கவிதை 02
மக்கள் சேவையாளன்.....
சேவையென்று வருபவர்க்கு நேர்மையிருக்க வேண்டும்
சீர்மைநிறைந்த வாழ்க்கைநெறியில் நடந்திருக்க வேண்டும்
பூவைப்போல மென்மையான மனமிருக்க வேண்டும்
பொங்குகின்ற எரிமலையும் உள்ளிருக்க வேண்டும்.
துணிச்சலுடன் கருத்துச்சொல்லும் பண்பிருக்க வேண்டும்
துட்டரையும் திருத்திச்செல்லும் பக்குவமும் வேண்டும்
தனித்துநின்ற போதும்தலையை நிமிர்த்திநிற்க வேண்டும்
தன்னலத்தை உதறித்தள்ளும் தைரியமும் வேண்டும்.
நீதிநெறி பேணுவோரைப் போற்றிவாழ வேண்டும்
நேர்மையான மாந்தருக்குத் தலைவணங்க வேண்டும்
மோதினால்தான் நீதியெனில் மோதிப்பார்க்க வேண்டும்
மோதும்போதும் தருமநெறி காத்துநிற்க வேண்டும்.
அற்பகுணம் படைத்தவரை அறிந்துவைக்க வேண்டும்
அருகிருக்கும் வேளையவரில் கவனமிருக்க வேண்டும்
எப்பொருளை எவர்சொலினும் உற்றுக்கேட்க வேண்டும்
எதுசரியோ அதன்படியே தான்நடக்க வேண்டும்.
இனியவார்த்தை எப்பொழுதும் நாவிலிருக்க வேண்டும்
எல்லோரையும் தன்னுறவாய் மதித்துப்பழக வேண்டும்
கனிவுப்பார்வை கருணைநெஞ்சம்; துணையிருக்க வேண்டும்
கடவுளென்ற போதும்பிழையை இடித்துரைக்க வேண்டும்.
கருத்துகள்
கருத்துரையிடுக