தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 03(புணரியல் )
தமிழ் இலக்கணம் அறிவோம். (3)
புணரியல் 3.
‘அ’கர, ‘இ’கர வீற்று வினையெச்சங்களை யடுத்து வருமொழி வல்லின எழுத்திற் தொடங்குமாயின் அங்கே வல்லினமெய் தோன்றும்.
பாட + சொன்னான். = பாடச்சொன்னான். பாடி + காட்டினான் = பாடிக்காட்டினான்.
நாட + கண்டான் = நாடக்கண்டான் நாடி + செய்தான் = நாடிச்செய்தான்.
மேய + சென்றது = மேயச்சென்றது பாய + பயந்தது = பாயப்பயந்தது.
தேட + கண்டான் = தேடக்கண்டான். தேடி + சென்றான் = தேடிச்சென்றான்.
மோத + பார்த்தான் = மோதப்பார்த்தான் மோதி + பார்த்தான் = மோதிப்பார்த்தான்.
எட்டு பத்து போன்ற எண்ணுப் பெயர்கள் நிலைமொழியாயின் வருமொழியின் வல்லினம் மிகும்.
எட்டு + கால் = எட்டுக்கால் பத்து + பாட்டு = பத்துப்பாட்டு.
எட்டு + குதிரை = எட்டுக்குதிரை பத்து + குடும்பங்கள் = பத்துக்குடும்பங்கள்.
நிலைமொழி ‘ல’கர, ‘ள’கர, ‘ன’கர, ‘ண’கர மெய்யீற்றில் நிறைவுறுமிடத்து வல்லினத்தில் வருமொழி தொடங்குமாயின்,
வேற்றுமைப் புணர்ச்சியில் ‘ல’கர ‘ன’கரங்கள் ‘ற’ கரமாகவும், ‘ள’கர ‘ண’கரங்கள் ‘ட’கரமாகவும் மாற்றம் பெறும்.
சொல் + சிலம்பம் = சொற்சிலம்பம். வில் + போர் = விற்போர். (லகரம் றகரம் ஆயிற்று)
கள் + குடம் = கட்குடம் முள் + புதர் = முட்புதர். (ளகரம் டகரம் ஆயிற்று)
மக்கள் + பண்பு = மக்கட்பண்பு திங்கள் + குடை = திங்கட்குடை
பொன் + காப்பு = பொற்காப்பு மகன் + கு = மகற்கு (னகரம் றகரமாயிற்று)
கண் + செவி = கட்செவி மண் + பானை = மட்பானை (ணகரம் டகரம் ஆயிற்று.)
‘ன’கர மெய்யீற்று நிலைமொழி வல்லெழுத்து வருமொழியுடன் இணையும்போது சில இடங்களில் ‘ன’கர மெய்யீற்றில் மாற்றம் ஏற்படாமல் வருமொழி முதலெழுத்து மாற்றமடையும்.
வன் + தொண்டர் = வன்றொண்டர்
மென் + தொடர் = மென்றொடர்.
மின் + தகடு = மின்றகடு.
அல்வழிப் புணர்ச்சியில் வருமொழி வல்லெழுத்திற் தொடங்கினும் மாற்றம் நிகழ்வதில்லை.
பொன் + பெரிது = பொன்பெரிது
மண் + சிறிது = மண்சிறிது
பொன் + சிதைந்தது = பொன்சிதைந்தது.
சுட்டுப் பெயர்களின் பின்னால் வரும் வருமொழியின் வல்லின எழுத்துகள் மிகா.
அது + சரி = அதுசரி
இது + பறவை = இதுபறவை
அவை + காட்சிகள் = அவைகாட்சிகள் (அவை என்பது சுட்டுப்பெயரைக் குறிக்காமல் மேடை என்ற கருத்தில் வருமாயின் அவைக்காட்சிகள் என்றே புணரும்.)
இவை + சிறந்தவை = இவைசிறந்தவை
எது, எவை போன்ற வினாச் சொற்களையடுத்தும் வருமொழியின் வல்லினம் மிகுவதில்லை.
எது + கவிதை? = எதுகவிதை?
எவை + சிரித்தன? = எவைசிரித்தன.?
ஆ, ஏ, ஓ, ஆகியவற்றில் நிறைவுறும் வினாச் சொற்களையடுத்தும் வல்லினம் மிகுவதில்லை.
அவனா + செய்தான்? = அவனாசெய்தான்?
அவர்களா + சிரித்தார்கள்? = அவர்களாசிரித்தார்கள்?
அவளே + படித்தாள்? = அவளே படித்தாள்?
எங்கே + பறந்தது? = எங்கேபறந்தது?
அவனோ + கடிந்தான்? = அவனோகடிந்தான்?
அவளோ + பேசினாள்? = அவளோபேசினாள்?
அவளோ + பேசினாள்? = அவளோபேசினாள்?
அன்று, இன்று, என்று ஆகிய சொற்களையடுத்தும் வருமொழியின் வல்லினம் மிகாது.
அன்று + கண்டேன் = அன்றுகண்டேன்.
இன்று + பிறந்தது = இன்றுபிறந்நது.
என்று + போனான்? = என்றுபோனான்?
படி, மாறு, ஆறு ஆகிய ஈறுகளைக் கொண்டமையும் வினையெச்சங்களை யடுத்தும், ‘உ’கரத்தில் நிறைவுறும் வினையெச்சங்களை யடுத்தும் வருமொழியின் வல்லினம் மிகுவதில்லை.
கூறும்படி + கேட்டான் = கூறும்படிகேட்டான். (படி)
செய்யுமாறு + பணித்தான் = செய்யுமாறுபணித்தான். (மாறு)
சொன்னவாறு + செய்தான் = சொன்னவாறுசெய்தான். (ஆறு)
வந்து + பிடித்தாள் = வந்துபிடித்தாள்.
நின்று + கொள் = நின்றுகொள்.
அங்கு, இங்கு, எங்கு போன்றவற்றுடன் இணையும் வல்லினத்திற் தொடங்கும் வருமொழியின் வல்லினம் தற்காலத்தில் மிகுவதில்லை.
அங்கு + கண்டேன் = அங்குகண்டேன் இங்கு + பிறந்தது = இங்குபிறந்தது
எங்கு + போயினன்? = எங்குபோயினன்?
(இவை அங்குக்கண்டேன், இங்குப்பிறந்தது, எங்குப்போயினன் என்று வருவதுதான் முறை என்கிறது இலக்கணம். ஆயினும் தற்கால வழக்கில் இந்நடைமுறை கைக்கொள்ளப்படுவதில்லை.)
குற்றெழுத்தையடுத்து யகர மெய்யில் நிறைவுறும் நிலைமொழிகளுடன் வல்லின, மெல்லின உயிர்மெய்யில் தொடங்கும் வருமொழி இணையும்போது வருமொழியின் முதலெழுத்துக்குரிய மெய்யெழுத்துத் தோன்றும்.
பொய் + சாட்சி = பொய்ச்சாட்சி (வல்லினம் தோன்றியது)
மெய் + பதம் = மெய்ப்பதம் (வல்லினம் தோன்றியது)
நெய் + சட்டி = நெய்ச்சட்டி (வல்லினம் தோன்றியது)
செய் + மதி = செய்ம்மதி (மெல்லினம் தோன்றியது)
செய் + நன்றி = செய்ந்நன்றி (மெல்லினம் தோன்றியது)
மெய் + நிலை = மெய்ந்நிலை (மெல்லினம் தோன்றியது)
பொய் + மை = பொய்ம்மை (மெல்லினம் தோன்றியது)
மெய் + மை = மெய்ம்மை (மெல்லினம் தோன்றியது)
இன எழுத்துத் தோன்றுமிடங்கள்.
சில நிலைமொழிகளை யடுத்து வருகின்ற வருமொழியின் முதலெழுத்துக்குரிய மெய் தோன்றுதற்குப் பதிலாக அவ்வெழுத்தின் இனஎழுத்து தோன்றுவதுண்டு.
பூ + பொழில் = பூம்பொழில்
வேய் + குழல் = வேய்ங்குழல்
பூ + தோட்டம் = பூந்தோட்டம்
பாழ் + கிணறு = பாழ்ங்கிணறு
முக்கிய குறிப்பு:
பசு + பால் ஆகிய சொற்கள் இணையும்போது பசுப்பால் எனவரும். இதனைப் பசும்பால் என எழுதுதல் சரியன்று. பசுமை + பால் என்பதே பசும்பால் எனப் புணரும்.
உயிரீற்று நிலைமொழியுடன் உயிரெழுத்திற் தொடங்கும் வருமொழி இணைதல்.
நிலைமொழியின் ஈற்றெழுத்து அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ ஓள ஆகிய ஏழு உயிரோசைகளில் எதனையேனும் கொண்டிருக்குமாயின் வருமொழி உயிரெழுத்திற் தொடங்குமிடத்து ‘வ’ கரம் உடம்படு மெய்யாகத் தோன்றி இருமொழிகளையும் இணைக்கும்.
தகதக + என = தகதகவென. பல + அணி = பலவணி.
விழா + ஆரம்பம் = விழாவாரம்பம். நிலா + அழகு = நிலாவழகு.
குபுகுபு + என்று = குபுகுபுவென்று. திரு + ஓடு = திருவோடு.
பூ + ஆரம் = பூவாரம். கூ + என்றான் = கூவென்றான்.
நொ + அழகு = நொவ்வழகு போ + என்றாள் = போவென்றாள்.
நோ + எல்லாம் = நோவெல்லாம். கௌ + அழகு = கௌவ்வழகு.
நோ + எல்லாம் = நோவெல்லாம். கௌ + அழகு = கௌவ்வழகு.
இ, ஈ, ஐ ஆகிய மூன்று உயிரோசைகளில் எதுவேனும் நிலைமொழியின் ஈற்றோசையாக வருமிடத்து உயிரெழுத்திற் தொடங்கும் வருமொழி இணையும்போது ‘ய’ கரம் உடம்படு மெய்யாகத் தோன்றும்.
பசி + இன்மை = பசியின்மை நடுநிசி +ஆனது = நடுநிசியானது.
தீ + அணைந்தது = தீயணைந்தது. நீ + அல்லன் = நீயல்லன்.
புகை + இலை = புகையிலை கலை + உள்ளம் = கலையுள்ளம்.
கோ + இல் = கோயில் என்றும் கோவில் என்றும் இணைவதை இலக்கணம் ஏற்கிறது.
கோயில் என இணையும்போது ‘ய’ கரம் உடம்படு மெய்யாகவும், கோவில் எனவிணையும்போது ‘வ’ கரம் உடம்படு மெய்யாகவும் தோன்றுகின்றன என்பதையும் கருத்திற் கொள்க.
கருத்துகள்
கருத்துரையிடுக