இலக்கியத்துளி 15.

இலக்கியத்துளி 15.


தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று குறவஞ்சி. இவ்வகை இலக்கியங்கள் எளிமையான தமிழில் படிப்போர்க்குச் சிரமமின்றி வளங்கும்வகையில் அமைந்திருக்கும். இவற்றுள் திருக்குற்றாலக் குறவஞ்சி மிகமிகச் சிறப்புடைத்து என்பர் அறிஞர். இதனைத் திரிகூடராசப்பக் கவிராயர் என்பவர் இயற்றியுள்ளார்.


இதில் ஒரு காட்சி:


தலைவி வசந்தவல்லி என்பாள் குற்றாலநாதர் உலாவருங் காட்சியைக் கண்டு மயல் கொள்கிறாள். குறத்தி ஒருத்தி அவள் நிலையைப் புரிந்துகொண்டு குற்றலநாதருடைய நகர்வளம் பற்றி எடுத்தோதி மகிழ்விக்கிறாள்.


நகர்வளம் பற்றி வருகின்ற பாடல்களுள் இடவமைதி நோக்கி இருபாடல்களின் சுவையை நோக்குவோம்.


நீர்த்துறையில் புல்மேய்ந்து வந்த எருமைக்கூட்டம் களிப்புடன் நீரருந்துகிறது. அவ்வெருமைகள் நீரருந்தும்போது தங்கள் கன்றுகளை நினைத்துக் கொள்வதால் இயல்பாகவே அவற்றின் மடிகளிலிருந்து பால் சுரக்கின்றது. பால் நீரில் கலக்கின்றது. அப்பாலை மகிழ்வுடன் அருந்திய வாளைமீன்கள் உற்சாக மிகுதியால் நீரைவிட்டு உயரே துள்ளிப்பாய்ந்து அருகிலிருந்த மணம்வீசும் பலாமரத்துக் கனியில் மோதுகின்றன.


பலாப்பழம் மரத்தைவிட்டு நீங்கி அருகே நிற்கும் வாழைமரத்தில் வீழ,  வாழை தன்னருகே வளர்ந்திருக்கும் தாழையிற் சரிய,  தாழைமரமோ விருந்தினரை வரவேற்கும் பண்பாளர்போன்று தன்மடலை விரித்து மகரந்தங்களால் சோறிட,  அவற்றை இளவாழையிலைகள் பக்கவமாக ஏந்தி அழகுற நிற்கும் வளம் மிக்கது நின் தலைவன் நாடு என்கிறாள் குறத்தி.



இந்தப் புதுமையான அழகை வெளிப்படுத்தும் பாடலைப் பார்ப்போம்:



“சூழ மேதி இறங்குந் துறையில்
 சொரியும் பாலைப் பருகிய வாளை
கூழை வாசப் பலாவினிற பாய
 கொழும் பலாக்கனி வாழையிற் சாய
வாழை சாய்ந்தொரு தாழையிற் தாக்க
 வருவி ருந்துக் குபசரிப் பார்போல்
தாழை சோறிட வாழை குருத்திடும்
 சந்திர சூடர்தென் ஆரிய நாடே.”



இரண்டாவது பாடற் சுவை:


இந்த நாட்டில் எந்நேரமும் ஓடிக் கொண்டிருப்பது எதுவெனில் அது பூக்களை அள்ளிச் சுமக்கின்ற ஆற்றின் வெள்ளமே. ஒடுங்கி நிற்பது யோகியர்தம் உள்ளமே. வாடிக்கிடக்கின்ற பொருளொன்றைத் தேடுவையேல் அஃது அழகிய ஒளிதரும் பெண்களின் இடையே. சூல்கொண்ட சங்குகள்தாம் தொடர்ந்து முத்துகளை அளிப்பதனலால் உடல் வருந்திக் கிடக்கின்றன.


நிலத்திற் வீசப்படுகின்ற பொருள் யாதெனில் அது விளைபயிருக்கான விதையே. எந்நேரமும் புலம்பிக் கொண்டிருப்பவை கிண்கிணிச் சதங்கைகளே. நல்லறமும் புகழுமே மக்களால் நாடப்படுகின்ற செல்வங்களாம். இது நின் தலைவன் நாட்டுச் சிறப்பு என்கிறாள் அக்குறத்தி.


இனிப் பாடலைப் பார்ப்போம்:


ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்
 ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
வாடக் காண்பது மின்னார் மருங்கு
 வருந்தக் காண்பது சூலுளைச் சங்கு
போடக் காண்பது பூமியில் வித்து
 புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து
தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி
 திருக்குற் றாலர்தென் ஆரிய நாடே.”



எத்துணை அழகாக நாட்டுவளம் சொல்லப்பட்டிருக்கிறது…
குற்றாலக் குறவஞ்சியும் அழகு. அவ்விலக்கியத்தைத் தாங்கிநிற்கின்ற தமிழின் கவிச்சுவையும் அழகன்றோ.



கந்தவனம் கோணேஸ்வரன்.
19.05.2020


 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5