தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 6
பதவியல் 6
திணை.
திணை என்பது வகுப்பு அல்லது பிரிவு எனப் பொருள்படும். இலக்கணநூலார். மனிதர்களையும் மனிதர்களுக்கு மேம்பட்டவர்கள் எனக் கருதப்பட்ட தேவர், அசுரர், கடவுளர் என்பவர்களையும் உயர் திணையாகவும், ஏனையவற்றை உயர்திணை அல்லாதனவாகவும் பிரித்துள்ளனர். உயர்திணை அல்லாதவை அஃறிணை எனப்படுகின்றன.
உயர்திணையின் நடவடிக்கைகளைக் குறிக்கும் வினைச்சொற்கள் உயர்திணை சார்ந்தும் .அஃறிணைக்குரிய வினைகள் அஃறிணை சார்ந்தும் இருப்பது தமிழ்வழக்கு.
மனிதன் ஓடினான். பூனை ஓடியது, அவர்கள் வந்தனர், அவை வந்தன போன்ற வாக்கியங்களை எடுத்துக் கொண்டால், மனிதன், அவர்கள் என்பவை உயர்திணை வினைச்சொற்களிலும், பூனை, அவை போன்றவை அஃறிணை வினைச்சொற்களிலும் நிறைவு பெறுவதை அவதானிக்கலாம்.
எனினும் சிலஇடங்களில் இவ்விதி குழப்பமடைவதுமுண்டு. எடுத்துக்காட்டாக, குழந்தை, தெய்வம் என்பவை உயர்திணை வகுதிக்குள் வருகின்ற பெயர்கள். ஆனால் அவை வினைச்சொல் பெறுமபோது. குழந்தை விளையாடுகிறது, தெய்வம் எம்மைக் காக்கின்றது என அஃறிணை விகுதி பெறுகின்ற வினைகளையே ஏற்கின்றன. அதேபோல் சூரியன் உதித்தது சூரியன் உதித்தான் என்பதில் இருவகை வினைகளும் ஏற்கப்படுவதைக் காணலாம். சந்திரனுக்கும் இது பொருந்தும்.
பால்.
உயர்திணைப் பெயர்ச் சொற்களும் வினைச்சொற்களும் ஆண்பால், பெண்பால், பலர்பால் என மூவகைப் படுகின்றன. அஃறிணைச் சொற்கள் ஒன்றன்பால், பலவின்பால் என இருவகைப்படுகின்றன.
ஆண்பால்
அப்பா, அண்ணா, தம்பி, தலைவன், அரசன், இளவரசன், பேரன் போன்ற பெயர்ச்செற்களும், நின்றான், படித்தான், விளையாடினான் போன்ற வினைச்சொற்களும் ஆண்களைக் குறிப்பதால் அவை ஆண்பால் எனப்படுகின்றன.
பெண்பால்.
அம்மா, அக்கா, தங்கை, தலைவி, அரசி, இளவரசி, மகள், பேர்த்தி போன்ற பெயர்ச்சொற்களும், நின்றாள், படித்தாள், விளையாடினாள் போன்ற வினைச்சொற்களும் பெண்பால் வகுதிக்குள் வருகின்றன.
ஆண்பால், பெண்பால் என்பவை எப்போதும் ஆண் அல்லது பெண் எனத் தனி ஆளைச் சுட்டுவதாகவே அமையும் என்பதை மனதிற் கொள்க.
பலர்பால்.
ஆண் ஒருவர் அல்லது பெண் ஒருவர் அல்லாமல், ஆண்கள் பலரை அல்லது பெண்கள் பலரை அன்றேல் இருசாராரையும் உள்ளடக்கிய மக்கள்கூட்டம் பலர்பால் எனப்படும். அவர்கள் வந்தார்கள், நாங்கள் பேசினோம், நீங்கள் உணவருந்தினீர்கள் போன்ற வசனங்களில் எழுவாய், பயனிலை இரண்டுமே பலர்பால் வகுதிக்குள் வருகின்றன.
ஓன்றன்பால்.
அஃறிணை ஒன்றைப்பற்றிப் பேசும்போது அது ஒன்றன்பால் எனப்படுகிறது. நாய் ஓடியது, கல் விழுந்தது என்பவை எடுத்துக்காட்டுகளாம்.
பலவின்பால்.
நாய்கள் ஓடின, கற்கள் விழுந்தன ஆகிய வசனங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாய்கள் பற்றியம் கற்கள் பற்றியும் பேசப்படுகின்றன. அவற்றுடன் இணைகின்ற வினைச்சொற்களும் அஃறிணைப் பலவற்றைக் குறிக்கும் வகையில் அமைந்துள்ளமையையும் அவதானிக்கலாம். எனவே இவை பலவின்பால் என அழைக்கப்படுகின்றன.
முக்கிய குறிப்பு.
ஆண்பால், பெண்பால் என்பவற்றுள் அடங்காத உயர்திணைச் சொற்களும் உள.
அமைச்சர், அலுவலர், வைத்தியர், தொழிலாளி, முதலாளி, உரிமையாளர், அறிஞர், விவேகி, ஏதிலி, எதிரி என்பவற்றை இவற்றுக்கான எடுத்துக்காட்டுகளாகக் கொள்ளலாம்.
நான், நீ ஆகிய பதங்களும் பேசுபவரதும் கேட்பவரதும் நிலையைப் பொறுத்தே ஆண்பால், பெண்பால் பண்புகளைப் பெறுகின்றன. பேசுபவர் பெண்ணாயின் நான் என்பது பெண்பாலாகவும், பேசுபவர் ஆணாயின் ஆண்பாலாகவும் கொள்ளப்படும். அதேபோல் கேட்பவர் ஆணாயின் நீ ஆண்பாலாகவும். பெண்ணாயின் பெண்பாலாகவும் கொள்ளப்படலாம்.
எவ்வாறெனினும் நான், நீ ஆகிய பதங்கள் தன்னளவில் பால்நிலை பெறாதவையாகவே என்பதை மனதிற் கொள்க.
மூவிடம்.
நாங்கள் பேசுகின்ற அல்லது எழுதுகின்ற மொழி மூன்று வகைக்குள் மட்டுப்படுத்தப்படுகின்றன. இதனைத் தமிழ் இலக்கணநூலோர் மூவிடம் என அழைக்கின்றனர். அவை தன்மை, முன்னிலை, படர்க்கை என்பனவாம்.
தன்மை.
பேசுபவர் அல்லது பேசுவர்கள் தன்னைப் பற்றியோ தம்மைப்பற்றியோ பேச முனையம்போது அப்பேச்சு தன்மையின்பாற் படுகிறது. “நான் வந்தேன்.” என்பது தன்மைப் பெயராகிய நான் என்பதையும் தன்மை வினையாகிய வந்தேன் என்பதையும் குறிப்பிடுகின்றது. “நாங்கள் வந்தோம்.” என்ற வசனத்தில் தன்மைப் பெயரும் வினையும் பன்மை பெற்றுவருகின்றன.
எனவே நான் யான், நாங்கள், நாம் என்பவை தன்மைப் பெயர்களாகவும். வந்தோம், படிக்கின்றோம், சிரிக்கின்றேன், என்பவை தன்மை வினைகளாகவும் வருவதைக் காணலாம்.
முன்னிலை.
நாம் எதிரே நிற்பவரை விளித்துப் பேசும்போது அப்பேச்சு முன்னிலைச் சொற்களைக் கொண்டமைகிறது.
நீ வந்தாயா? நீங்கள் விளையாடுங்கள், போன்ற வாக்கியங்கள் முன்னிலைப் பெயரையும். முன்னிலை வினையையும் கெண்டிருக்கின்றன.
ஆகவே நீ, நீவிர், நீங்கள், தாங்கள் என்பவை முன்னிலைப் பெயர்களாகவும், வந்தாயா, விளையாடுங்கள், பேசுங்கள், பாடுங்கள் என்பவை முன்னிலை வினைகளாகவும் அறியப்படுகின்றன.
படர்க்கை.
தன்மை, முன்னிலை தவிர்ந்த அனைத்துக் கருத்துப் பரிமாற்றங்களும் படர்க்கை எனப்படும்.
நண்பன், குரு, பெற்றோர், தெய்வம், அலுவலகம், பாடசாலை ஆலயம் அனைத்தும் படர்க்கை வகுதிக்குள் வருகின்றன.
பாடசாலை தொடங்கிற்று, நண்பர்கள் உதவுகிறார்கள், பெற்றோரும் குருவும் தெய்வத்துக்குச் சமமானவர்கள், ஆலயம் தொழுவது சாலவும் நன்று ஆகிய வாக்கியங்கள் படர்க்கைத்தன்மை உடையன.
எடுத்துக்காட்டுகள்.
நாங்கள் விளையாடுகிறோம். (தன்மை வாக்கியம்)
நீங்கள் விளையாடுகிறீர்கள். (முன்னிலை வாக்கியம்)
அவர்கள் விளையாடுகிறார்கள். (படர்க்கை வாக்கியம்)
நாங்கள் எல்லோமும் (எல்லேமும், எல்லோரும்) செல்கின்றோம். (தன்மை)
நீவிர் (நீங்கள்) எல்லீரும் (எல்லோரும்) பார்த்தீர்கள். (முன்னிலை)
அவர்கள் எல்லோரும் வந்தார்கள். (படர்க்கை)
இன்றைய தமிழில் “எல்லோரும்” என்ற சொல்லை மூவிடத்தும் பயன்படுத்துகிறோம். அஃது இலக்கண வழுவற்றதாகவும் கொள்ளப்படுகிறது. நாங்கள் எல்லோரும், நீங்கள் எல்லோரும். அவர்கள் எல்லோரும் என்றே பயன்படுத்துகிறோம். ஆயினும் வினைச்சொற்களை இடத்துக்கேற்றாற்போல் வேறுபடுத்துகிறோம். இதன்மூலம் வினைச்சொற்களைக் கொண்டும் தன்மை, முன்னிலை, படர்க்கை என்பவற்றைத் தீர்மானிக்க முடிகிறது.
எடுத்துக்காட்டாக, நாங்கள் எல்லோரும் வந்தோம், நீங்கள் எல்லோரும் வந்தீர்கள், அவர்கள் எல்லோரும் வந்தார்கள் என்றே வழங்குகிறோம். இங்கே வினைச்சொற்கள் மாறுபாடடைவதைக் காணலாம்.
ஆனால், பண்டைய வழக்கின்படி நாங்கள் எல்லோமும் (அல்லது எல்லேமும்) வந்தோம் (அல்லது வந்தேம்). நீங்கள் எல்லீரும் வந்தீர்கள். அவர்கள் எல்லோரும் வந்தார்கள் என்றே எழுதப்பட்டன. இப்போது அவ்வழக்கம் அருகிவிட்டது.
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள்.
ஒரு வசனம் கருத்துடையதாக அமைய வேண்டுமானால் அவ்வசனம் ஆகக்குறைந்தது எழுவாய், பயனிலை ஆகிய இரண்டையும் கொண்டதாக இருக்கவேண்டும். இவற்றுள் எழுவாய் வெளிப்பட்டோ வெளிப்படாமலோ நிற்றலுங்கூடும். சில வசனங்கள் முழுமை பெறுவதற்கு செயப்படுபொருளும் அமையவேண்டியுள்ளது. அவற்றைப் பார்ப்போம்.
எழுவாய்.
ஒரு கருத்து எதற்காகத் தோற்றுவிக்கப்படுகிறதோ, ஒரு வசனம் எதைத் தோற்றுவாயாகக் கொண்டெழுகிறதோ அது எழுவாய் எனப்படும்.
கண்ணன் விளையாடினான், நாய் குரைத்தது போன்ற வசனங்களை எடுத்துக்கொண்டால் முதலாவது வசனம் கண்ணன் என்பவனைப்பற்றியும், அடுத்த வசனம் நாயைப் பற்றியும் பேசுகின்றன. எனவே கண்ணன். நாய் என்பவை எழுவாய் எனப்படுகின்றன.
தோன்றா எழுவாய்.
வந்தான். பேசினேன், சென்றாய் போன்றவை தனிச் சொற்களாயினும் நிறைவான கருத்தைத் தருகின்றன. அவ்வாறு நிறைவான கருத்து வருவதற்குக் காரணம் வசனத்தின் எழுவாய்ச் சொற்கள் வெளிப்படையாக வராவிடினும் மறைந்துநின்று செயல்படுகின்றமையாகும்.
வசனங்களை முழுமையாகச் சொல்வதானால், அவன் வந்தான், நான் பேசினேன், நீ சென்றாய் எனச் சொல்ல வேண்டும். எனவே மறைந்துநின்றும் வசனத்தின் கருத்தை நிறைவு செய்கின்ற எழுவாய்களைத் தோன்றாஎழுவாய் என்பர். வெளிப்படையாகத் தெரியவிடினும் பேசுபொருளாக அவை அமைகின்றன என்பதே இதன் பொருள்.
ஒரு சொற்றொடரின் பயனிலையை வைத்து யார், அல்லது எது என்ற வினாவை எழுப்புவோமாயின் அதற்கு விடையாக வருவது எழுவாய் என்பது தெளிவு.
பயனிலை.
ஒரு வசனத்தின் பொருளை நிறைவுபடுத்துகின்ற வினைச்சொல் பயனிலை எனப்படுகிறது. எழுவாய் தோன்றியதன் பயன்தருநிலை என்பதே பயனிலையாகும்.
கண்ணன் விளையாடினான் என்ற வசனத்தில் விளையாடினான் என்ற வினைமுற்றும், நாய் குரைத்தது என்பதில் குரைத்தது எனும் வினைமுற்றும் பயனிலைகள் எனப்படுகின்றன.
செயப்படுபொருள்.
அப்பா வேலை செய்தார், தம்பி பாடம் படித்தான், அண்ணா சைக்கிள் ஓட்டினார், அக்கா துணி துவைத்தாள், அம்மா பலகாரம் சுட்டார் ஆகிய வசனங்களை எடுத்துக் கொண்டால் அப்பா, தம்பி, அண்ணா, அக்கா, அம்மா ஆகிய சொற்கள் எழுவாய்களாகவும், செய்தார், படித்தான், ஓட்டினார், துவைத்தாள், சுட்டார் ஆகியவை பயனிலைகளாகவும் கொள்ளப்படுகின்றன.
இவ்வெழுவாய்களும் பயனிலைகளும் வசனங்களின் கருத்தை முழுமையாகப் புலப்படுத்தப் போதுமானவையாக அமையவில்லை என்பது தெளிவு.
எனவே பொருள் நிறைவாக வரவேண்டுமெனில் அப்பா எதைச் செய்தார் என்றொரு வினா உருவாகிறது. அதற்கு விடையாக வேலை செய்தார் என்பது பெறப்படுகிறது. இங்கே வேலை என்பது செயப்படுபொருளாகிறது. இதன்படி பாடம், சைக்கிள், துணி, பலகாரம் என்பவை செயப்படுபொருள் எனப்படுகின்றன.
இரண்டாம் வேற்றுமை உருபான “ஐ” செயப்படுபொருளில் வெளிப்பட்டும் மறைந்தும் வருவதுண்டு. மேற்போந்த வசனங்கள், அப்பா வேலையைச் செய்தார், தம்பி பாடத்தைப் படித்தான், அண்ணா சைக்கிளை ஓட்டினார், அக்கா துணியைத் துவைத்தார், அம்மா பலகாரத்தைச் சுட்டார் என “ஐ” உருபு வெளிப்பட்டு வருவதும் வழக்கம்.
கவனத்திற் கொள்ளவேண்டியவை :
பயனிலை எப்போதும் வசனம் சொல்லவந்த கருத்தை நிறைவு செய்யும் சொல்லாகவே அமையும். வழக்கமாக அது இறுதிச்சொல்லாகவும் இருக்கும். அத்துடன் குறிப்புவினை முற்றாகவோ. தெரிநிலை வினைமுற்றாகவோதான் வரும்.
தம்பி பாடம் படித்தான், எனவரும் சொற்றொடரில் “படித்தான்” பயனிலையாகிறது. இச்சொல் காலங்காட்டுவதால் தெரிநிலை வினைமுற்று எனப்படுகிறது.
அவன் நல்லன் எனுந்தொடரில், “நல்லன்” பயனிலை, காலங்காட்டாதபடியால் குறிப்பு வினைமுற்றைச் சார்கிறது.
எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகியவை விசேடநிலை பெறுதல் அல்லது அடைமொழிகளை ஏற்றல்.
“சின்னத் தம்பி புதிய சைக்கிளை அழகாக ஒட்டினான்.” என்ற தொடரை எடுத்துக் கொண்டால்,
ஓட்டினான் என்பது பயனிலை.
எவ்வாறு ஓட்டினான் என்ற கேள்வி எழுமிடத்து, “அழகாக’ எனும் விடை வருகிறது. இச்சொல் சைக்கிள் செலுத்தப்பட்ட முறையை விபரிக்கின்றது.
எனவே “அழகாக” என்றபதம் பயனிலை விசேடணம் அல்லது பயனிலை அடைமொழி எனப்படுகிறது.
யார் ஓட்டினான் என்ற கேள்விக்குத் தம்பி என்பதே விடை. எனவே இச்சொற்றொடரில் “தம்பி’ எழுவாய் ஆகிறது.
எந்தத் தம்பி அல்லது எத்தகைய தம்பி எனப் பார்க்கின் சின்னத் தம்பி என்பது தெரிகிறது. எனவே, சின்ன எனுஞ்சொல் தம்பியைச் சிறப்பித்துச் சொல்வதால் அது எழுவாய் விசேடணம் அல்லது அடைமொழி எனப்படுகிறது.
எதனை ஓட்டினான் என்ற கேள்விக்கு சைக்கிள் என்பது விடையாகிறது. அவ்விடையே செயப்படுபொருள் எனப்படுகிறது. அதற்குரிய விசேடணமாக அல்லது அடைமொழியாக புதிய எனும்பதம் கொள்ளப்படுகிறது.
எனவே, ஒரு கருத்தைக் கூறவரும் வாக்கியம், பயனிலையுடனோ (தோன்றா எழுவாய்), எழுவாய் பயனிலை என்பவற்றுடனோ, எழுவாய் பயனிலை செயப்படுபொருள் ஆகியவற்றுடனோ நிறைவுபெறலாம். இவற்றுக்குமப்பால், எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகியவற்றுள் ஒன்றடனோ இரண்டுடனோ அல்லது மூன்றுடனுமோ அடைமொழிகளும் இணைந்திருக்கலாம் என்பதும் பெறப்படுகிறது.
‘
கருத்துகள்
கருத்துரையிடுக