தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 03 - பகுதி 03(புணரியல் )

தமிழ் இலக்கணம் அறிவோம். (3)
புணரியல்  3.

‘அ’கர, ‘இ’கர வீற்று வினையெச்சங்களை யடுத்து வருமொழி வல்லின எழுத்திற் தொடங்குமாயின் அங்கே வல்லினமெய் தோன்றும்.

பாட + சொன்னான்.  = பாடச்சொன்னான்.               பாடி + காட்டினான்   =  பாடிக்காட்டினான்.

நாட + கண்டான்    = நாடக்கண்டான்                       நாடி + செய்தான்    =  நாடிச்செய்தான்.

மேய + சென்றது    =  மேயச்சென்றது                        பாய +  பயந்தது    =   பாயப்பயந்தது.

தேட + கண்டான்    = தேடக்கண்டான்.                      தேடி + சென்றான்   =  தேடிச்சென்றான்.

மோத + பார்த்தான்   = மோதப்பார்த்தான்              மோதி + பார்த்தான்  =  மோதிப்பார்த்தான்.



எட்டு பத்து போன்ற எண்ணுப் பெயர்கள் நிலைமொழியாயின் வருமொழியின் வல்லினம் மிகும்.

எட்டு +  கால் =  எட்டுக்கால்                                பத்து  + பாட்டு =  பத்துப்பாட்டு.

எட்டு + குதிரை = எட்டுக்குதிரை                  பத்து +  குடும்பங்கள் =  பத்துக்குடும்பங்கள்.



நிலைமொழி ‘ல’கர,  ‘ள’கர,  ‘ன’கர,  ‘ண’கர மெய்யீற்றில் நிறைவுறுமிடத்து வல்லினத்தில் வருமொழி தொடங்குமாயின், 

வேற்றுமைப் புணர்ச்சியில் ‘ல’கர ‘ன’கரங்கள் ‘ற’ கரமாகவும், ‘ள’கர ‘ண’கரங்கள் ‘ட’கரமாகவும் மாற்றம் பெறும்.

சொல் +  சிலம்பம் = சொற்சிலம்பம்.              வில் +  போர்  =  விற்போர்.  (லகரம் றகரம் ஆயிற்று)  

கள் + குடம் = கட்குடம்                                     முள் + புதர்   =  முட்புதர்.    (ளகரம் டகரம் ஆயிற்று)

மக்கள் +  பண்பு =  மக்கட்பண்பு                          திங்கள் + குடை =  திங்கட்குடை

பொன் + காப்பு = பொற்காப்பு                          மகன் + கு   =  மகற்கு     (னகரம் றகரமாயிற்று)

கண்  +  செவி =  கட்செவி                                    மண் +  பானை = மட்பானை   (ணகரம் டகரம் ஆயிற்று.)


‘ன’கர மெய்யீற்று நிலைமொழி வல்லெழுத்து வருமொழியுடன் இணையும்போது சில இடங்களில் ‘ன’கர மெய்யீற்றில் மாற்றம் ஏற்படாமல் வருமொழி முதலெழுத்து மாற்றமடையும்.

வன்   + தொண்டர்  =  வன்றொண்டர்    

மென் + தொடர்       =  மென்றொடர்.  

மின்   + தகடு            =    மின்றகடு.


அல்வழிப் புணர்ச்சியில் வருமொழி வல்லெழுத்திற் தொடங்கினும் மாற்றம் நிகழ்வதில்லை.

பொன் + பெரிது          =  பொன்பெரிது 
   
மண்     + சிறிது             =  மண்சிறிது  

பொன் +  சிதைந்தது =  பொன்சிதைந்தது.


சுட்டுப் பெயர்களின் பின்னால் வரும் வருமொழியின் வல்லின எழுத்துகள் மிகா.

அது +  சரி        =  அதுசரி    
              
இது + பறவை =  இதுபறவை   

அவை + காட்சிகள் = அவைகாட்சிகள் (அவை என்பது சுட்டுப்பெயரைக் குறிக்காமல் மேடை என்ற கருத்தில் வருமாயின் அவைக்காட்சிகள் என்றே புணரும்.)      

இவை + சிறந்தவை =  இவைசிறந்தவை



எது, எவை போன்ற வினாச் சொற்களையடுத்தும் வருமொழியின் வல்லினம் மிகுவதில்லை.

எது + கவிதை?          =  எதுகவிதை?   

எவை + சிரித்தன?  =  எவைசிரித்தன.?



ஆ, ஏ, ஓ,  ஆகியவற்றில் நிறைவுறும் வினாச் சொற்களையடுத்தும் வல்லினம் மிகுவதில்லை.

அவனா       + செய்தான்?       =   அவனாசெய்தான்?   

அவர்களா + சிரித்தார்கள்? =   அவர்களாசிரித்தார்கள்?

அவளே       + படித்தாள்?        =   அவளே படித்தாள்?    

எங்கே        + பறந்தது?            =   எங்கேபறந்தது?

அவனோ + கடிந்தான்?          =   அவனோகடிந்தான்?   

அவளோ + பேசினாள்?          =   அவளோபேசினாள்?



அன்று, இன்று, என்று ஆகிய சொற்களையடுத்தும் வருமொழியின் வல்லினம் மிகாது.

அன்று + கண்டேன்    = அன்றுகண்டேன்.

இன்று + பிறந்தது      =  இன்றுபிறந்நது.   

என்று + போனான்?  =  என்றுபோனான்?



படி, மாறு, ஆறு ஆகிய ஈறுகளைக் கொண்டமையும் வினையெச்சங்களை யடுத்தும், ‘உ’கரத்தில் நிறைவுறும் வினையெச்சங்களை யடுத்தும் வருமொழியின் வல்லினம் மிகுவதில்லை.

கூறும்படி + கேட்டான்           =  கூறும்படிகேட்டான். (படி)

செய்யுமாறு + பணித்தான் =  செய்யுமாறுபணித்தான். (மாறு)

சொன்னவாறு + செய்தான் = சொன்னவாறுசெய்தான்.  (ஆறு)

வந்து + பிடித்தாள்                   =  வந்துபிடித்தாள்.  

நின்று +  கொள்                       =  நின்றுகொள்.





அங்கு, இங்கு, எங்கு போன்றவற்றுடன் இணையும் வல்லினத்திற் தொடங்கும் வருமொழியின் வல்லினம் தற்காலத்தில் மிகுவதில்லை.

அங்கு + கண்டேன்  =  அங்குகண்டேன்   இங்கு + பிறந்தது =  இங்குபிறந்தது

எங்கு + போயினன்?  = எங்குபோயினன்?

(இவை அங்குக்கண்டேன், இங்குப்பிறந்தது, எங்குப்போயினன் என்று வருவதுதான் முறை என்கிறது இலக்கணம். ஆயினும் தற்கால வழக்கில் இந்நடைமுறை கைக்கொள்ளப்படுவதில்லை.)




குற்றெழுத்தையடுத்து யகர மெய்யில் நிறைவுறும் நிலைமொழிகளுடன் வல்லின, மெல்லின உயிர்மெய்யில் தொடங்கும் வருமொழி இணையும்போது வருமொழியின் முதலெழுத்துக்குரிய மெய்யெழுத்துத் தோன்றும்.

பொய் + சாட்சி  =  பொய்ச்சாட்சி   (வல்லினம் தோன்றியது)

மெய்   + பதம்      =  மெய்ப்பதம் (வல்லினம் தோன்றியது)

நெய்    + சட்டி      =  நெய்ச்சட்டி (வல்லினம் தோன்றியது)

செய்    + மதி        =  செய்ம்மதி              (மெல்லினம் தோன்றியது)

செய்    + நன்றி    =  செய்ந்நன்றி          (மெல்லினம் தோன்றியது)  
                  
மெய்   + நிலை    =  மெய்ந்நிலை         (மெல்லினம் தோன்றியது)
   
பொய் + மை        =  பொய்ம்மை           (மெல்லினம் தோன்றியது)
        
மெய்   + மை        =  மெய்ம்மை              (மெல்லினம் தோன்றியது)     







இன எழுத்துத் தோன்றுமிடங்கள்.

சில நிலைமொழிகளை யடுத்து வருகின்ற வருமொழியின் முதலெழுத்துக்குரிய மெய் தோன்றுதற்குப் பதிலாக அவ்வெழுத்தின் இனஎழுத்து தோன்றுவதுண்டு.

பூ        + பொழில்   =  பூம்பொழில்

வேய் + குழல்         =  வேய்ங்குழல்

பூ        + தோட்டம்  =  பூந்தோட்டம்

பாழ்  + கிணறு      = பாழ்ங்கிணறு


முக்கிய குறிப்பு:

பசு + பால் ஆகிய சொற்கள் இணையும்போது பசுப்பால் எனவரும். இதனைப் பசும்பால் என எழுதுதல் சரியன்று.  பசுமை + பால் என்பதே பசும்பால் எனப் புணரும்.  



       


உயிரீற்று நிலைமொழியுடன் உயிரெழுத்திற் தொடங்கும் வருமொழி இணைதல்.

நிலைமொழியின் ஈற்றெழுத்து அ, ஆ, உ, ஊ, ஒ, ஓ ஓள ஆகிய ஏழு உயிரோசைகளில் எதனையேனும் கொண்டிருக்குமாயின் வருமொழி உயிரெழுத்திற் தொடங்குமிடத்து ‘வ’ கரம் உடம்படு மெய்யாகத் தோன்றி இருமொழிகளையும் இணைக்கும்.

தகதக  +     என             = தகதகவென.                               பல     + அணி   =  பலவணி.
விழா     +  ஆரம்பம்    = விழாவாரம்பம்.                          நிலா + அழகு   =  நிலாவழகு.
குபுகுபு + என்று            =   குபுகுபுவென்று.                      திரு    + ஓடு       =  திருவோடு. 
பூ            + ஆரம்           =   பூவாரம்.                                        கூ       +  என்றான்   =  கூவென்றான். 
நொ       + அழகு          = நொவ்வழகு                                 போ + என்றாள்        = போவென்றாள்.       
நோ       + எல்லாம்      =  நோவெல்லாம்.                         கௌ + அழகு    = கௌவ்வழகு.



இ, ஈ, ஐ ஆகிய மூன்று உயிரோசைகளில் எதுவேனும் நிலைமொழியின் ஈற்றோசையாக வருமிடத்து உயிரெழுத்திற் தொடங்கும் வருமொழி இணையும்போது ‘ய’ கரம் உடம்படு மெய்யாகத் தோன்றும்.

பசி + இன்மை          = பசியின்மை             நடுநிசி  +ஆனது  = நடுநிசியானது.
தீ   + அணைந்தது  = தீயணைந்தது.        நீ  + அல்லன்           = நீயல்லன்.
புகை +  இலை         = புகையிலை            கலை +  உள்ளம்    = கலையுள்ளம்.


கோ + இல் = கோயில் என்றும் கோவில் என்றும் இணைவதை இலக்கணம் ஏற்கிறது.

கோயில் என இணையும்போது ‘ய’ கரம் உடம்படு மெய்யாகவும், கோவில் எனவிணையும்போது ‘வ’ கரம் உடம்படு மெய்யாகவும் தோன்றுகின்றன என்பதையும் கருத்திற் கொள்க.
  

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5