தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 8
தமிழ் இலக்கணம்
பதவியல். இயல் 2, பகுதி 8
வழக்கு
நாம் பேசும்போதும் எழுதும்போதும் பலவிடயங்களை வெளிப்படையாகப் புலப்படுத்துகிறோம். சிலவற்றைப் பண்பாடு கருதியோ, மரியாதை கருதியோ வெளிப்படையாகக் குறிப்பிடாமல் அவற்றுக்குப் பதிலாக வேறு உத்திகளைக் கையாளுகிறோம். இந்த நடைமுறை மொழிமரபின் பாற்பட்டதாகும். அதுமாத்திரமன்றி, நாம் பயன்படுத்தும் சொற்கள் அனைத்தையும் அச்சொட்டான இலக்கணரீதியாகப் பயன்படுத்துவதுமில்லை. இவ்வாறான நடைமுறைகளை இலக்கணநூலார் வழக்கு என அழைப்பர்.
வழக்கு என்பது இயல்புவழக்கு, தகுதிவழக்கு என இவை இருவகைப்படும்.
இயல்பு வழக்கானது, இலக்கணமுடையது, இலக்கணப்போலி, மரூஉ என மூவகைப்படுகின்றது. அதேபோல் தகுதிவழக்கும், இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என மூவகைப்படுகின்றது.
இயல்புவழக்கு.
நாம் இயல்பாகப் பயன்படுத்துகின்ற சொற்கள் இயல்புவழக்கு எனப்படுகின்றன. ‘பட்’டென்று போட்டு உடைத்துவிடும் வழக்கு எனவும் இதனைக்கூறலாம். இவ்வாறு சொற்களைக் கையாளும்போது இலக்கணச் சொற்களாகவோ, இலக்கணப் போலிகளாகவோ, மரூஉச் சொற்களாகவோ அவை அமைகின்றன.
1. இலக்கணமுடைமை.
இந்த வகைக்குள் உரையாடலோ, எழுத்துருக்களோ அமையும்போது யாரும் மொழியாளுகையிற் தவறு காணமுடியாது. மொழியாற்றல் உடையவர்களால் மட்டுமே இதனைச் சிறப்பாகப் பேணமுடியும். அதேபோல் மொழியாற்றல் உடையவர்களால் மட்டுமே இவற்றை முழுமையாக விளங்கிக் கொள்ளவும் முடியும். மொழியாற்றல் குறைந்தவர்கள் சிலசமயம் இலக்கணப்போலிக்குள் சிக்கிக் கொள்ள வாய்ப்புண்டு.
‘நான் நன்றாகப் பாடுவேன்.’ ‘தம்பி எங்கே போகிறான்?’ ‘அவர்கள் என்னை அழைத்திருக்கிறார்கள்.’ ஆகிய வசனங்களிலோ, அவற்றில் அமைந்திருக்கும் சொற்களிலோ எந்த இலக்கணப் பிழையும் காணப்படவில்லை. எனவே இவை இலக்கணமுடைமை என்ற பிரிவுக்குள் வருகின்றன. இச்சொற்கள் தொன்று தொட்டு வழங்கப்பட்டு வருகின்றன.
2. இலக்கணப்போலி.
இலக்கணச் செம்மை பெறாவிடினும் சான்றோரால் தகையுடையவை என ஏற்றுக் கொள்ளப்பட்டு இலக்கணத் தன்மையுடன் வழங்கப்படும் சொற்கள் இலக்கணப்போலி எனப்படுகின்றன.
எடுத்துக்காட்டுகள்-
1. முன்றில் (முற்றம் எனத் தற்போது வழங்கப்படுகிறது. இல்லத்தின் முன்னால் அமைந்த நிலப்பரப்பு என்ற பொருளில் இல்-முன் என்றசொல் முன்றில் என மாற்றமடைந்துள்ளது.)
2. வாய்க்கால் (கால்-வாய் எனவமைந்த சொல்.)
3. புறநகர் (நகரத்துக்கு வெளியே அமைந்த ஊர் என்ற பொருளில் நகர்ப்புறம் என வரவேண்டியது.)
4. கோயில் ( இலக்கணத்தின்படி கோ-இல் இணையும்போது கோவில் என அமையும்.)
5. துவக்கம் (தொடு-அக்கம் இணைந்து தொடக்கம் என அமைவது. இலங்கையில் தொடக்கம் என்ற பதமே பயன்பாட்டில் இருக்கிறது)
3. மரூஉ
எழுதும்போதோ, பேசும்போதோ சில சொற்கள் மருவிப் புதியதோற்றம் பெற்றுவிடுகின்றன. இவற்றையே இலக்கண அறிஞர் மரூஉ என்பர்.
உதாரணங்கள்:
அருமந்த (பையன்) (அரிய மருந்து போல என்ற பொருளில் அருமருந்தன்ன எனவமைந்த சொல்.)
திருச்சி (திருச்சிராப்பள்ளி என்பதே அவ்வூரின் பண்டையபெயர்.)
தகுதி வழக்கு.
1. இடக்கரடக்கல்:
பண்பாடு கருதியோ, எதிரே நிற்பவர்மேற் கொண்ட மரியாதை கருதியோ சில சொற்களை நேரடியாக் நாம் பயன்படுத்துவதில்லை.
மலங்கழித்தல் என்பதற்குக் கால்கழுவுதல் என்றோ, காட்டுப்பக்கம் போதல் என்றோ, வெளிக்கு அல்லது வெட்டைக்குச் செல்லல் என்றோ மரியாதைச் சொற்களாற் குறிப்பிடுவதை இதற்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
2. மங்கலம்:
சில துக்ககரமான நிகழ்வுகளை நல்ல வார்த்தைகளாற் குறிப்பிடுவதை மங்கல வழக்கு என்பர்.
இறந்தார் என்பதைத் துஞ்சினார், மறைந்தார், மீளாத்துயிலானார், சிவப்பேறடைந்தார், காலமானார், தவறிப்போனார் என்பன போன்ற சொற்களாற் குறிப்பிடுவதை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.
முள்ளிவாய்க்கால் முற்றம், மாவீரர் துயிலும் இல்லம் என்பவையும் இவ்வகையைச் சார்ந்த சொற்களே.
3. குழூஉக்குறி
சில குழுக்களிடையே மாத்திரம் பரிமாறப்படும் சொற்கள் குழூஉக்குறி எனும் வகைக்குள் வருகின்றன. விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் போன்றோரிடையே குழூஉக்கறிச் சொற்கள் வழங்கப்பெறுகின்றன.
வேலைக்காரன்கம்பு, பொலி, நடையன், வாரியன் போன்ற குழூஉக்குறிச் சொற்கள் விவசாயிகள் மத்தியிலும், கம்பான், மன்றாடி, சம்மட்டியார், பறி, அணியம், பாடு போன்ற சொற்கள் கடற்றொழிலாளர் மத்தியிலும் பரவலாக வழங்கி வருதலை எவரும் அறிந்துகொள்ளலாம்.
இளைஞர்களிடையே காணப்படும் அவர்களின் நடவடிக்கை சார்ந்த சொற்களும், ஆசிரியர்கள், பெரியோர்கள் பற்றி மாணவர்கள் தமக்குள் உரையாடும்போது பிறரறியா வண்ணம் தமக்குட் பயன்படுத்தும் சொற்களும் இவ்வகையைச் சார்ந்தனவே. இச்சொற்களின் பொருளை அந்தந்தக் குழாம் சார்ந்தவர்களன்றி வேறெவரும் அறிய வாய்ப்பில்லை.
எவ்வாறெனினும், இயல்பு வழக்காயினும் தகுதிவழக்காயினும் அவை இலக்கண நெறிமுறைக்குள் அடங்கிவிடுகின்றன என்பதை மறத்தலாகாது.
கருத்துகள்
கருத்துரையிடுக