்டாட்டிக்காரராகத் தெரிவதில்லை. மாறாக, அறிவு (ஞானசக்தி), கடமை (கிரியாசக்தி), மனநிறைவு (இச்சாசக்தி) ஆகியன கொண்ட முழுமையான வாழ்வின் அடையாளம் தெரியும். முழுமையான வாழ்வை விரும்பாதார் யார்? முருக வழிபாட்டின் தத்துவமே முழுமைபெற்ற வாழ்வுதான்.


முருகன் வள்ளியை மணம் புரிவதற்காகப் பல உத்திகளைக் கையாண்டிருப்பதாகப் புராண வரலாறுகள் கூறுகின்றன. இது சாதாரண மனிதன் ஒருவனின் செய்கை போலல்லவா இருக்கிறது? கடவுளின் தோற்றமான முருகனுக்கு இது தகுமா?

கடவுள்  எல்லாம் வல்லவர். ஆயினும் மனித  குலத்தின் ஒழுக்க வாழ்வு கருதி அவ்வப்போது  தானும் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு முன்மாதிரியாகத் திகழ்கிறார். ஆயிரம் தொழிலாளர்களை வைத்து வேலை செய்விக்கும் பண்ணையாராக இருந்தாலும். அவர் வயலில் இறங்கி வேலை செய்ய முன்வரும்போது, தொழிலாளர்களின் வேலைப்பளுவை அவரும் சுமந்து தானாக வேண்டும். பண்ணையார் என்பதற்காகச் சேறு படாமல் இருப்பதில்லை. இந்த அடிப்படையில்தான் வள்ளி முருகன் கதை இடம்பெறுகிறது.


வள்ளி வேடுவர் குலத்தில் வளர்கிறாள். வள்ளி எங்கே வாழ்ந்தாலும் தன்னோடு இணைய வேண்டியவள் என்பது முருகனுக்குத் தெரிந்த ஒன்று. ஆனால் வள்ளி முருகனை அறிவதில்லை. வள்ளிக்குத் தான்யார், தான் பிறந்ததன் நோக்கம் என்ன என்பன போன்ற விபரங்களை முருகனே உணர்த்த வேண்டியவராகின்றார். வள்ளி தன்னை உணர்வதற்கு அவள் உள்ளம் பக்குவப்பட வேண்டும். அதைத்தான் திருமுருகன் செய்கிறார்.



தெய்வயானை பக்குவப்பட்ட ஆன்மா.   தான் யாரென்பதும், தன் பிறப்பின் நோக்கம் என்ன என்பதும் ஓரளவு  உணர்ந்த நிலை தெய்வயானைக்கு. எனவே பக்குவப்பட்ட ஆன்மாவைத் தன்னுடன் இணைத்துக் கொள்வது பரம்பொருளுக்கு இலகுவாக இருக்கிறது. சிரமம் இல்லாமலேயே தெய்வயானை திருமணம் நடந்தேறுகிறது.



ஆனால், வள்ளி வேடர்குலத்திலே வளர்கிறாள். ஆன்மா இறைவனை நோக்கி உயராதபோது இறைவன் ஆன்மாவை நோக்கி வந்து உதவுகிறார். எனவே, முருகனும் மனித குலத்தவர் போலவே  வள்ளியுடன் உறவாடுகிறார். வேடுவருடன் பழகுகிறார். அவர்களது சுகதுக்கங்களுக்குத் தானும் ஆட்படுகிறார். வள்ளி என்ற ஆன்மா இறைவனைத் தேடும் பக்குவமடைந்ததும் தன்னை இன்னாரென முருகன் அறிவுறுத்தி வள்ளி என்ற ஆன்மா தன்னுடன் கலக்க வழிசெய்கிறார். இதுவே வள்ளி திருமணத்தின் சாரம்.



இந்தக் கதையில் வரும் வேடிக்கை, சுவாரசியங்கள் எல்லாம்  இறை பற்றிய எண்ணம் சகலதர மக்களிடமும்  ஏற்பட வேண்டும் என்ற நோக்கைக் கொண்டவையே. 



இன்றுங்கூட "நல்லவன் வாழ்வான்", "உண்மை உயர்வு பெறும்."  என்ற ஒருவரித் தத்தவத்தை விளக்குவதற்காகத் தானே சிறுகதைகள், கதைப்புதினங்கள், நாடகங்கள், திரைப்படங்கள் என்பன சுவையான சம்பவங்களுடன் தொடர்பு படுத்தி வெளிவருகின்றன?



இதைப் புரிந்து கொண்டால், வள்ளி திருமணத்தின் சுவை தெரியும்: முருக தத்துவத்தின் பெருமை புரியும்: முன்னோர் கொண்டிருந்த சிந்தனையின் சிறப்புப் புரியும்.



                                                                                                                                       தொடரும்....




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5