மமதை இழந்த மனிதம். ஆலயம் அனைத்தையும் பூட்டுக என்றே ஆண்டவன் ஆணை யிட்டான் கோலங்கள் மாறிய குவலயத்தை ஆட் கொள்ளவும் திட்ட மிட்டான். பணத்தா லெதுவும் ஆவதில்லை யெனும் பெற்றியை உணர்த்தி வைத்தான் (பெற்றி – உண்மை) அணுவா யுதத்தின் அதிகா ரங்களை அடக்கிப் பணிய வைத்தான். ஏழை செல்வன் அனைவரை யுமின்று ஏதிலி ஆக்கி வைத்தான் சூழச் சொந்தம் வாழ்ந்திடி னும்தனிச் சூக்குமம் புரிய வைத்தான். ஆடை அணிகலன் ஆபர ணமென்ற அனைத்தையும் ஒதுக்கி வைத்தான் மேடைக் கூச்சல் மாண்புடைமை யென்ற மோகத்தைக் கலைய வைத்தான். படைகளை நிறுத்திப் பயப்பட வைக்கும் பெருமையைப் பரிகசி த்தான் தடைகள் இல்லாக் கொரனோக் கிருமியால் தலைகளைக் கவிழ வைத்தான். உலகம் என்பது மனிதருக் கேயென்ற உரிமையை உடைத் தெறிந்தான் நிலையில் கொரனோச் சக்தியின் மூலம் நிலைமையைத் தெளிய வைத்தான். ஆணவம் வேண்டாம் அனைத்துயிர் மீதும் அன்பினைப் பொழிக வென்றான் வீணர்க ளுரையால் விளைந்திடும் இன்னலை விலக்கியே வாழ்க வென்றான். அடிப்படை உணவுடை உறையுள் உடனலம் என்பதைப் புரிய வைத்தான் துடித்திடும் எழையின் முகம்பார்த் திவற்றைச் செய்யென...