கவிதை 01

                           அரசியல்

அரசியலுக்  கென்ன  தகுதி  தேவை
அடக்க  மாகக்  கேட்டாளென்  மனைவி

இரகசியமாய்ச்  சொல்லுகிறேன்
எவர்க்கும்நீ  சொல்லிடாதே…
சம்மதமா  என்றேன்  நான்  மெதுவாய்
சம்மதமே  என்றாள்  அவள்  இதமாய்

பதவியொன்றே  அரசியலில்  குறிக்கோள்  -அதைப்
பறிகொடுத்தால்  அவர்க்குஅது  கடற்கோள்
விதவிதமாய்ப்  பொய்கள்  சொல்லி
வேண்டாத  வேலை  செய்து
எதுவரினும்  கொடுத்துஅவர்  பெறுவார்  -கதிரை
எவர்தரினும்  ஓடிச்சென்று  விழுவார்.

பசித்திருப்போர்  தனிலும்பயன்  கொள்வார்  -அவர்
பட்டினியைக்  காட்டிப்  புரட்சி  செய்வார்
பசித்தவர்கள்  பசித்திருக்க
புசித்திருப்பார்  வயிறுஉப்ப
பக்குவமாய்  மேடையேறிப்  பொழிவார்  -ஏழைப்
பட்டினியைச்  சொல்லித்தினம்  அழுவார்.

கொடிபிடிக்க  ஊரவரை  அழைப்பார்  -என்ன
கொடுமைஇது  துயர்துடைப்போம்  என்பார்
தடபுடலாயப்  படமெடுத்துத்
தன்னையேமுன் னிலைப்படுத்தி
விடியுமுன்னே  பிரசுரித்தும்  விடுவார்  -அதை
வேறுயாரோ  செய்தரென்றும்  உரைப்பார்.

மனைவியெந்தன்   மடியினிலே  விழுந்தாள்  -ஐயோ
மாபாவம்  அன்றோ  என  அழுதாள்
தினைத்துணையும்  உண்மையில்லாத்
தீயவர்கள்  சகவாசம்
உனக்குஇனி  வேண்டாமெனப்  புகன்றாள்  -அது
உலுத்தர்களின்  தொழிலாமென  நவின்றாள்.

இல்லை  அன்பே  இருக்கின்றார்கள்  நல்லோர்  -அவர்
இலைமறை  காய்  வேர்போல  நிற்பார்
தொல்லைகளில்  மக்கள்சிக்கி
சோர்ந்துபோகும்   வேளையிலே
மெல்ல  அவர்  தலையெடுப்பார்  என்றேன்  -புது
மின்னல்  ஒளி  அவள்முகத்திற்  கண்டேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5