இடுகைகள்

டிசம்பர், 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எல்லாமிருக்கு இவ்வாழ்க்கையிலே

எல்லாமிருக்கு இவ்வாழ்க்கையிலே படுக்கப் பாயுண்டு பாசமுள்ள மனைவியுண்டு குடிசை வீடெனினும் குந்தவோர் இடமுண்டு தடுக்கி வீழ்கையிலே தாங்கநல்ல உறவுண்டு துடுக்காய்ப் பேசியெனை மகிழ்விக்கப் பேரனுண்டு. போக்கு வரத்துக்குப் பொருத்தமான வண்டியுண்டு தேக்கு மரம்போலே தேகத்தில் வலுவுண்டு நாக்குப் பிறழாத நச்சென்ற சொல்லுண்டு யார்க்கும் அஞ்சாமல் வாழ்கின்ற திறனுண்டு. கண்ணில் தெளிவுண்டு கருத்திலும் நோக்கமுண்டு வண்ணத்தை முதுமையிலும் வரவழைக்கும் மனமுண்டு எண்ணம் போலெனக்கு எல்லாமே இங்குண்டு எல்லா மிருக்குஇவ் வாழ்க்கையிலே எனக்கென்று.. கந்தவனம் கோணேஸ்வரன். 28.11.2019

இதயமுள்

நிலாமுற்றம்  (தலைப்புக் கவிதை) (சான்றிதழ் பெற்றது) இதயமுள் . எத்தனை பதுங்கல் எத்தனை குமுறல் எத்துணைப் பஞ்சம் எத்துணைப் பதற்றம் எத்துணைக் கண்ணீர் எத்துணைக் கவலை அத்துணை கடந்தும் ஆறுதல் இலையே. சிந்திய செந்நீர் சிதறிய உடலம் வெந்திடும் தாயரின் விம்மல் கதறல் பிந்தையர் வாழ்ந்திடப் பேருயி ரிழப்பு சிந்தையில் வருகையில் துடிக்குது மனமே. வாழ்ந்திட வேண்டி வழிமுறை தேர்ந்தோம் வாழ்ந்திட லின்றி வீழ்ந்திட லானோம் சூழ்ந்திடு துயரம் தொடர்கதை யாமோ வீழ்ந்தவர் மீண்டும் நிமிர்வது மிலையோ நெஞ்சம் துடிக்குது நெருஞ்சி பூக்குது பிஞ்சுகள் முகத்தைப் பார்க்கவும் கூசுது பஞ்சையாய்ப் பாரில் உலவிடும் காலம் அஞ்சி விலகிடும் நாளென் னாளோ? கந்தவனம் கோணேஸ்வரன் 16.12.2019
பாரதி ஓர் அணையா நெருப்பு. (அமுதமழைக் களஞ்சியம்.) (சான்றிதழ் பெற்ற கவிதை) பாரதி என்றொரு பாவலன் பிறந்தனன்  பாரதம் தனைக் காக்க -  அவன் ஆர்வல னாயியன் அருந்தமிழ் மொழியை  அவனியில் உயர்த்தி வைக்க – தமிழ் சீர்பெறும் வகையினில் சிறப்புடன் கவிதைகள்  செய்தனன் புவி வியக்க – விழி நேர்தரு பார்வையில் நெருப்பென நின்றன  நீசர்கள் தமை வதைக்க – எழிற் கூர்மிகு மீசையும் கொள்செந் திலகமும்  கொன்றன மடைமை களை – அவன் பேர்தனைச் சொல்கையில் பேதைமை மறைந்தது  பெருந்தீ எழுந்தது பாராய். கந்தவனம் கோணேஸ்வரன்.