இலக்கியத்துளி 6

இலக்கியத்துளி 6


புலமையும் வறுமையும் சேர்ந்தேயிருப்பன என்பர் அனுபவசாலிகள். இராமச்சந்த்ரக் கவிராயர் விடயத்திலும் இந்தக் கூற்று பொருந்தியே நின்றது.


அவர் ஒரு பாக்குவெட்டியை வைத்திருந்தார். புலவரது உடைமைகளில் மிகவும் பயனுள்ளபொருள் அந்தப் பாக்குவெட்டியாகத்தான் இருந்திருக்க வேண்டும். யார் செய்த பாவமோ, ஒருநாள் அந்தப் பாக்குவெட்டி காணாமற் போயிற்று.
புலவர் தவித்துப்போனார். பாக்குவெட்டி இல்லாமல் அவரால் எதுவும் செய்யமுடியாது என்பது அவரின் தவிப்பிற் தெரிந்தது.
அங்குமிங்கும் தேடினார். வுழக்கமாக பாக்குவெட்டி வைக்கும் இடத்தைப் பலதடவைகள் துருவித்துருவிப் பார்த்தார்.


பாக்குவெட்டியைக் காணோம் என்பது உறுதியாயிற்று.
பாக்குவெட்டி தானாகக் காணாமற் போயிருக்க முடியாது. அதனை யாரோ அபகரித்து விட்டார்கள் போலும் என்ற பயம் அவரைப் பற்றிக்கொண்டது.


அக்கம்பக்கத்தாரை அழைத்தார். தன் பாக்குவெட்டி காணாமற்போன சங்கதியைக் கவலையுடன் சொன்னார். எவரிடமிருந்தும் பாக்குவெட்டி பற்றிய செய்தி வரவில்லை. தன் பாக்குவெட்டி எவ்வௌற்றுக்கு எல்லாம் பயன்படுகின்றது என்பதை விளக்கத் தொடங்கினார். அப்போதாவது எடுத்தவர்கள் இரக்கப்பட்டு அதனைத் திருப்பிக் கொடுத்துவிடக் கூடும் என்ற நம்பிக்கை அவருக்கு.


“அந்தப் பாக்குவெட்டியால் சமையலுக்கு வேண்டிய விறகுகளைத் தறித்துக் கொள்வேன்.

வேண்டும்போது காய்கறிகளையும் நறுக்குவேன்.

சோற்றுக்கு அரிசி அல்லது உப்பு இல்லையாயின் அதனை அடகுவைத்துப் அவற்றைப் பெற்றுக் கொள்வேன்.

பாக்குப்பிளவு கிடைக்குமாயின் அதனை நான்கு துண்டுகளாகவோ ஆறு துண்டுகளாகவோ பிளந்துகொள்வேன்.

(உடம்பில் எங்கேனும் அரிப்பெடுத்தால்) பறகு பறகு என ஓசை வருமளவுக்குப் பதமாகச் சொறிந்தும் கொள்வேன்.

இத்தனை வழிகளில் எனக்குப் பயன்பட்ட அந்தப் பாக்குவெட்டி ஒருபோதும் இறகு முளைத்துத் தானாகப் பறந்து சென்றிருக்காது.

யாராவது எடுத்திருந்தால் தயவுசெய்து கொடுத்துவிடுங்கள்.”
என்று கெஞ்சுகிறார்.


அந்தக் கெஞ்சுதல் தமிழுக்கு ஓரழகிய பாடலைத் தந்திருக்கிறது.

 அந்தப் பாடல் இதுதான்:

விறகு தறிக்கக் கறி நறுக்க
வெண்சோற் றுப்புக் கடகு வைக்கப்
பிறகு பிளவு கிடைத்த தென்றால்
நாலா றாகப் பிளந்து கொள்ளப்
பறகு பறகு என்றே சொறியப்
பதமா யிருந்த பாக்கு வெட்டி
இறகு முளைத்துப் போவது ண்டோ?
எடுத்தீ ராயிற் கொடுப் பீரே.


                 கந்தவனம் கோணேஸ்வரன்
                 06.04.2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5