தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5
போலி எழுத்துகள்.
சில சமயங்களில் ஓரெழுத்தக்குப் பதிலாக வேறோர் எழுத்தைப் பயன்படுத்தும்போது அது போலி எழுத்து எனப்படுகிறது.
போலிஎழுத்தும் இலக்கண வலுவுடையது என்பதால் இலக்கண நூலார் அதனை ‘வழு’ எனப் புறந்தள்ளுவதில்லை. எனினும் போலி எழுத்துகள் வலிந்து புகுத்தப்படாதிருப்பது மொழிக்கு அழகு தருமென்பதை நினைவிற் கொளல் நலம்.
போலி எழுத்துகள் சொல்லின் முதலில் இடம்பெறும்போது அது முதற்போலி எனவும், இடையில் இடம்பெறுகையில் இடைப்போலி எனவும், சொல்லினிறுதியில் வரும்போது கடைப்போலி எனவும் வழங்கப்படுகின்றன.
1. முதற்போலி
ஓளவை அவ்வை ஒள அவ் போலி
பௌத்தம் பவுத்தம் பௌ பவு போலி
நண்டு ஞண்டு ந ஞ போலி
மயல் மையல் ம மை போலி
மையம் மய்யம் மை மய் போலி
ஐயர் அய்யர் ஐ அய் போலி
நாயிறு ஞாயிறு நா ஞா போலி
பையன்கள் பசங்கள் பை ப போலி
யாமம் சாமம் யா சா போலி
2. இடைப்போலி
அரசன் அரைசன் ர ரை போலி;
ஈயல் ஈசல் ய ச போலி
நிலயம் நிலையம் ல லை போலி
வலயம் வலையம் ல லை போலி
கலயம் கலையம் ல லை போலி
3. கடைப்போலி
அறம் அறன் ம் ன் போலி
பந்தல் பந்தர் ல் ர் போலி
கலம் கலன் ம் ன் போலி
குடல் குடர் ல் ர் போலி
மதில் மதிள் ல் ள் போலி
செதில் செதிள் ல் ள் போலி
அரும்பு அரும்பர் பு அர் போலி
இன்பம் இன்பு பம் பு போலி.
இயை இசை யை சை போலி
பிசை பியை சை யை போலி
ச, ஞ, ய ஆகிய எழுத்துகளின் முன்னே இடம்பெறும் ‘அ’கரம் ‘ஐ’காரமாகவும், ஐகாரம் ‘அ’கரமாகவும் பெரும்பாலும் மாற்றமுறுகின்றன என்பது இலக்கணநூலார் கருத்து. போலி எழுத்து தோன்றுவதால் சொற்களின் இலக்கணப் பெறுமதியில் எந்த ஏற்றத்தாழ்வும் உருவாவதில்லை.
மொழிக்கு முதலாக வரும் எழுத்துகள்
.
தமிழில் எல்லா எழுத்துகளும் சொல்லின் முதலெழுத்தாக இடம்பெறுவதில்லை. இலக்கணநூலிற் குறிக்கப்பட்ட எழுத்துகளைத் தவிர வேறு எழுத்துகள் சொல்லின் முதலெழுத்தாக இடம்பெறுமாயின் நிச்சயமாக அது தமிழ்மொழிச் சொல்லன்று என உறுதியாகத் தெரிந்து கொள்ளலாம்.
எவ்வெவ் எழுத்துகள் சொற்களுக்கு முதலெழுத்தாக வருகின்றன எனப் பார்ப்போம்.
பன்னிரண்டு உயிர்எழுத்துகளும் மொழிக்கு முதலில் வருமியல்பின. அம்மா, ஆசை, இயல்பு, ஈச்சை, உறவு, ஊர்வன, எழுச்சி, ஏற்றம், ஐந்து, ஒற்றுமை, ஓசை. ஓளவியம் என அறியலாம்.
ஆய்த எழுத்தோ மெய் எழுத்தோ மொழிக்கு முதலெழுத்தாக ஒருபோதும் வரமாட்டா.
உயிர்மெய் எழுத்துகளில் க, ச, த, ந, ப, ம, வ, ய, ஞ, ங ஆகியவையும் உயிரேறிய அவற்றின் ஏனைத் தொடர்களும் மொழிக்கு முதலில் வருமியல்பின.
இவற்றுள் க, ச, த, ந, ப. ம எனவாறும் பன்னிரண்டு உயிர்களேறி மொழிக்கு முதலாக நிற்கத்தக்கவை.
கலை, காகம், கிளி, கீற்று, குயில், கூட்டம், கெடு, கேள்வி, கைலை, கொள்கை, கோயில், கௌரவம்.
சட்டி, சாரல், சிலை, சீற்றம், சுவை, சூடு, செல்வம், சேதம், சைகை, சொல், சோர்வு, சௌமியம்
தம்பி, தாரை, திக்கு, தீமை, துவை, தூக்கு, தெரு, தேடல், தையல், தொடு, தோழமை, தௌவல் (அழிவு)
நன்று, நாடு, நிலை, நீளம், நுரை, நூறு, நெகிழ்ச்சி, நேர்மை, நையாண்டி, நொச்சி, நோற்றல், நௌவி (மான்)
படை, பாடல், பிசை, பீடை, புசி, பூண்டு, பெருமை, பேறு, பையன், பொறுமை, போற்று, பௌத்தம்.
மரை, மாண்பு, மிடறு, மீசை, முதல், மூப்பு, மென்மை, மேன்மை, மையல், மொழி, மோப்பம், மௌனம்.
என்பவை இவற்றுக்கு எடுத்துக்காட்டுகளாம்.
மெய்யில் ஒளகாரம் ஏறிய உயிர்மெய் எழுத்தை முதலாகக் கொண்ட சொற்கள் அதாவது கௌ, சௌ, தௌ, நௌ, பௌ, மௌ. வெள, யௌ ஆகிய எழுத்துகளிற் தொடங்கும் பதங்களிற் பல தற்காலத்தில் வழக்கிழந்து வருகின்றன என்பதையும் ஒளகாரம் ஏறிய ஏனைய உயிர்மெய் எழுத்துகள் மொழிக்கு முதலில் வரா என்பதையும் கருத்திற் கொள்க.
‘வ’கரம் அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஒள ஆகிய எட்டு உயிர்களேறுவதாற் தோன்றும் உயிர்மெய்களை சொற்களின் முதலாகக் கொள்ளுமியல்புடையது.
வலிமை, வாட்டம், விடுதலை, வீடு, வெற்றி, வேட்டை, வையகம், வெளவால் என்பவற்றை உதாரணமாகக் கொள்ளலாம்.
‘ய’கரம் அ, ஆ, உ, ஊ, ஓ, ஒள ஆகிய ஆறு உயிர்கள் ஏறுவதால் மொழிக்கு முதலில் வருமியல்பைப் பெறுகின்றது.
உதாரணம் : யவனம், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம்.
‘ஞ’கரம் அ, ஆ, எ, ஒ ஆகிய நான்கு உயிர்களுடன் இணைந்து மொழிக்கு முதலாகி நிற்கின்றது.
அவையாவன : ஞமலி (நாய்)., ஞானம், ஞெகிழி (சிலம்பு), ஞொள்கல் (மெலிதல்).
‘ங’கரம் ‘ஙனம்’ என்ற ஒரு பதத்துக்கு மாத்திரம் முதலெழுத்தாக அமைகிறது. ‘ங்’ ‘ங’ ஆகிய இரண்டெழுத்துகள் மட்டுமே பயன்பாட்டில் இருக்கின்றபோதிலும் தமிழ் நெடுங்கணக்கில் ஏனைய எழுத்துகள் போன்று அனைத்து வரிவடிவங்களையும் அது பெற்றிருக்கிறது. இதனாற்றான் “‘ங’ப்போல் வளை.” என்று சொல்லப்பட்டிருக்கலாமோ என எண்ணத்தோன்றுகிறது.
எவ்வாறெனினும். இன்றைய வழக்கில் ‘ங’கரம் முதலெழுத்தாக வருவதில்லை. மாறாக எங்ஙனம், யாங்ஙனம் என வினா எழுத்துகளையோ, இங்ஙனம் அங்ஙனம் உங்ஙனம் எனச் சுட்டெழுத்துகளையோ முன்னிறுத்தித்தான் சொல்வடிவம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆறுமுகநாவலர் அவர்கள் தனது இலக்கணச் சுருக்கத்தில் ‘ங’கரத்தைச் சொல்லின் முதலெழுத்தாகக் குறிப்பிடவில்லை என்பதையும் கருத்திற் கொள்வது நலம்.
ர’கர, ‘ல’கர எழுத்துகள்.
தற்காலத் தமிழில் ‘ர’கர, ‘ல’கர, வரிசை மெய்யெழுத்துகளும் மொழிக்கு முதலெழுத்தாக வரும் வழக்கம் பரவலாகி வருகிறன்றது.. இவை இலக்கண அறிஞர்களால் இன்றுவரை இலக்கணச் செம்மையெனக் கொள்ளப்படாத போதிலும், தவிர்க்கவியலா வகையில் அவை மொழியில் இடம்பெறுகின்றன. எனவே அவற்றையும் அறிந்து கொள்வது மொழியறிவுக்கு ஏற்றதெனலாம்.
'ர'கரம் முதலெழுத்தாக எழுதப்படுகின்ற சொற்களுட் சில.
ரகசியம், ராகம், ரிஷி, ரீங்காரம், ருசி, ரூபம். ரெட்டை, ரேகை, ரொக்கம், ரோகம். ரௌத்திரம்.
ஆயினும் முறையே, இரகசியம், இராகம், உருசி, உருவம் அல்லது அரூபம், இரட்டை, இரேகை, உரொக்கம், உரோகம், உருத்திரம் என எழுதுவதன்மூலம் இவற்றைத் தமிழ் இலக்கணத்துள் அடக்கிவிடலாம் என்பதை மறவற்க.
‘ல’கரம் முதலெழுத்தாக எழுதப்படுகின்ற சொற்களுட் சில:
லட்சம். லாவண்யம். லிங்கம், லீலை, லேகியம், லோகம், லௌகிகம்.
இவற்றை, இலட்சம், இலாவணியம், இலிங்கம், இலீலை, இலேகியம், உலோகம், இலௌகிகம் என எழுதின் தமிழ்இலக்கண நெறிக்கு ஏற்புடைத்தாகும்.
‘ர’கர, ‘ல’கர, வரிசையில் தொடங்கும் சொற்கள் தமிழ்ச் சொற்களாக அமைவதில்லை. எனவே அ, இ, உ ஆகிய எழுத்துகளுட் பொருத்தமான எழுத்தை முதலெழுத்தாகக் கொள்வதன்மூலம் அவை தமிழிலக்கணப் பெறுமதி பெறுகின்றன எனலாம். இது ‘ட’கர வரிசைக்கும் பொருந்தும்.
மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள்.
‘எ’கரம் தவிர்ந்த உயிரெழுத்து ஓசை பதினொன்றும், ஞ், ண், ந், ம், ன். ய், ர், ல், வ், ழ் ள் ஆகிய பதினொரு மெய்யெழுத்துகளும் சொற்களின் இறுதியில் இடம்பெற வல்லன என்பர் அறிஞர்.
இதிலிருந்து வல்லெழுத்து மெய்களான க், ச், ட், த், ப், ற் ஆகிய ஆறுமெய்களும் ‘ங்’ எனும் மெல்லின மெய்யும் மொழியின் இறுதி எழுத்துகளாக வரா என்பது தெளிவு.
‘எ’கரம் தவிர்ந்த உயிர் எழுத்தொலி பதினொன்று சொற்களினிறுதியில் வருவதைப் பார்ப்போம்.
பல(அ), கடா(ஆ), விழி(இ), தீ(ஈ), படகு(உ), பூ(ஊ), எங்கே(ஏ), ஓசை(ஐ), நொ-துன்பம்(ஒ), போ(ஓ), கௌ-பற்றிப்பிடி(ஒள).
பதினொரு மெய்களும் மொழியிறுதியாகும் வகை.
உரிஞ், கண், வெரிந்(முதுகு), மனம், பொன், மெய், பார், வேல். தெவ்(பகை), பாழ். கோள்.
எனினும் இக்காலத்தில் ‘ஞ்’, ‘ந்’, ‘வ்’ ஆகிய மெய்களை இறுதியெழுத்தாகக் கொண்ட சொற்கள் பயன்பாட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிலர் காந்தம் என்ற சொல்லை ஆண்பாற்படுத்திக் காந்தன் எனவாக்கிக் காலப்போக்கில் அதைச் சுருக்கிக் காந்த் என மாற்றி இப்போது காந் எனவும் எழுதத் தலைப்பட்டுள்ளனர். இதனால் விஜயகாந்தன் என்ற பெயர் விஜயகாந்த் என மாற்றமடைந்து, இன்றைய நாட்களில் விஜயகாந் எனக் குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுமளவுக்குப் போயிருக்கிறது. ‘ந்’ என்பது ‘த’வுக்குப் பக்கத்தில் உள்ள எழுத்தென்பதால் ‘ன’கரத்திலிருந்து வேறுபடுத்தித் தந்நகரம் என்றோ ‘இந்த்’ என்றோ கூறப்படுகிறது. இந்தன்னா என உச்சரிக்கப்பட்டாலும் அதன் ஒலி ந என்ற ஓசை சார்ந்ததுதான்.. எனவே விஜயகாந் என்றோ லட்சமிகாந் என்றோ பிள்ளைகளுக்குப் பெயரிட்டால் அவை விஜயகான் என்றும் லட்சமிகான் என்றுதான் ஒலிக்கப்படுகின்றன என்பதைப் பெற்றோர் மனத்திருத்தல் அவசியம்.
அதேபோல், நாதம் என்ற சொல்லிலிருந்து நாதன் தோன்றி அது ‘நாத்’ எனச்சுருங்கிப் பிள்ளைகளுக்குப் புவிநாத் என்றும் கோபிநாத் என்றும் பெயரிடுவது தமிழ் இலக்கண மரபுக்கேற்புடைத்தன்று என்பதையும் மனதிற் கொள்க.
உதவியது நன்றி
பதிலளிநீக்குஅருமையான விடையம்
பதிலளிநீக்கு