இலக்கியத்துளி 9.
இலக்கியத்துளி 9.
பாண்டி நாட்டில் சத்திமுத்தம் என்றேரர் ஊர். ஆங்கு ஒரு புலவர். வறுமையால் வாடிக்கொண்டிருந்தார். வீட்டில் மனையாள் பசியினால் தளர்ந்து போவதை ஏற்க அவர் மனம் ஒப்பவில்லை. “அரசரிடம் சென்று பாடிப் பரிசு பெற்றுவருவதே வறுமைதீரச் சிறந்தவழி.” என முடிவெடுத்தார்
.
மனையாளிடம் விடைபெற்றுக் கொண்டு தலைநகரம் நோக்கி நடக்கலானார்.
அரசவையில் வீற்றிருந்த பாண்டியனுக்கு ஒரு சந்தேகம் தோன்றிற்று. நாரையின் அலகை எப்பொருளுடன் ஒப்பீடு செய்யலாம் என்பதே அது. அரசவைப் புலவர்களாற் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை. எவர் பொருத்தமான உவமையைச் சொன்னாலும் அவருக்குப் பரிசு தரப்படும் என்று நகரெங்கும் அறிவித்தும் விடுகிறான்.
பலநாள் நடந்த களைப்பால் சோர்ந்துபோன சத்திமுத்தப் புலவர் தலைநகரை நெருங்கிய நிலையில் இரவாகிவிட்டதால், வாடிய உடலுடன் நகரவீதித் திண்ணையொன்றில் படுக்க முயன்றார். குளிர்காற்றும் பசிக்களைப்பும் அவரை உறங்க விடவில்லை. தன் மனையாள் தன்னைக் கணந்தோறும் எதிர்பார்த்துக் காத்திருப்பாளே என்ற கவலைவேறு அவரது நெஞ்சைக் குடைந்து கொண்டிருந்தது. அந்த இரவிலும் குந்தியபடியே வானத்தை அண்ணாந்து பார்த்தார். ஒருநாரை பறந்து கொண்டிருப்பது அவரது கண்ணிற் பட்டது.
தன் கவலையை நாரையிடம் சொல்லி மனைவிக்குத் தூது அனுப்பலாமா எனச் சிந்தித்தார். புலவரல்லவா… அழகான கவிதையொன்று பிறந்தது.
அந்தக் கவிதையின் தொடக்கம் “நாராய் நாராய் செங்கால் நாராய், பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்..” எனவமைந்து நாரையிடம் தன் துயர நிலையைச் சொல்வதாக இருக்கவே, இரவில் மாறுவேடமிட்டு நகர்வலம் வந்த பாண்டியனுக்கு மகிழ்ச்சி பெருகியதோடு புலவரின் வறுமையும் புரிந்தது. அரசவைப் புலவர்களிடம் கேட்ட கேள்விக்கு விடை கிடைத்து விட்ட மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்தான்.
“ஆகா..பழம்படு பனையின் கிழங்கு பிளந்தாற் போன்ற பவளக் கூர்வாய் நாராய்..” தனக்குள்ளேயே சொல்லிச் சொல்லிக் களிப்படைந்தான். அருகிற் சென்று புலவரின் கவித்துவத்தைப் பாராட்டி மறுநாட்காலை அரசவைக்கு வந்து இப்பாடலைப் பாடிக்காட்டிப் பரிசு பெற்றுச் செல்க என்றும் அறிவித்தான்.
புலவர் பாடிய பாடல் இதுதான்:
நாராய் நாராய் செங்கா னாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கா னாராய்
நீயுநின் மனைவியும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ரா யின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுட் தங்கி
நனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி
பாடுபார்த் திருக்குமெம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇ
பேழையு ளிருக்கும் பாம்பென வுயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டது மெனுமே.
அப்பாடலின் கருத்து:
நாரையே நாரையே சிவந்த கால்களையுடைய நாரையே,
விழுந்த பனம்பழத்து விதையிலிருந்து முளைத்தெழுந்த கிழங்கு பிளந்தாற் போன்று
பவளநிறத்துக் கூர்மையான வாயைக் கொண்ட நாரையே,
நீயும் நின்பெண்டும் தென்திசைக் குமரிக்கடலிலே மூழ்கியெழுந்து
வடதிசைப் பக்கம் போவீர்களாயின்,
எம்மூரிலுள்ள சத்திமுத்தம் என்கின்ற வாவியில் சற்றே (ஓய்வெடுத்து) தங்கி,
(அங்கிருந்தே பார்க்கக் கூடியதான தூரத்திலமைந்துள்ள)
நனைந்து போன சுவரின் மேலிருக்கும் கூரையிலுள்ள பல்லி சொல்லுவதைப்
பார்த்துக் கொண்டிருக்கும் என் மனைவியைச் சந்தித்து,
எமக்கு இறையாகவும் அரசராகவும் திகழ்கின்ற பாண்டியனுடைய மதுரைமாநகரில்,
(போர்ப்பதற்கென) ஆடையெதுவுமின்றி வாடைக் குளிரினால் நலிந்து
கைகளினால் உடம்பை மூடிக் கொண்டுää
கால்களைக் கொண்டு உடலைத் தழுவிக் (தழீஇ) குளிருக்கு மறைத்து,
பெட்டிக்குள் சுருண்டுகிடந்து மூச்சுவிடும் பாம்பைப்போல் பெருமூச்செறியும்,
ஏழையான என்னைக் கண்டேன் என்று சொல்வாயாக.
புலவரின் கவித்துவத்தால் அரசவை மகிழ்ந்தது: பரிசு கிடைத்ததால் புலவர் மகிழ்ந்தார்: கவிதைச் சுவையால் நாமும் வியந்தோம் எனலாமா?
இலக்கண விளக்கம்:
தழீஇ என்பது தழுவி என்ற சொல் சொல்லிசை அளபெடையாக மாற்றம் பெற்றதன் தோற்றம். கவிதைச் சொற்கள் சிறப்படைய இவ்வளபெடைகள் உதவுகின்றன.
சொல்லிசை அளபெடை என்பது “இ” எனும் எழுத்தில் முடியும். “இ”யை நீக்கிவிட்டால் எஞ்சுவது ஓரசைச் சொல்லாக இருக்கும்..
கந்தவனம் கோணேஸ்வரன்
04.05.2019
பாண்டி நாட்டில் சத்திமுத்தம் என்றேரர் ஊர். ஆங்கு ஒரு புலவர். வறுமையால் வாடிக்கொண்டிருந்தார். வீட்டில் மனையாள் பசியினால் தளர்ந்து போவதை ஏற்க அவர் மனம் ஒப்பவில்லை. “அரசரிடம் சென்று பாடிப் பரிசு பெற்றுவருவதே வறுமைதீரச் சிறந்தவழி.” என முடிவெடுத்தார்
.
மனையாளிடம் விடைபெற்றுக் கொண்டு தலைநகரம் நோக்கி நடக்கலானார்.
அரசவையில் வீற்றிருந்த பாண்டியனுக்கு ஒரு சந்தேகம் தோன்றிற்று. நாரையின் அலகை எப்பொருளுடன் ஒப்பீடு செய்யலாம் என்பதே அது. அரசவைப் புலவர்களாற் சரியான பதிலைச் சொல்ல முடியவில்லை. எவர் பொருத்தமான உவமையைச் சொன்னாலும் அவருக்குப் பரிசு தரப்படும் என்று நகரெங்கும் அறிவித்தும் விடுகிறான்.
பலநாள் நடந்த களைப்பால் சோர்ந்துபோன சத்திமுத்தப் புலவர் தலைநகரை நெருங்கிய நிலையில் இரவாகிவிட்டதால், வாடிய உடலுடன் நகரவீதித் திண்ணையொன்றில் படுக்க முயன்றார். குளிர்காற்றும் பசிக்களைப்பும் அவரை உறங்க விடவில்லை. தன் மனையாள் தன்னைக் கணந்தோறும் எதிர்பார்த்துக் காத்திருப்பாளே என்ற கவலைவேறு அவரது நெஞ்சைக் குடைந்து கொண்டிருந்தது. அந்த இரவிலும் குந்தியபடியே வானத்தை அண்ணாந்து பார்த்தார். ஒருநாரை பறந்து கொண்டிருப்பது அவரது கண்ணிற் பட்டது.
தன் கவலையை நாரையிடம் சொல்லி மனைவிக்குத் தூது அனுப்பலாமா எனச் சிந்தித்தார். புலவரல்லவா… அழகான கவிதையொன்று பிறந்தது.
அந்தக் கவிதையின் தொடக்கம் “நாராய் நாராய் செங்கால் நாராய், பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்..” எனவமைந்து நாரையிடம் தன் துயர நிலையைச் சொல்வதாக இருக்கவே, இரவில் மாறுவேடமிட்டு நகர்வலம் வந்த பாண்டியனுக்கு மகிழ்ச்சி பெருகியதோடு புலவரின் வறுமையும் புரிந்தது. அரசவைப் புலவர்களிடம் கேட்ட கேள்விக்கு விடை கிடைத்து விட்ட மகிழ்ச்சியால் துள்ளிக்குதித்தான்.
“ஆகா..பழம்படு பனையின் கிழங்கு பிளந்தாற் போன்ற பவளக் கூர்வாய் நாராய்..” தனக்குள்ளேயே சொல்லிச் சொல்லிக் களிப்படைந்தான். அருகிற் சென்று புலவரின் கவித்துவத்தைப் பாராட்டி மறுநாட்காலை அரசவைக்கு வந்து இப்பாடலைப் பாடிக்காட்டிப் பரிசு பெற்றுச் செல்க என்றும் அறிவித்தான்.
புலவர் பாடிய பாடல் இதுதான்:
நாராய் நாராய் செங்கா னாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கா னாராய்
நீயுநின் மனைவியும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ரா யின்
எம்மூர்ச் சத்திமுத்த வாவியுட் தங்கி
நனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி
பாடுபார்த் திருக்குமெம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇ
பேழையு ளிருக்கும் பாம்பென வுயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டது மெனுமே.
அப்பாடலின் கருத்து:
நாரையே நாரையே சிவந்த கால்களையுடைய நாரையே,
விழுந்த பனம்பழத்து விதையிலிருந்து முளைத்தெழுந்த கிழங்கு பிளந்தாற் போன்று
பவளநிறத்துக் கூர்மையான வாயைக் கொண்ட நாரையே,
நீயும் நின்பெண்டும் தென்திசைக் குமரிக்கடலிலே மூழ்கியெழுந்து
வடதிசைப் பக்கம் போவீர்களாயின்,
எம்மூரிலுள்ள சத்திமுத்தம் என்கின்ற வாவியில் சற்றே (ஓய்வெடுத்து) தங்கி,
(அங்கிருந்தே பார்க்கக் கூடியதான தூரத்திலமைந்துள்ள)
நனைந்து போன சுவரின் மேலிருக்கும் கூரையிலுள்ள பல்லி சொல்லுவதைப்
பார்த்துக் கொண்டிருக்கும் என் மனைவியைச் சந்தித்து,
எமக்கு இறையாகவும் அரசராகவும் திகழ்கின்ற பாண்டியனுடைய மதுரைமாநகரில்,
(போர்ப்பதற்கென) ஆடையெதுவுமின்றி வாடைக் குளிரினால் நலிந்து
கைகளினால் உடம்பை மூடிக் கொண்டுää
கால்களைக் கொண்டு உடலைத் தழுவிக் (தழீஇ) குளிருக்கு மறைத்து,
பெட்டிக்குள் சுருண்டுகிடந்து மூச்சுவிடும் பாம்பைப்போல் பெருமூச்செறியும்,
ஏழையான என்னைக் கண்டேன் என்று சொல்வாயாக.
புலவரின் கவித்துவத்தால் அரசவை மகிழ்ந்தது: பரிசு கிடைத்ததால் புலவர் மகிழ்ந்தார்: கவிதைச் சுவையால் நாமும் வியந்தோம் எனலாமா?
இலக்கண விளக்கம்:
தழீஇ என்பது தழுவி என்ற சொல் சொல்லிசை அளபெடையாக மாற்றம் பெற்றதன் தோற்றம். கவிதைச் சொற்கள் சிறப்படைய இவ்வளபெடைகள் உதவுகின்றன.
சொல்லிசை அளபெடை என்பது “இ” எனும் எழுத்தில் முடியும். “இ”யை நீக்கிவிட்டால் எஞ்சுவது ஓரசைச் சொல்லாக இருக்கும்..
கந்தவனம் கோணேஸ்வரன்
04.05.2019
கருத்துகள்
கருத்துரையிடுக