தமிழ் இலக்கணம் அறிவோம். - இயல் 02 - பகுதி 11-3
பதவியல் 2
பகுதி 11 – 3
ஆகுபெயர். (தொடர்ச்சி..)
13. கருத்தாவாகு பெயர்.
ஒரு படைப்பு அதன் கருத்தாவால் குறிப்பிடப்படும்போது அது கருத்தாவாகு பெயராகின்றது. இதை இன்னொரு விதமாகச் சொல்வதானால் கருத்தா தனது படைப்புக்கு ஆகி நிற்பதே கருத்தாவாகு பெயராகின்றது எனலாம்.
- கம்பனைப் படித்துப்பார்: தமிழின் சுவை தெரியும்.
- பாரதியை அறியாதான் தமிழை அறியாதானே.
- கார்ள்மாக்ஸைப் படிக்காமல் அரசியல் பேசாதே.
- திருவள்ளுவரை உணர்ந்தவன் உலகையே உணர்ந்தவனாகிறான்.
மேற்போந்த வாக்கியங்களில், கம்பனைப் படித்தல் என்பது அவரது ஆக்கமான கம்பராமாயணத்தையும் பிற தனிப்பாடல்களையும் படித்துக் கவிச்சுவையை உணர்தல் என்பது பொருளாகிறது:
பாரதியை அறியாதான் என்பதற்கு அவரது கவிதைகளை அறிந்திருக்காதவன் என்பதே கருத்தாகிறது:
கார்ள்மாக்ஸைப் படித்தல் என்பது அவரது அரசியற் தத்துவங்களைத் தெளிவாக அறிதல் எனப் பொருள்படுகிறது:
திருவள்ளுவரை உணர்தல் என்பது அவரது கருத்துகளைக் கூறுகின்ற திருக்குறளை உணர்ந்து படித்தல் என்பது விளக்கமாகிறது.
எனவே கருத்தா ஒருவரால் ஆக்கப்பட்ட படைப்புகள் அவற்றின் சிறப்புக்கருதிக் கருத்தாவால் அடையாளம் பெறுகின்ற நிலையே கருத்தாவாகு பெயர் என்பதை உணர்க.
14. தானியாகு பெயர்.
ஒரு பொருள் தன்னைத் தாங்கிநிற்கின்ற பொருளுக்கு ஆகி வருமிடத்து அது தானியாகு பெயராகிறது. தானி என்பது ஸ்தானம் அல்லது தானம் என்ற சொல்லிலிருந்து வந்தது. தானம் அல்லது தானி என்பதன் பொருள் இடம் என்பதைப் புரிந்துகொண்டால் தானியாகு பெயரை விளங்கிக் கொள்தல் எளிதாகும்.
- விளக்கு முறிந்தது.
- கையிலிருந்த எண்ணெய் தவறி விழுந்தது.
- சோறு பொங்கிவரும் வேளையிற் கவிழ்ந்தது.
- அடுப்பிலிருந்து பாலை இறக்கி வை.
இங்கே முதலாவது வாக்கியத்தில் விளக்கு என்பது வெளிச்சத்தைக் குறிக்கும் பதமாக இருந்தும் அந்த வெளிச்சத்தைத் தாங்கி நிற்கின்ற பொருளைக் குறிக்கின்றமை தெளிவு. விளக்க முறிந்தது என்பதன் பொருள் ஒளியைத் தாங்கி நிற்கின்ற தானி முறிந்தது என்பதுதான்.
எண்ணெய் தவறி விழுந்தது என்பது எண்ணெய் வைத்திருந்த பாத்திரம் தவறி விழுந்தமையையே குறிப்பிடுகிறது. சோறு கவிழ்ந்தது என்பதும் சோற்றைத் தாங்கிநிற்கும் பானை கவிழ்ந்தது என்பதையே சுட்டுகிறது.
அடுப்பிலிருந்து பாலை இறக்கிவை என்ற வாக்கியத்தில் இறக்கப்படுவது பாலைக் கொண்டிருக்கும் பாத்திரத்தை என்பது தெளிவாக விளங்குகிறது.
எனவே, ஒருபொருள் தன்னைக் குறிப்பிடாமல் தான் சார்ந்திருக்கும் அல்லது தங்கியிருக்கும் தானியைச் சுட்டுமிடத்து அது தானியாகு பெயர் எனப்படுகிறது.
15. சொல்லாகு பெயர்.
- வள்ளுவன் சொல் வாழ்க்கைக்கு உறுதி.
- குருவின் சொல் கேட்டு நடப்பது நன்மாணாக்கனின் பண்பாகும்.
- தாய் சொல்லைத் தட்டாதே.
- தந்தைசொல் மிக்க மந்திரமில்லை.
மேலே காட்டப்பட்டிருக்கும் வாக்கியங்களில் சொல் என்ற பதம் அதன் நேர்ப்பொருளைக் கொண்டிராமல் வேறு கருத்துகளைக் கொண்டிருப்பதால் அது சொல்லாகு பெயர் எனப்படுகிறது.
வள்ளுவன் சொல் என்பது அவரது நூற்கருத்துகளைக் குறிக்கிறது. குருவின் சொல் என்பது அவரின் வழிநடத்தலைச் சுட்டுகிறது. தாய் சொல் எனும்பதம் தாயின் விருப்பம், எண்ணம் என்பவற்றைக் குறிக்கிறது. தந்தை சொல் என்பதும் அவரது எண்ணம், ஆணை, வழிகாட்டல் என்பவற்றைப் புலப்படுத்துகின்றது என்பதை மனதிற் கொள்க.
16. உவமையாகுபெயர்.
சில சமயங்களில் ஒருவரின் இயல்புகருதி உவமைகளை அவரது அடையாளமாகக் கொள்கிறோம். அவ்வாறாகக் கொள்ளப்படும் உவமைகள் உவமையாகுபெயர் எனப்படுகிறது.
நண்பர்களிடையே கலகமூட்டும் ஒருநண்பன் வரும்போது, “அதோ நாரதன் வருகிறான்.” எனக் கூறுமிடத்து நாரதரின் இயல்பு நமது நண்பனுக்கு உவமையாகி வருவதால் அது உவமையாகு பெயராகிறது.
“இளங்காளை செருக்களத்தில் எதிரிகளைப் பந்தாடியது.” என்ற வாக்கியத்தில் இளங்காளையின் இயல்புகள் இளையவீரனுக்கு உவமைஆகி வருவதால் அதுவும் உவமையாகு பெயர் எனப்படுகிறது.
“சாலையோரம் சோலையொன்று ஆடும்: சந்தோசம் பாடும்.” என்ற கவிதைவரியில் சோலை என்றபதம் அதன் இயல்புகளான அழகு, மென்மை, மனதைக் கவருந்தன்மை என்பவற்றை இளம்பெண்ணுக்கு உவமையாக்கி வெளிப்படுவதால் அது உவமையாகு பெயராகின்றது.
ஆகுபெயர் பற்றிய சில குறிப்புகள்.:
ஆகுபெயர்கள்; பன்னெடுங்காலமாகப் பேச்சுவழக்கில் அமைந்தவை. எல்லா மொழிகளிலும் ஆகுபெயர்கள்; அன்றாட வாழ்வில் இடம் பெறுகின்றன.
ஆட்டோவை அல்லது டாக்ஸியை ஒருவர் அழைக்கும்போது ஆட்டோ என்றோ டாக்ஸி என்றோதான் அழைக்கிறார்கள். ஆட்டோவுக்கோ டாக்ஸிக்கோ கேட்குந்திறன் இல்லை என்பது அழைப்பவருக்குத் தெரியாமலில்லை. ஆனாலும் அவர் அவ்வாறு அழைக்கிறாரெனில் அவ்வழைப்பு ஒட்டுநருக்கானது என்பது தெளிவு.
எனவே ஆட்டோவின் பெயர் அல்லது டாக்ஸியின் பெயர் ஓட்டுநருக்கு ஆகி நிற்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் ஆகுபெயரின் பயன்பாடு தெளிவாகும்.
இடவாகு பெயரும், தானியாகு பெயரும் ஒன்றுக்கொன்று மறுதலையானவை என்பதையும் விளங்குதல் நன்று. “இலங்கை பதக்கம் வென்றது.” என்பது இடவாகு பெயர். அதாவது இலங்கையில் வாழ்கின்ற வீரர்களையே இலங்கை என்ற இடப்பெயர் குறிப்பிடுகிறது.
ஆனால் “பாலை இறக்கு.” எனும்போது பால் என்றபதம் தன்னைத் தாங்கி நிற்கின்ற பாத்திரத்தைக் குறிப்பிடுகிறது. அதனால் அது தானியாகு பெயர். இடவாகுபெயர் தான் தாங்கிநிற்கின்ற பொருளைக் குறிக்கையில் தானியாகு பெயர் தன்னைத் தாங்கிநிற்கின்ற பொருளைச் சுட்டுகிறது என்பதை நினைவிற் கொள்ளின் தெளிவு கிடைக்கும்..
வினாவகை.
வினா அதன் தன்மைகருதி அறிவினா, அறியாவினா, ஐயவினா, கொளல்வினா, கொடைவினா, ஏவல்வினா என ஆறுவகைப்படுவதாக இலக்கண அறிஞர் கூறுவர்.
1.அறிவினா: விடையை நன்கு தெரிந்திருந்தும் எதிராளியிடம் வினாத் தொடுப்பது அறிவினா எனப்படுகிறது. ஆசிரியர் தன் மாணாக்கனிடம் கேட்கும் கேள்விகள் இவ்வகையைச் சாரும்.
இவ் வினாக்களின் நோக்கம் வினாவை எதிர்கொள்பவர் சரியான விடையை அறிந்திருக்கிறாரா என உறுதி செய்வதேயாகும்.
- “ஐம்பெருங் காப்பியங்கள் எனப்படுபவை யாவை?
- இலங்கைத் தீவின் சுற்றளவு எத்தனை கிலோமீற்றா?” என்பவை இவற்றுக்கான எடுத்துக்காட்டுகளாம்.
2.அறியாவினா: வினாத் தொடுப்பவர் விடையை அறிந்திராத நிலையிலுண்டாகும் கேள்வி அறியாவினா எனப்படுகிறது.
“இந்த வேலையை யார் செய்தார்கள்?, கடவுச்சீட்டு எடுப்பதற்கு என்னென்ன ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்?” என்பவை போன்ற வினாக்கள் அறியாவினாவின் பாற்படும்.
இதேபோல், மாணவனொருவன் தன் ஆசிரியரிடம் ஐம்பெருங் காப்பியங்கள் பற்றியோ, இலங்கையின் சுற்றளவு பற்றியோ வினவுவானாயின் அவையும் அறியாவினா வகைக்குள் வந்துவிடுகின்றன என்பதையும் நோக்குக.
3.ஐயவினா: சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்காக எழுப்பப்படும் வினாக்கள் ஐயவினா வகையைச் சாரும்.
“இவனா அவனா வயதில் மூத்தவன்?, நீங்கள் மாலை நான்குமணிக்கா அல்லது ஐந்துமணிக்கா அவரைச் சந்திக்க உள்ளீர்கள்? அவன் சொன்னபடி வருவானா?” என்பவை போன்ற சந்தேக நிவர்த்திக்காக உண்டாகும் வினா ஐயவினா எனப்படும்.
4.கொளல்வினா: ஒரு பொருளைப் பெற்றுக் கொள்வதற்காகக் உருவாகும் வினா கொளல்வினா எனப்படுகிறது.
“பருப்பு என்ன விலை? உனது பேனாவைச் சற்றுத் தருகிறாயா? இந்தப் படத்தை நான் வைத்துக் கொள்ளவா?” ஆகிய வினாக்கள் கொளல்வினா வகையைச் சாரும்.
5.கொடைவினா: பொருளொன்றைக் கொடுக்கும் நோக்கில் கேட்கப்படுகின்ற வினா கொடைவினா வகையைச் சாரும்.
“மாணவர்களே! அனைவரும் சீருடை பெற்றுக் கொண்டீர்களா?”, எல்லோரும் தேநீர் அருந்தினீர்களா?” போன்றவை கொடைவினாவுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
6.ஏவல்வினா. ஒரு செயலைச் செய்வதற்கான தூண்டுதலை வினாமூலம் வழங்க முயலுமிடத்து அது ஏவல்வினாவாகிறது.
“தம்பீ, இவ்வளவு நேரமும் விளையாடிக் கொண்டிருக்கிறாயே.. வீட்டுப்பாடங்களைச் செய்து முடித்துவிட்டாயா?” “நான் சொன்ன இடத்துக்கு இன்னும் போகவில்லையா?” என்பவை போன்ற வினாக்கள் ஒரு வேலையைச் செய்யும்படி ஏவல் செய்வதனால் அவை ஏவல்வினாக்கள் எனப்படுகின்றன.
விடைவகை.
வினாவுக்கு அளிக்கப்படும் விடைகளும், சுட்டுவிடை, மறைவிடை, நேர்விடை, ஏவல்விடை, வினாவெதிர்விடை, உற்றதுஉரைத்தல்விடை, உறுவதுஉரைத்தல்விடை, இனமொழிவிடை என எட்டுவகைப்படுவதாக இலக்கண அறிஞர்கள் கூறுகின்றனர்.
1.சுட்டுவிடை: பாதைபற்றிய ஐயவினாவோ அறியாவினாவோ ஒருவரிடம் கேட்கப்படும்போது அவர் பாதையைச் சுட்டிக்காட்டி “இதுதான் நீங்கள் செல்ல வேண்டிய பாதை.” எனப் பதில் கிடைக்குமாயின் அவ்விடை சுட்டுவிடை எனப்படுகிறது. படிக்கவேண்டிய பாடங்களை ஒரு மாணவனுக்கு உணர்த்தவதும் இவ்வகை சார்ந்த விடையே.
2.மறைவிடை: “வீட்டுப்பாடங்களைச் செய்தாயா?” என ஆசிரியர் மாணவனிடத்தில் வினவும்போது, இல்லை என மறுதலையாக விடை வருமாயின் அது மறைவிடை எனப்படும். “இவ்வாண்டு கதிர்காமத்துக்குச் சென்றாயா?” என்ற கேள்விக்குப் போகவில்லை என்பது விடையாக வருமாயின் அதுவும் மறைவிடை வகையைச் சேர்ந்ததுதான்.
3.நேர்விடை: “பாடசாலைக்குப் போகிறாயா?” என்ற கேள்விக்கு “ஆம், போகிறேன்.”என விடையிறுப்பதும், “தம்பீ, எனக்கு உதவுவாயா?” எனக் கேட்குமிடத்து, “நிச்சயமாக உதவுவேன்.” எனப் பதில் வருவதும் நேர்விடைக்கு உதாரணங்களாகும்.
4.ஏவல்விடை “கடைக்குச் சென்று பொருளை வாங்கி வருகிறாயா?” என்ற வினாவுக்கு “முடியாது: வேண்டுமானால் நீயே போய் வாங்கிக்கொள்.” என்பது விடையாக வருமாயின் அது ஏவல்விடை எனப்படும். விடையில் ஏவல் தொனி அமைவதால் இவ்வாறு பெயர் பெறுகிறது.
5.வினாஎதிர்விடை: “அதைச் செய்து முடித்து விட்டாயா?” என்ற வினாவுக்கு, “செய்து முடிக்காமல் உங்கள்முன் வருவேனா?” “என்னை யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?” “நான் ஒரு பொறுப்பை ஏற்றால் முடிக்காமல் விடமாட்டேன் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்பவை போன்ற கேள்விகளே விடையாக வருமாயின் அது வினாஎதிர்விடை வகையைச் சாரும்.
6.உற்றதுரைத்தல்விடை: “அவரைச் சந்தித்தாயா?” என்ற வகையிலான கேள்விகளுக்கு நேரடியாகப் பதில்கூறாமல், தனக்குச் சுகமில்லையென்றோ, தன் நண்பனொருவன் விபத்தில் சிக்கிக் கொண்டான் என்றோ வீட்டுக்கு விருந்தினர்கள் வந்து விட்டார்கள் என்றோ தான் சந்திக்காமல் விட்டதற்குத் தடையாக நேர்ந்த காரணங்களை முன்வைப்பது உற்றது உரைத்தல் என்ற விடைவகையைச் சாரும்.
7.உறுவதுகூறல்விடை: இவ்வகை விடைகள் குழந்தைகளிடமிருந்து அதிகமாக வருவதை உணரலாம். “இதைக் கொண்டுபோய் அம்மாவிடம் கொடுக்கிறாயா?” எனும் கேள்விக்கு “ஊ..கும் கை வலிக்கும்.” என்பதாக வரும் மழலைப்பதில் உறுவதுகூறல் விடைக்குச் சிறந்த உதாரணமாகும். “மருந்து குடிக்கிறாயா?” என்ற தாயின் கேள்விக்கு “கசக்கும்…” எனக் குழந்தை சொல்வதும் இவ்வகையைச் சார்ந்ததே.
8.இனமொழிவிடை: கேள்வி ஒன்று கேட்கப்படுகையில் அதற்கு நேரடியாக விடை கூறாமல் கேள்விக்கு மிகநெருக்கமான இன்னொரு மொழியைப் பதிலாக முன்வைத்தல் இனமொழி விடை எனப்படுகிறது.
உதாரணமாக “நன்றாகப் பாடுவாயா?” என்ற வினாவுக்கு “நன்றாக ஆடுவேனே..” எனப் பதிலிறுப்பதைக் கொள்ளலாம். “உனக்கு மேடைப்பேச்சு வருமா?” என்ற கேள்விக்கு “கட்டுரைகள் என்றால் நன்றாக எழுதுவேன்.” என்ற பதிலும் இவ்வகைத்தே. இங்கே ஆடல், பாடல், பேச்சு, கட்டுரை என்பவை ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை என்பதைக் கருத்திற் கொள்க.
கருத்துகள்
கருத்துரையிடுக