தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 பகுதி 01


பதவியல் 1

பதம், சொல், கிளவி, மொழி என்பன ஒரே பொருளைத் தருகின்ற சொற்களாகும்.
மனிதன் ஒலிகளை இணைத்து எண்ணங்களை வெளிப்படுத்த முனைந்தபோது சொல் பிறந்தது எனலாம். ஆ, ஊ என்று பேசிய மனிதன் அவ்வொலிகளை ஒழுங்கு படுத்துவதன் மூலம் சொற்களை ஆக்கிக் கொண்டது போலவே ஒலியன்களான எழுத்துகளையும் பயன்படுத்தி சொற்களுக்கு வரிவடிவம் கொடுத்தான்.
ஒலிகளால் ஆக்கப்பட்டு ஒலியன்களால் வரிவடிவம் கொடுக்கப்பட்ட சொற்கள் தொடர்பான விளக்கங்களே பதவியல் எனப்படுகிறது.

சொற்கள் ஓரெழுத்தாலோ ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளாலோ உருவாகின்றன. 
நீ, வா, போ, கா, பா போன்றவை ஓரெழுத்தாலான சொற்களாகும். பதம், காண், மரம், வேர். நட, சிங்கம் என்பவை ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்துகளாலான சொற்களாகும்.


பதங்களை ஓசைவடிவில் பார்க்கும்போது அவற்றை ஓரசைச் சொற்கள், ஈரசைச் சொற்கள், மூவசைச் சொற்கள் எனவும் வகைப்படுத்தலாம். 

மூவசைக்கும் மேற்பட்ட சொற்கள் பொதுவாக எந்தமொழியிலும் பேச்சுவழக்கில் அதிகமாகப் பயன்படுத்தப் படுவதில்லை. அருமையாக அவை இடம்பெறக்கூடும்.

''அசையையும்" 'எழுத்தையும்' ஒன்றெனக் கொண்டு குழம்பிவிடக் கூடாது. அவை வெவ்வேறானவை. 

எழுத்து - வரிவடிவஞ் சார்ந்தது. 
அசை - ஒலிவடிவஞ் சார்ந்தது.


ஒலிவடிவத்தின் உன்னல்கள் அசைகள் எனக் கொள்ளினும் அது ஓரளவு பொருந்தும் எனலாம். அசையைச் சரியாக விளங்கிக்கொண்ட கவிஞர்கள்தாம் படிப்போர் நெஞ்சில் நிலைத்திருக்கும் கவிதைகளைத் தருகிறார்கள் என்பதை ஈண்டுரைத்தல் தகும்..
உதாரணமாக அவன் என்ற பதத்தில் மூன்றெழுத்துகள் காணப்படுகின்றன. ஆயினும், அ - வன் என இரண்டு அசைகளே காணப்படுகின்றன. இதேபோல் தம்-பி. அண்-ணன், சிங்-கம், அம்-மா, கர-டி, மா-மா, பூ-னை போன்ற சொற்களும் ஈரசைகளை உடையவையே.
உத்-தர-வு, பட்-ட-யம், ஒட்-ட-கம், செய-லா-ளர், மெய்ப்-பித்-தான் போன்றவை முன்று அசைகளைக் கொண்ட சொற்களாகும். இதேபோன்று, கெட்-டிக்-கா-ரன் போன்ற நான்கசைச் சொற்களும் வழக்கத்தில் உள்ளன.
ஆகாயவிமானம் மூன்றுக்கும் மேற்பட்ட அசைகளைக் கொண்டிருப்பதாற்றான் நாம் பேசும்போது முழுமையான சொல்லைப் பயன்படுத்தாது விமா-னம் என்ற ஈரசைச் சொல்லைப் பயன்படுத்துகிறோம். 

நண்பர்களின் பெயர் எவ்வளவு நீளமாக இருந்தாலும் அவற்றை ஓரசை, ஈரசைச் சொல்லாகக் குறுக்கி அழைக்கும் வழக்கத்தையும் இங்கு நோக்கலாம்.


நான், நீ, வா, போ, தாய், செல், நில் போன்ற சொற்கள் ஓரசையுடன் நிறைவு பெறுவதையுங் காணலாம். தமிழ்மொழியில் ஓரெழுத்துச் சொற்கள் இருப்பதுபோல, ஓரசைச் சொற்கள் ஏராளமாக இருப்பதைக் காணலாம். தமிழ்மொழியில் என்றன்றி எல்லாமொழிகளிலும் அடிக்கடி பயன்படுத்தப்படும் சொற்கள் ஓரசை அல்லது ஈரசைச் சொற்களாக அமைந்திருப்பது கண்கூடு.

எனவே, ஓரெழுத்துச் சொல்லும் ஓரசைச் சொல்லும் ஒன்றன்று என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். ஓரெழுத்துச்சொல் எப்போதும் ஓரசையாகவே இருக்கும். ஆனால் ஓரசைச் சொற்களெல்லாம் ஓரெழுத்துச் சொற்களாக இருக்கவேண்டும் என்பதில்லை. தாய், தேன், மான், பார் என்பவை ஓரசைச் சொற்கள். ஆயினும் அவை இரண்டு எழுத்துகளால் உருவாகியுள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஓரெழுத்துப்பதம்.

தமிழில் ஓரெழுத்தாலான சொற்கள் நாற்பத்திரண்டு என்பர் நன்னூலார். அவற்றுள், ஆ, ஈ, மா, மை, தே, தை, பா, பூ, பை. நீ, நோ, கா, கை, வா, வீ, வை சா ஆகிய சில சொற்களே இன்று நடைமுறையிற் காணப்படுகின்றன. ஏனையவை செய்யுள்களில் அரும்பதங்களாக வருகின்றன எனக் கொள்ளலாம்.


பதங்களின் வகை.

தமிழ்மொழியிற் பதங்கள் அனைத்தும் பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்ற நான்கு பிரிவுகளுக்குள் அடங்கிவிடுகின்றன.

1. பெயர்ச்சொற்கள்.

கண்ணன், மலை, நிலா, மாடு, வெண்மை, கருமை, வையம், மனிதன் என்பன பெயர்ச்சொல் வகைக்குள் வருகின்றன. பெயர்ச்சொல் எப்போதும் பொருட்களையோ, பண்புகளையோ, காலஞ்சார்ந்த பெயர்களையோ, நடைமுறை இயல்புகளையோ சுட்டி நிற்பனவாகின்றன.


2. வினைச்சொற்கள்.

ஆடு, சிரி. நடி, பார்த்தான், விழுந்தது என்பன் வினைச்சொற்கள் வகைக்குள் வருகின்றன. செய்கைகளை வினையடியாகவோ, ஏவல் வினையாகவோ அல்லது காலங்காட்டும் வினையாகவோ புலப்படுத்துவது வினைச்சொற்களாகும்.

3. இடைச்சொற்கள்

பெயர், வினைச் சொற்களை மட்டும் வைத்துக்கொண்டு சொல்லவந்த கருத்தைத் தெளிவுறக் கூறிவிட முடியாது. கருத்துகள் தெளிவு பெறுவதற்கேற்ற தொடர்புகளை ஏற்படுத்தித் தருகின்ற சொற்கள் இடைச்சொற்கள் எனப்படுகின்றன.

அண்ணா, தம்பி, புத்தகம், கொடு என்ற நான்கு சொற்களையும் எடுத்துக்கொண்டால், எவ்விதத் தொடர்பும் அற்ற தனிச்சொற்களாகவே அவை காணப்படுகின்றன. அவை இணைந்து பொருள்தர வேண்டுமாயின் இடைச்சொற்களின் உதவி அவசியம். அண்ணா, தம்பி—க்குப் புத்தக(ம்)—த்தைக் கொடுக்(கின்றா)(ன்) (அண்ணா தம்பிக்குப் புத்தகத்தைக் கொடுக்கின்றான்.) எனவரும்போது பொருள் தெளிவாகப் புலப்படுகிறது.


இவ்வாக்கியத்தில் வருகின்ற அண்ணா என்றபதம் தனித்தே நின்று வாக்கியத்துடன் இணைந்திருக்கிறது. எந்தத் துணையையும் சேர்த்துக் கொள்ளவில்லை. எந்த இணைப்பையும் பெறாது ஒரு பெயர்ச்சொல் வாக்கியத்தில் தனித்து நிற்பது முதலாம் வேற்றுமை வகையைச் சாரும். முதலாம் வேற்றுமை என்பது வேற்றுமையுருபு அற்ற நிலையாகும்.

தம்பிக்கு எனவரும் இரண்டாவது சொல்லில், தம்பி என்ற பதத்துடன் ‘கு’ என்ற உருபு சேர்ந்துள்ளது. ‘கு’ உருபு இணைவதற்காக ‘க்’ என்ற எழுத்தும் தோன்றுவதால் தம்பிக்கு என்பது உச்சரிப்புக்கேற்ப இயைபு பெறுகிறது. அத்துடன் புத்தகத்தைப் பெறுவன் தம்பி என்றாகிறது. இக்கருத்தைத் தருகின்ற ‘கு’எனுமுருபு நான்காம் வேற்றுமையைச் சார்ந்தது. இது ஓர் இடைச்சொல்லாகும்.


புத்தகத்தை என்ற மூன்றாம் பதத்தில் (புத்தகம்) ‘ம்’ மறைந்து ‘த்’ தோன்றி ‘ஐ’ என்ற நான்காம் வேற்றுமையுருபு சேர்கிறது. இதன்மூலம் கொடுக்கப்பட்ட பொருள் எதுவென்ற தெளிவு கிடைக்கின்றது இதுவும் இடைச்சொல் வகையைச் சார்ந்ததே.
கொடு என்ற வினைச் சொல் ‘கின்று’ சேர்வதால் நிகழ்காலங் காட்டுகிறது. அன் என்ற இறுதியைக் கொண்டு முடிவதால் ஆண்பால் காட்டுகிறது. ஒருமை, உயர்திணை என்ற விபரங்களையும் தருகிறது. இங்கே கொடு என்ற வினையடிச் சொல்லுக்குச் சிறப்புச் சேர்க்கின்ற ‘கின்று’ ‘அன்’ என்பவையும் இடைச்சொற்களே.

நானும் அவனும் என எழுதினால் இருவரையும் இணைக்க வருகின்ற ‘உம்’ கூட இடைச்சொல்லே. நான் என்ற பெயர்ச்சொல்லை நாங்கள் என மாற்றுதற்கும், விழுந்தான் என்ற வினைச்சொல்லை விழுந்தார்கள் எனப் பன்மைப்படுத்துதற்கும் துணைசெய்கின்ற ‘கள்’ விகுதியும் இடைச்சொல்லாகும்.
பெயராகவோ வினையாகவோ அல்லாமல் பெயர்ச்சொற்களோடும் வினைச்சொற்களோடும், முன்னாகவோ பின்னாகவோ, தனித்தோ பலவாகவோ இணைந்து சொல்லவந்த கருத்தைச் சிறப்பாக வெளிப்படுத்துதற்கு உதவுகின்ற சொற்களே இடைச்சொற்களாகும்.

எனவே, பன்மைவிகுதிகள், காலஇடைநிலைகள், வேற்றுமையுருபுகள், பால்விகுதிகள், நிபந்தனைச் சொற்கள் என்பவையெல்லாம் இடைச்சொற்கள் என்ற வகுதிக்குள் அடங்குகின்றன எனவுணர்க.

4. உரிச்சொற்கள்.

கழி, நனி, தவ, சால, உறு, கடி, குழ, தட, கம போன்ற சொற்களே உரிச்சொற்கள் எனப்படுகின்றன.
உரிச்சொற்கள் பெயர்ச் சொல்லுடனோ வினைச் சொல்லுடனோ இணைந்து வருகின்றன. சாலச் சிறப்பு, கழிபேருவகை, நனி சிறந்தான் போன்றவற்றை உதாரணமாகக் கொள்க. உரிச் சொற்களின் கருத்து இதுவென அறுதியிட முடியாதெனினும், தான் சார்ந்து வருமிடத்துக்கேற்ப மிக, அதிக, சிறந்த, பொருத்தமான போன்ற கருத்துகளை அவை வலிமையுடன் தருகின்றன.

பொதுவாக, உரிச்சொற்கள் பெயரோடு அல்லது வினையோடு இணைந்து வருவதல்லால் தனித்து வரமாட்டா. இவை ஒருபொருளையோ பலபொருள்களையோ உணர்த்தும் வல்லமையுடையன. அதிகமாகச் செய்யுட்களில் பயன்படுத்தப்படுவன. அதிக, மிக போன்ற சொற்களும் உரிச்சொற்களே எனக்கொள்ளவும் இடமுண்டு.


இடைச்சொற்களுக்கும், உரிச்சொற்களுக்குமிடையிலான வேறுபாடுகள்.

இடைச்சொற்கள்

1. செய்யுளிலும் உலகவழக்கிலும் வரும்
2. பெயர் வினைகளைச் சார்ந்து பொருள் தருமேயன்றித் தனித்துப் பொருள் தராது
3. பொருளெதுவுமின்றி அசைநிலையாகவும் வரும்.


உரிச்சொற்கள்

1. அதிகமாகச் செய்யுள்களிலேயே வரும்.
2. தனக்கெனப் பொருளைக் கொண்டிருக்கும்
3. பொருளோடு வருமேயன்றி அசைநிலையாக வராது.


(நன்றி.. அறிஞர் எல்.கே.அக்னிபுத்திரனின் புதிய நோக்கில் நன்னூல் காண்டிகையுரை பக்; 196, 197)

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 4

தமிழ் இலக்கணம் அறிவோம் - இயல் 02 - பகுதி 09

தமிழ் இலக்கணம் அறிவோம் எழுத்தியல்- பகுதி 5